PUBLISHED ON : ஏப் 10, 2022

'சாவி' இதழுக்கு எழுதுவதை நிறுத்திய பின், 'தினமலர் நாளிதழில், 'வாரமலர்' இதழ் ஆரம்பித்து சக்கை போடு போடுகின்றனர். அங்கு போய், அந்துமணியை சந்தியுங்கள்...' என்று வழி காட்டினார், எழுத்தாளர் ராஜேஷ்குமார்.
எந்தவித அறிமுகமும் இல்லாமல், என்னை யார் என்றே தெரியாத நிலையில், பொறுப்பாசிரியரை பார்க்க எப்படி அனுமதி கிடைக்கும் என்ற தயக்கம் இருந்தாலும், ஏதோ ஒரு வெறியில் சென்னை வந்து, 'தினமலர்' அலுவலகம் சென்றேன். அவரை, பயபக்தியுடன் சந்தித்து, எனக்கு நேர்ந்த அவமானத்தை விளக்கினேன்.
'நீங்க, வேகமா வளர்ந்து வரும் எழுத்தாளர். உங்கள் எழுத்துகளை எல்லா பத்திரிகையிலும் படிக்கிறேன். பத்திரிகை உலகில் யாருமே வந்த உடனே ஜெயித்திடல; அனைவருமே தோல்வி, அவமானம் போன்ற படிகளைக் கடந்து தான் வந்திருக்காங்க. உங்க படைப்புகளை அனுப்புங்க...' என்று, உற்சாகப்படுத்தினார்.
எதற்கும் இருக்கட்டும் என்று, கையோடு எடுத்து போயிருந்த சில கதைகளை அவரிடம் கொடுத்து, பலம் பெற்றது போல வெளியே வந்தேன். அவற்றில் சில அடுத்தடுத்த வாரங்களில் வெளியானது; சில தள்ளுபடியும் செய்யப்பட்டிருந்தன.
பொறுப்பாசிரியர் தந்த உற்சாகத்தில், பிரபலமான பல பத்திரிகைகளில், என்னுடைய, 70 சிறுகதைகள் வெளியானது. 'வாரமலர்' மற்றும் 'கதைமலர்' இதழ்களில் மட்டும், 30 இருக்கும்.
அநேகமாய் அனைத்து பிரபல பத்திரிகைகளிலும் கதை, கட்டுரை எழுதி, நான் வளர்ந்து வந்த தருணத்தில், எழுத்தாளர் ராஜேந்திரகுமார், ஆசிரியராக இருந்து வெற்றிகரமாய் நடத்தின, 'ராஜா ராணி' இதழிலும், எஸ்.வி.சேகர் ஆசிரியராக நடத்தின, 'நாரதர்' இதழிலும் வாய்ப்பளித்தனர்.
நாவல், தொடர்கதை என, அடுத்த கட்டத்திற்கு ஆசைப்பட்டபோது, ஆசிரியர் மணியன், கல்கண்டு லேனா தமிழ்வாணன், ப்ரியா கல்யாணராமன், எழுத்தாளர் ராஜேந்திரகுமார், அனுராதா ரமணன், பாக்கெட் நாவல் அசோகன் போன்றோரின் வழிகாட்டுதல், என்னை மென்மேலும் வளரச் செய்தது.
வாரமலர் இதழில், தொடர்கதை எழுத வாய்ப்பளித்தார், பொறுப்பாசிரியர். 'இனியவளே' என்ற அந்த உண்மை கதை, தீபாவளியில் ஆரம்பமானது.
அந்த தொடர் ஆரம்பிக்கப்பட்ட போது, ஆச்சரியம் மற்றும் இன்ப அதிர்ச்சியாய், நான் அதுவரை எழுதி வந்த அத்தனை பத்திரிகைகளிலும் அதற்கு முழுபக்க விளம்பரமும் கொடுத்திருந்தனர்.
அது வெறும் விளம்பரம் அல்ல, எனக்கு, என் எழுத்திற்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரம். அதன்பின், எனக்கும் ஒரு நட்சத்திர அந்தஸ்து கிடைக்க ஆரம்பித்தது. பல இதழ்களில் தொடர்கதை எழுத ஆரம்பித்தேன்.
'கல்கண்டில்' தொடர் எழுத, லேனா மூலம் வாய்ப்பு கிடைத்தது.
பிரபலங்களின் தொடர்களை வைத்து தான், 'சர்குலேஷன்' என்பதை முறியடித்து, திறமையுள்ள யாரை வேண்டுமானாலும் பிரபலமாக்க முடியும் என, 'வாரமலர்' இதழ் மூலம் நிரூபித்தவர், பொறுப்பாசிரியர்.
அதிலும், இலவச இணைப்பு தானே என, ஏனோ தானோ என்றில்லாமல், பக்கத்துக்கு பக்கம் சுவையான விஷயங்களை விதைத்து, வாசகர்களை தன்வசப்படுத்தினார், பொறுப்பாசிரியர்.
அவரிடம் நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் பல உண்டு...
எல்லாவற்றிற்கும் ஒரு கால நேரமிருக்கிறது. ஏற்றுக்கொண்ட விஷயத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும். செய்ய வேண்டியதை செய்து முடித்துவிட்டு அப்புறம், 'ரிலாக்ஸ்' பண்ணலாம்.
அடுத்தது - விஞ்ஞானம். தகவல் பரிமாற்றத்திற்கு உள்ள மார்க்கங்களை முறைப்படி பயன்படுத்த வேண்டும். முயற்சி வேண்டும், பேராசை கூடாது. பிறர் பொருள் மேல் பற்று கூடாது. நம்மிடம் உள்ளதை வைத்து தேவைகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.
அமைதி, மகிழ்ச்சி, மன திருப்தி, எளிமை, வறட்டு கவுரவமின்மை, உள்ளதை சொல், நல்லதை செய், ஆடம்பரம் தவிர், வீண் பகட்டு ஜம்பம் அகற்று. இப்படி பல பல விஷயங்களுக்கு எனக்கு வாத்தியார்.
'வாரமலர்' இதழ் மூலம் எனக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்து கிடைத்ததும், எதிர்பார்த்தபடியே பிற பிரபல இதழ்களில் எல்லாம் எழுத அழைப்பு வந்தது.
அந்த நேரம், 'தினமலர்' நாளிதழின் போட்டி பத்திரிகையில் இருந்தும் அழைப்பு வர, அந்துமணியிடம், 'அவர்களுக்கு எழுதலாமா சார்...' என்றேன், தயக்கத்துடன். உள்ளுக்குள் கொஞ்சம் உதறல்.
— தொடரும்
என். சி. மோகன்தாஸ்
