தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/தெய்வமே தேடிப் போய்...

தெய்வமே தேடிப் போய்...

தெய்வமே தேடிப் போய்...


PUBLISHED ON : டிச 18, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 18, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊர் ஊராக, கோவிலுக்கு சென்று, தெய்வங்களை, நாம் தேடுகிறோம். ஆனால், அத்தெய்வங்களோ, உத்தமமான அடியார்களை தேடி வந்து அருள் புரிகிறது.

கதரகம்மா என அழைக்கப்படும், கருங்காலி மரங்கள் அடர்ந்த காட்டின் நடுவே, முருகப்பெருமான் கோவில் ஒன்று இருந்தது.

ஒருநாள், இக்கோவிலுக்கு வந்த வேடன் ஒருவன், அப்படியே மெய் மறந்து பக்தியில் ஆழ்ந்து விட்டான். அதன்பின், காட்டில் இருந்த நறுமலர்கள், காய், கனி, கிழங்குகள் மற்றும் மாணிக்க கங்கை தீர்த்தம் என, தினந்தோறும், தனக்கு கிடைத்தவைகளைக் கொணர்ந்து, முருகனுக்கு பூஜை செய்து வந்தான்.

இவ்வாறு, நாள் தவறாமல், 50 ஆண்டுகளாக வழிபாட்டை நடத்தி வந்தான்.

ஒருநாள், பூஜை பொருட்களுடன், காட்டு வழியாக, வந்து கொண்டிருந்தான் வேடன். அப்போது, சிங்கம் ஒன்று, அவனை வழி மறித்தது. வேட்டையாடும் சமயமாக இருந்தால், ஒரே அம்பில் சிங்கத்தை கொன்றிருப்பான். ஆனால், இப்போது, பூஜைக்கு செல்வதால், பதுங்கினான்.

சிங்கமோ, அவனை வழி மறித்து, 'எங்கே தப்ப பார்க்கிறாய்... விலங்கினங்களான எங்களை, எவ்வளவு மூர்க்கமாக வேட்டையாடினாய்... இப்போது, நான் உன்னை கொன்று, தின்று, என் பசியை தீர்த்துக்கொள்ள போகிறேன்...' என்று கூறி, அவனை, தன் முன்னங் கால்களால், பிடித்து நிறுத்தியது.

அச்சமயம், கோவிலிலிருந்து மணியோசை ஒலித்தது.

'சிங்கமே... கோவில் மணியோசையை கேட்டாயா... அங்கே எழுந்தருளியிருக்கும், முருகப்பெருமானை வழிபடுவதற்காக, செல்கிறேன். இப்பூஜைப் பொருட்களை, கந்தன் திருவடிகளில் சமர்ப்பணம் செய்து, வழிபாட்டை முடித்து வருகிறேன். அதன்பின், என்னை உணவாக்கி கொள். வாக்கு தவறமாட்டேன்; இது சத்தியம்...' என வேண்டினான்.

'சரி... சென்று வா; ஆனால், என்னிடமிருந்து தப்பிக்கலாம் என நினைக்காதே...' என்று, அனுமதித்தது, சிங்கம்.

கோவிலுக்கு சென்ற வேடன், பூஜையில் ஆழ்ந்தவன், நெடு நேரத்திற்கு பின்பே, தன்னிலை மீண்டான்.

உடனே, 'சிங்கம் பசியோடு காத்திருக்குமே...' என்று, பரபரப்பாக ஓடி வந்தான்.

'சிங்கமே... தாமதத்திற்கு மன்னித்து விடு; இப்போது, என்னை, உணவாக ஏற்றுக் கொள்...' என்று, கண்களை மூடி, கந்தப் பெருமானை தியானித்தான். அப்போது, அவனை, தன் முன்னங்கால்களால் தடவியது சிங்கம். கண்களை திறந்து பார்த்தான் வேடன்.

அங்கே... கந்தப்பெருமான் காட்சியளித்தார். 'வடிவேலா, நீயா... எனக்கு இவ்வாறு அருள்புரிந்தாய்...' என கைகூப்பி கண்ணீர் மல்க தொழுது நின்ற வேடனுக்கு, அருள் புரிந்தார், முருகபெருமான்.

வன முறை வேடன் அருளிய பூஜை மகிழ் கதிர்காமம் உடையோனே... என, இத்தல முருகனை துதிக்கிறார், அருணகிரிநாதர். ஆம்... அத்திருத்தலம் கதிர்காமம். கந்தனை வழிபடுவோம்; கவலைகள் ஓடிவிடும்!

பி.என்.பரசுராமன்

திருவாசகம்!

உருகிப்பெருகி உளங்குளிர

முகந்து கொண்டு

பருகற்கு இனிய பரங்

கருணைத் தடங்கடலை

மருவித் திகழ் தென்னன் வார்

கழலே நினைந்து அடியோம்

திருவைப்பரவி நாம்

தெள்ளேணம் கொட்டாமோ!

விளக்கம்: உள்ளம் உருகி, உடல் பூரித்து, நெஞ்சம் குளிரும் படியாக, முகந்து, பருகுவதற்கு இனிமையான பெருங் கருணைக்கடல் போன்ற சிவபெருமானை அடைந்து, அவ்விறைவனின், அழகு - வீரம் மிகுந்த, திருவடிகளை துதிப்போம். உண்மையான செல்வம் இதுவே; அருளிய சிவ பெருமானைப் பாடி, நாம் விளையாடுவோமாக!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us