தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/தெய்வம் வழி காட்டும்!

தெய்வம் வழி காட்டும்!

தெய்வம் வழி காட்டும்!


PUBLISHED ON : ஜன 06, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 06, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம் பலவீனம், எதிராளிக்குத் தெரியக் கூடாது; எதிராளியின் பலவீனம், கண்டிப்பாக நமக்குத் தெரிய வேண்டும். அங்காரகாசுரன் என்பவன், பனிமலைச் சாரலில் பிரம்ம தேவரை நோக்கி கடுந்தவம் செய்தான். தவம் பல காலம் நீடித்தது. மழை, வெயில், காற்று, கடும்புயல் என, அனைத்தையும் தாங்கி தவம் செய்தான். யாராக இருந்தால் என்ன... உழைப்பிற்கேற்ற ஊதியத்தைத் தந்துதானே ஆக வேண்டும்... அசுரனின் தவம், அவன் முன், அன்ன வாகனரை நிறுத்தியது. 'அசுரர் தலைவா... உன் தவம் நன்று, நன்று... வேண்டியதைக் கேள்...' என்றார், பிரம்மதேவர். எழுந்து கைகளைக் கூப்பிய அசுரன், 'சிருஷ்டி கர்த்தாவே... என் உடல் முழுதும் வஜ்ஜிர மயமாக மாறிவிட வேண்டும். எந்த தெய்வ படைக்கலங்களும், என் உடம்பைப் பிளக்கக் கூடாது. நான் வேண்டும் வரம் இதுவே...' என்றான்.'உன் விருப்பம் நிறை வேறும். உடல் முழுதும் வஜ்ஜிரமாகவே மாறும். ஆனால், இடது கையின் உள்ளங்கைப் பகுதி மட்டும், எப்போதும் போல் சாதாரணமாகவே இருந்து வரும். அந்த இடம் தான், உன் உயிர்நிலை இருக்கும் இடம். அதை பத்திரமாக காப்பாற்றுவதில், கவனமாக இரு...' என்ற பிரம்மதேவர், அசுரனின் பார்வையில் இருந்து மறைந்தார்.அசுரனின் உடம்பு, வஜ்ஜிரமாக மாறியது. பிறகென்ன, 'வரம் பெற்ற என்னை, இனிமேல் யாரும் எதுவும் செய்ய முடியாது...' என்ற ஆணவம் ஏற்பட்டது. அசுரனை எதிர்த்து யாராலும், செயல்பட முடியவில்லை. தேவாதி தேவர்கள் கூட, அவன் பேரைக் கேட்டதும், நடுங்கினர். அசுரனின் அட்டூழியங்கள் எல்லை மீறின. அந்த நேரத்தில், உஜ்ஜயினி அரசராக இருந்த சண்டமகாசேனன் என்பவர், தீவிரமாய் யோசித்தார். 'இந்த அசுரன் உடம்பில் பலவிதமாய் தாக்குதல் நடத்தியும், இவன் இறக்கவில்லை. இதில் ஏதோ, சூட்சுமம் இருக்க வேண்டும்...' என, நினைத்தவர், திடீரெனத் துள்ளிக் குதித்தார்.'நாம் அறிந்த வரை, இந்த அசுரனின் உடம்பில் அம்புகள் பாயாத இடம், இடது கை உள்ளங்கைப் பகுதி தான். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில், அசுரனின் இடது கை - உள்ளங்கையில் அம்புகளை ஏவிப்பார்த்து விட வேண்டும்...' என்று முடிவு செய்தார், உஜ்ஜயினி அரசர். ஒரு சமயம், வலது கையில் ஜப மாலையைப் பிடித்தபடி, நிஷ்டையில் உட்கார்ந்தான், அசுரன்.அத்தகவலை அறிந்தார், உஜ்ஜயினி அரசர். 'அட... நாம் நல்லதில் இறங்கினால், தெய்வமே அதற்கு வழி காட்டுகிறதே...' என்றபடி, அசுரனிடம் போனார்; 'வா போருக்கு...' என்று அறைகூவல் விடுத்தார். பார்த்தான் அசுரன்; வலது கையில் ஜப மாலையைப் பிடித்திருந்ததால், இடது கையைத் துாக்கி, 'சற்று பொறு...' என்று சைகை செய்தான். ஏற்கனவே வில்லில் அம்பைப் பூட்டித் தயார் நிலையில் வைத்திருந்த உஜ்ஜயினி அரசர், இது தான் சமயம் என்று, அம்பை ஏவினார். அது, காற்றைவிட வேகமாக போய், அசுரனின் இடது கை- உள்ளங்கையில் பாய்ந்து ஊடுருவியது. இறந்து விழுந்தான், அசுரன். 'அனைவருக்கும் தீங்கு புரிந்து வந்த வனை அழிக்கும் பாக்கியத்தை எனக்கு அளித்த தெய்வமே, உனக்கு நன்றி...' என்றார், உஜ்ஜயினி அரசர். நமக்குப் பலத்தை அருளும் தெய்வம், நாம் நல்ல முறையில் நடந்தால், பகைவரின் பலவீனத்தையும் உணர்த்தி அருளும்.- பி.என்.பரசுராமன்

ஆலய அதிசயங்கள்!மதுரை மீனாட்சியம்மன் கோவிலில், 14 கோபுரங்கள் உள்ளன. வேறு எந்த கோவிலிலும் இவ்வளவு அதிகமான கோபுரங்கள் இல்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us