தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/வெயிலை வெறுப்பதா?

வெயிலை வெறுப்பதா?

வெயிலை வெறுப்பதா?


PUBLISHED ON : ஜூன் 28, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 28, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மழை பெய்தால் அது, சனியன் பிடிச்ச மழை; வெயிலடித்தால் அது, கருமாந்திரம் பிடிச்ச வெயில்!

மக்கள், இப்படி இயற்கையை திட்டுவதைப் பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது.

வர வர 'நம் உடல் ஏகமாய் வசதிகளை கேட்க ஆரம்பித்து விட்டது. பலர், குளிர் சாதனங்களுக்கும், மின் விசிறிகளுக்கும் பழகி விட்டனர். இதற்கு மாறான வெப்பநிலை அமையும் போது, அதை ஏகமாய் நொந்து, மனம் சலித்துக் கொள்கின்றனர். அப்போது யாராவது ஏதாவது கேட்டு விட்டால், சூடாகப் பேசுகின்றனர்; குதியாய் குதிக்கின்றனர்; 'வேலையே ஓடவில்லை...' என்று சொல்லி இயக்கமற்றுப் போகின்றனர்.

ஆனால், 'நம் மனதிற்குள் ஒரு, ஏ.சி., சுவிட்ச் இருக்கிறது' என்று சொன்னால், நம்ப மறுக்கின்றனர். ஆனாலும், அதுதான் உண்மை.

வானொலி அறிவிப்பில், வழக்கத்தை விட ஒரு டிகிரி கூடுதல், இரண்டு டிகிரி கூடுதல் என்பர். ஆனால், நமக்கோ தகிக்கிறது. பருவ நிலைக்கு நாம் பழகாத வரை, வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொள்கிறோம் என்பதே இதன் பொருள்.

வெயில் காலமா... பருத்தி உடைக்கு மாறுவது போல், மனதையும் மாற்றி, 'இனி, வெயில் கடுமையாக இருக்கும்; அதற்கேற்ப, நாம் தயாராக வேண்டும்; உச்சிவேளையில் வெளி வேலைகளை தவிர்க்க வேண்டும். மின்சாரம் தடைப்படும் போதும், ஓடுவதற்கான மின் விசிறி ஏற்பாடு செய்ய வேண்டும்.

'உடல்நலத்திற்கு ஏற்ற பானங்களை அடிக்கடி பருக வேண்டும். பார்வைபடும் தூரத்தில் மட்டுமல்ல, கைக்கெட்டும் தூரத்தில் நீர் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அத்துடன், வியர்வையை துடைக்க, துண்டும் அருகில் இருக்க வேண்டும்...' என்று, வெயிலை வரவேற்க தயாராக வேண்டும்.

செப்டம்பர் வரை இந்தியாவில் சற்று கடினமான கால கட்டம் தான். இதை, நாம் மனதளவில் ஏற்கவும், ஜீரணிக்கவும் தயாராக வேண்டும்.

பருவநிலை தன் கடமையை செவ்வனே செய்கிறது - சில நேரங்களில் தாறுமாறாகவும், இதை நொந்து கொள்வதில் பயன் ஏதும் உண்டா? மாறாக, இது நம்மை நாமே வருத்திக் கொள்ளும் விஷயம் தானே!

குண்டூசியை எடுத்து, நம் உடலை நாமே குத்திக் கொள்வோமா... பின், பருவ நிலையை நொந்து பேசி, நம் மனதை தேவையற்ற எண்ணம் என்கிற குண்டூசியால் குத்தி துன்பப்படுவானேன்!

வெயிலின் அருமையை வெள்ளைக்காரர்களிடம் கேளுங்கள்; அப்படி ஏங்குவர். குறைந்தபட்ச உடையோடு வலம் வருவர்; கடற்கரைக்கு சென்று எண்ணெய் பூசி படுத்துக் கொள்வர்; தன் தோல் சற்றேனும் கறுப்பாக ஆகாதா என ஏங்குவர்.

நமக்கே கூட வானம் மப்பும், மந்தாரமுமாக மூன்று நாள் இருந்தால், சூரியன் தலை காட்ட மாட்டானா என்று ஏங்குவோம்.

இவ்வளவு ஏன்... சூரியனை, பனி தேசத்து எஸ்கிமோவைப் போல் நாம் நேசிக்க வேண்டும்.

இயற்கை எனும் கொடை மற்றும் கொடுமையின் முன், நாம் வெறும் பார்வையாளர்களே!

எனவே, அதன் திருவிளையாடல்களை ஏற்கவும், ரசிக்கவும் கற்றுக் கொள்வதை தவிர, மாற்று இல்லை. அதனால், வெயிலை நேசிப்போம்!

லேனா தமிழ்வாணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us