PUBLISHED ON : டிச 21, 2014

அன்புள்ள அம்மாவிற்கு,
என் வயது, 33; பி.ஏ., படித்துள்ளேன். ஆயினும், சமையற்கலை மீதுள்ள ஆர்வத்தால், சமையல் கற்று, ஒரு ரெஸ்டாரன்டில் சமையல் கலைஞராகப் பணியாற்றி வருகிறேன், எனக்கு திருமணமாகி, 10 ஆண்டுகள் ஆகின்றன. என் மனைவியின் வயது, 28. பெற்றோரின் எதிர்ப்பை மீறி, காதல் திருமணம் செய்து கொண்டோம். எட்டு வயதிலும், ஆறு வயதிலும் இரு மகன்கள் உள்ளனர்.
திருமணம் ஆகி, இரண்டு குழந்தைகள் பிறக்கும் வரை, என் மனைவி நன்றாகத்தான் இருந்தாள். குழந்தைகள் பிறக்கவும், தேவைகள் அதிகரித்ததால், வேலைநிமித்தமாக வெளியூர் செல்ல நேரிட்டது. நான் வெளியூரில் வேலை செய்து கொண்டிருக்கும்போது, என் மனைவிக்கும், இன்னொருவருக்கும் தொடர்பு ஏற்பட்டு, இருவரும், எல்லைமீறி இருந்ததை, என் மனைவியுடன் பழகியவர் மொபைல் போனில் படம்பிடித்து, இணையதளத்தில் போட்டு விட்டார். இதைப்பார்த்த என் நண்பர் ஒருவர் என்னிடம் கூறினார். நான், என் மனைவியை கண்டித்து கேட்டபோது, அது தான் இல்லையென்றும், அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் சாதித்து விட்டாள். ஆனாலும், என் மனைவியின் செயல்பாடுகள் எனக்கு நன்றாக தெரியுமாதலால், அவள் சொன்னதை நம்பாமல், அவளைப் பிரிந்து விட்டேன்.
என் மனைவியைப் பிரிந்து ஆறுமாதம் கழித்து, என் நண்பரை சந்திக்க நேரிட்டது. குழந்தைகள் மிகவும் மோசமாக இருப்பதாக, அவர் கூறியதைக்கேட்டு, என் மனைவியை அழைத்து கண்டித்து, 'இனி ஒழுங்காக இரு' என அறிவுறுத்தி, என்னோடு சேர்த்துக் கொண்டேன். எனக்கு குடிப்பழக்கம் உள்ளது; பார்ப்பதற்கும் சுமாராகத்தான் இருப்பேன். எட்டு மாதம் நன்றாகத் தான் இருந்தாள். பின், அவளின் உடன்பிறந்த அக்கா கணவருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டாள்.
இதை, அவர் அக்கா கண்டுபிடித்து என்னிடம் சொன்னார். இதுபற்றி மனைவியிடம் கேட்டபோது, 'நான் அப்படித்தான் இருப்பேன். இருக்க இஷ்டமென்றால் இரு; இல்லையானால் போய்விடு...' என்கிறாள். 'நான் போய் விட்டால் எப்படி பிழைப்பாய், குழந்தைகளை ஆளாக்குவாய்...' என்று கேட்டால், 'இப்போது கூட ஒருவர் கூப்பிடுகிறார்; நன்றாக, வைத்துக் கொள்வதாக கூறுகிறார். அதனால் என்னைப்பற்றிக் கவலைப்படாதே...' என்கிறாள்.
நான் இப்போது, குடிப்பழக்கத்தைக் கூட விட்டுவிட்டேன். ஆனாலும், அவளுடன் வாழ எனக்கு தகுதியில்லையாம்; அசிங்கமாக இருக்கிறேனாம். அவளுக்கு அழகான துணையுடன் ஆடம்பரமாக வாழ வேண்டுமாம். அதனால், என்னை விலகிக் கொள்ளச் சொல்கிறாள்; என் பிள்ளைகளையும், என்னிடம் கொடுக்க மாட்டேன் என்கிறாள்.
எவ்வளவு பொறுமையாக பேசினாலும், என்னைக் கேவலமாக பேசுகிறாள். இதையெல்லாம் கேட்டு, என் பெரிய மகன் கூட என்னை மதிப்பதில்லை. என் மாமியாரிடம் இதையெல்லாம் கூறி, கண்டிக்கும்படி சொன்னால்... 'என் மகள் ஊரில் இல்லாத தப்பையா செய்துட்டாள்... அவ ஆசைப்படுறதில என்ன தப்பு...' என்கிறார். என் மனைவியோ ஒருபடி மேலேபோய், 'காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன்...' என்கிறாள்.
இது எதுவும், என் பெற்றோருக்கு தெரியாது; தெரிந்தால் என்னை கொல்லவும் தயங்க மாட்டார்கள். என் தங்கைக்கு மட்டும் விஷயம் தெரிந்து, 'நீ வாழறதைக் காட்டிலும் செத்துவிடு...' என்கிறார். என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆறுமாதமாகக் குழம்பி, சிந்தித்து இதை எழுதுகிறேன். என் மகன்களை வளர்த்து ஆளாக்க வேண்டும். இந்தக் கடிதத்தை நிராகரிக்காமல், எனக்கு ஆலோசனை வழங்க வேண்டுகிறேன்.
உங்கள் ஆலோசனை பெற காத்திருக்கும் மகன்.
அன்பு மகனுக்கு,
உன்னுடைய மனைவி குற்றங்களையும், தவறுகளையும் பொழுதுபோக்காய் செய்பவளாய் தெரிகிறாள்.
'வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவனவள் தன் சொந்த புருஷனையும் உடையவர்களாயிருக்க வேண்டும். புருஷன், தன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையை செய்யக்கடவன்; அப்படியே மனைவியும், தன் கணவனுக்கு செய்யக்கடவள். மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி; அப்படியே புருஷனும், தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி'
என்கிறது பரிசுத்த வேதாகமம். இதை, உன் மனைவி உணர்ந்து நடக்கவில்லை.
உன்னுடைய கூற்றின்படி, உன் மனைவியின் கெட்ட குணங்கள், அவளது தாயிடமிருந்து வந்திருக்கக்கூடும் என, நம்புகிறேன்.
தொடர்ந்து, அவளோடு நீ வாழ்வது அர்த்தமில்லாதது என, எனக்கு படுகிறது. 'நீ மனைவியோடே கட்டப்பட்டிருந்தால் அவிழ்க்கப்பட வகை தேடாதே' - என்கிறது பரிசுத்த வேதாகமம். ஆனால், உன் மனைவி, உன் கழுத்தில் சுருக்காக கட்டப்பட்டிருக்கிறாள். தொடர்ந்து அவளுடன் வாழ்ந்தால், சுருக்கு இறுகி மரணம் சம்பவிக்கும்.
புத்திசாலி பல முறை ஏமாற மாட்டான். இணையதளத்தில் மனைவியின் ஆபாச வீடியோ காட்சி வந்தும், அவளை பெரிய மனதுடன் மன்னித்திருக்கிறாய். ஆனால், அவளோ திருந்தாது உன் முதுகில் ஏறி, குதிரை சவாரி செய்திருக்கிறாள்; தன்னுடைய குற்றங்களுக்கு நியாயம் கற்பிக்கிறாள்.
அவளை ஒதுக்கி வைத்தால் கூட, அவள் பின்னாளில் வந்து தொந்தரவு தருவாள். அவளை சட்டரீதியாக விவாகரத்து செய்து விடு. குழந்தைகள் யாருடன் போக வேண்டும் என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கட்டும்.
முழு மருத்துவ பரிசோதனை செய்து கொள். தளைகளை அறுத்து சுதந்திரம் பெறு. விரும்பியதை சாப்பிடு. உடலுக்கு பொருத்தமான ஆடைகளை அணி. இந்தியாவின் பிரதான சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா போ. விவாகரத்து ஆன, குழந்தைகள் இல்லாத புதுத்துணையை மறுமணம் செய்து கொள்.
வேசிக்கள்ளரையும், விபசாரக்கள்ளரையும் தேவன் நியாயம் தீர்ப்பார் என நம்பு
மகனே!
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.
