தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பசுமை நிறைந்த நினைவுகளே!... (68)

பசுமை நிறைந்த நினைவுகளே!... (68)

பசுமை நிறைந்த நினைவுகளே!... (68)


PUBLISHED ON : டிச 21, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 21, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒவ்வொரு வருட குற்றால டூர் முடிந்ததும், குற்றாலத்தில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே மதுரை ரயில் நிலையத்திற்கு வந்துவிட வேண்டும் என்று நினைப் போம்.

காரணம், டென்ஷன் இல்லாமல் லக்கேஜ்களை எடுத்துச் செல்லவும், அனைவரிடமும் கூடுதலாக இரண்டு வார்த்தை பேசியபடி பிரியாவிடை பெறலாம் என்பதற்காக!

ஆனால், எப்படி வேகமாக வந்தாலும் பல்வேறு காரணங்களால் ரயில் புறப்படுவதற்கு பத்து நிமிடத்திற்கு முன்தான் ரயில் நிலையத்திற்குள் நுழைவது போல அமைந்துவிடும்.

பிளாட்பாரத்தில் நிற்கும் ரயிலுக்கு கிரீன் சிக்னல் விழுந்தபோது கூட, ரயிலில் ஏறி பயணம் தொடர்ந்திருக்கிறதே தவிர, ஒரு வருடம் கூட வாசகர்கள் ரயிலை தவற விட்டது இல்லை.

இந்நிலையில், 2005ம் ஆண்டு வாசகர்கள், லக்கேஜ்களுடன் மதுரை ரயில் நிலைய பிளாட்பாரத்தினுள் நுழைந்த போது, அங்கே நிற்க வேண்டிய ரயிலை காணோம் என்று கடந்த வாரம் எழுதியிருந்தேன்.

'என்ன அதிர்ச்சியாகிட்டீங்களா? பதற்றமில்லாமல் வாங்க. இன்னும் ரயில் வரல; இருபது நிமிடம் தாமதமாம்...' என்று சொன்னபடி வரவேற்றார் அந்துமணி.

தான் யார் என்பதை காட்டிக்கொள்ளாமலேயே, ஆண்டுதோறும் வாசகர்களை வழியனுப்பி வைப்பதை வழக்கமாக வைத்திருந்த அந்துமணி, அந்த ஆண்டு வாசகர்களை வழியனுப்ப முன்கூட்டியே வந்ததால், நிலையத்தின் நிலவரத்தை தெரிந்து கொண்டு வாசகர்களின் கலவரத்தை தணித்தார்.

வழக்கமாக தன்னை யார் என்று சொல்லாமலே வாசகர்களுடன் கலந்து பழகுபவர் அந்துமணி. 'இவர் யாரு, இவரது பேர் என்ன, நம் கூடவே இருக்காரே... ஒருவேளை இவர்தான் அந்துமணியாக இருப்பாரோ...' என்ற சந்தேகத்துடன் ஒவ்வொரு ஆண்டும், வாசகர் இவரை அணுகுவது உண்டு. இதனால், 2006ம் ஆண்டு, அறிமுக விழாவிலேயே சென்னை தினமலர் அலுவலகத்தில் இருந்து தன்னை அனுப்பி இருப்பதாக அறிமுகம் செய்து கொண்டார் அந்துமணி. இதன் காரணமாக, அவர், 'தினமலர்' நிறுவனத்தின் ஒரு உயரதிகாரி என்ற நோக்கில், வாசகர்கள் சர்குலேஷனில் துவங்கி, 'வாரமலர்' இதழின் கேள்வி - பதில் வரை பல விஷயங்களை கேட்டுத்தெளிவு பெற்றனர்.

குண்டாறு அணைக்கு வாசகர்களோடு போயிருந்த போது, தண்ணீர் நிரம்பி வழிந்தோடி சென்று கொண்டிருந்தது. அதில், சிறு சிறு கற்களைப் போட்டு விளையாடிக்கொண்டு இருந்தார் அந்துமணி.

வாசகர்கள் அனைவரும் அவரைச் சூழ்ந்து, 'தண்ணியில என்ன சார் போட்டு விளையாடுறீங்க?' என்று கேட்டனர். 'ஏதாவது வேண்டிக்கிட்டு, இந்த அணையில காசு போட்டா, அந்தக் காரியம் நிறைவேறும். அதான் வேண்டிக்கிட்டு காசு போட்டேன்...' என்று சிரிக்காமல், வேடிக்கையாக சொன்னார்.

அதை, சீரியசாக எடுத்துக்கொண்ட வாசகர்கள், ஆளாளுக்கு காசுகளை எடுத்து அணையில் போட ஆரம்பித்தனர். சில வாசகிகளுக்கு நிறைய வேண்டுதல்கள் போலும்... கணவரின் பர்சில் இருந்த சில்லரை காசுகள் அனைத்தையும் எடுத்து, பயபக்தியுடன் வேண்டி, தண்ணீரில் போட்டனர்.

'எல்லாரும் காசு போட்டு, நல்லா வேண்டிக்கிட்டாச்சா...' என்று கேட்ட அந்துமணி, 'இப்படி யார் எது சொன்னாலும், ஏன், எதுக்குன்னு கேட்காம எதையுமே செய்யக்கூடாது. இந்த அணையில் அப்படி எந்த ஐதீகமும் கிடையாது. நான் சும்மா கல்லை போட்டு விளையாடிட்டு இருந்தேன்; நீங்க கேட்டதால, ஒரு வேடிக்கைக்காக சொன்னேன். உடனே, நீங்க எதையும் யோசிக்காம உங்க காசை தண்ணியில போட ஆரம்பிச்சுட்டீங்களே... இனிமேல் இப்படி செய்யாதீங்க. எதையும் அறிவால், ஆராய்ந்து செய்யணும்; அதிலும், அந்துமணி வாசகர்களான நீங்கள், நிறைய புத்திசாலித்தனத்தோடு செயல்படணும்...' என்றார்.

அவரது வார்த்தையை கைதட்டி வரவேற்றவர்கள், 'அந்துமணி' என்ற வார்த்தையை கேட்டதும், 'நல்லவேளை ஞாபகப்படுத்தினீங்க... அந்துமணிய பாக்கணும், அவரோடு பேசணும், கூட நின்னு போட்டோ எடுத்துக்கணும்ன்னு தான், நாங்க ரொம்ப ஆர்வமாக வந்தோம். ஆனால், ஆள் யாருன்னே தெரியலை. மெட்ராஸ் ஆபிசர் நீங்களாவது ஏற்பாடு செய்யக்கூடாதா?' என்று கோரிக்கை வைத்தனர்.

'அவ்வளவுதானே... நாளைக்கு ஏற்பாடு செஞ்சுடேறேன், கவலைப்படாதீங்க...' என்று சொல்லி விட்டார். மறுநாள் காலை முதலே வாசகர்களிடம் அந்துமணியை காணப்போகும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

'முதல்ல குரூப் போட்டோ எடுத்துக்குவோம்; எல்லாரும் ஒண்ணா நில்லுங்க...' என்று சொன்னதும், ஆளாளுக்கு பலத்த ஆர்வத்துடன் வந்து நின்றனர். 'எல்லாரும் வந்தாச்சா... சரி... அந்த அந்துமணிய கொண்டு வாங்கப்பா...' என்று குரல் கொடுத்தார் அந்துமணி.

'என்னது! அந்துமணிய கொண்டு வாங்கப்பாவா...' என்று உரத்த குரலில் கூறி, அனைவரும் திரும்பிப்பார்த்த போது, பேராசிரியர் கண்ணன் ஆளுயர அந்துமணி, 'கட்-அவுட்'டை தூக்கியபடி அன்ன நடை நடந்து வந்து, வாசகர்கள் மத்தியில் வைத்து, தானும் அவர்களுடன் நின்று, 'எல்லாரும் சிரிங்க... இப்ப அந்துமணியோட நாம போட்டோ எடுத்துக்க போறோம்...' என்றதும், வாசகர்கள், 'இப்படி பண்ணிட்டீங்களே...' என்று பொய்க் கோபம் காட்டினர்.

ஆனால், அந்த ஆண்டு டூர் பற்றிய கட்டுரையில் இடம் பெற்றிருந்த புகைப்படங்களை பார்த்த வாசகர்களுக்கு, அந்த பொய் கோபம் குறைந்திருக்கும். காரணம் பா.கே.ப., பகுதியில் குண்டாறு அணையில் அனைத்து வாசகர்கள் மத்தியில் வகுப்பு எடுக்கும் போது எடுத்த படம் வெளியாகியிருந்தது. ஆக, அந்துமணியோடு படம் எடுத்துக்கொள்ளும் ஆசை நிறைவேறி விட்டது.

ஆண்டுக்கு, ஒரு புதுமை செய்ய வேண்டும் என்பதற்காக, 2007ம் ஆண்டு மும்பையில் இருந்து ஒருவரை வரவழைத்திருந்தார் அந்துமணி. அவர் யார் என்பதை அடுத்த வாரம் சொல்கிறேன்.

அருவி கொட்டும்.

குற்றாலமும், பழந்தமிழ் எழுத்துகளும்...

குற்றாலம் மெயினருவிக்கு மேலே உள்ள செண்பகா அருவியை தாண்டி, சிரமப்பட்டு போனால் தேனருவி வரும். இந்த அருவிக்கு பக்கத்தில், சன்னியாசிபுடவு என்ற குகை உள்ளது. இந்த குகையினுள் உள்ள கல்வெட்டில் காணப்படும் எழுத்துகள், மூலப்பிராமி எழுத்துகள் என்று சொல்லப்பட்டாலும், இன்னமும் கல்வெட்டு ஆய்வாளர்களால் உறுதி செய்யப்படவில்லை.

கி.மு., மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்தது போல தெரிந்தாலும், அதே நூற்றாண்டைச் சேர்ந்த மாங்குளம் கல்வெட்டு எழுத்துகளுடன் இது பொருந்தாததால், இந்த எழுத்து, அதற்கு முந்திய காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.

இவை, சித்திர எழுத்துகள் அல்லது மூதமிழி எழுத்துகளாகவும் இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

இவை பாதுகாக்கப்பட வேண்டும்; சரியானவர்களால் படிக்கப்பட்டு அர்த்தம் உணரப்பட வேண்டும் என்ற ஆதங்கம் ஒரு பக்கம் இருந்தாலும், இது குற்றாலத்தின் பழமையை காட்டுகிறது என்பதே நமக்கு மிகுந்த பெருமை.

-எல்.முருகராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us