PUBLISHED ON : ஜன 08, 2023

பொங்கலில் சொர்க்க வாசல்!
வைகுண்ட ஏகாதசியன்று, பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு நடைபெறும். ஆனால், கர்நாடக மாநிலம், ஸ்ரீரங்கப் பட்டினத்தில் உள்ள ரங்கநாதர் கோவிலில், மகர சங்கராந்தி அன்று தான், சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது
* நவ திருப்பதிகளில் முதல் தலம் ஸ்ரீவைகுண்டம். இந்த கோவிலில் இறைவன் கண்ணபிரானுக்கு பொங்கலன்று, 108 போர்வைகள் போர்த்தி அலங்கரிப்பர். பெருமாள், கொடி மரத்தை வலம் வந்த பின், ஒவ்வொரு போர்வையாக அகற்றி, அலங்காரத்தை கலைப்பர்
* திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு, தை பொங்கல் அன்று, 5008 கரும்புகளை கொண்டு அலங்காரம் செய்வர்
* இமாச்சலத்தில் உள்ள காக்ராவஜ்ரேஸ்வரி கோவிலில், அம்மனுக்கு, சங்கராந்தி அன்று மருந்து வழிபாடு செய்வர். அம்மன், அரக்கனுடன் போரிட்டு, அவனை அழித்தபோது ஏற்பட்ட காயத்துக்கு மருந்திட்டு ஆற்றிக் கொண்டதன் நினைவாக, இதை, பொங்கல் தினத்தில் செய்து வழிபடுகின்றனர்
* கர்நாடக மாநிலம், சிக்மகளூர் அருகில், தர்ம சாஸ்தா திருத்தலம் உள்ளது. இதன் அருகே அண்ணப்ப சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. பொங்கல் தினத்தன்று மட்டும் தான் இந்த கோவில் திறந்திருக்கும். அன்று கோவில் திறக்கப்பட்டு, பூஜைகள் செய்யப்படுகின்றன. ஆண்கள் மட்டுமே வழிபடும் கோவில் இது.
