தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அடையாளம்!

அடையாளம்!

அடையாளம்!


PUBLISHED ON : ஜன 09, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 09, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாப்பிள்ளை வீட்டாரிடமிருந்து போன். மகிழ்ச்சி கலந்த பதட்டத்துடன் எடுத்தாள், ஸ்ரேயாவின் அம்மா வானதி.

''நாங்க சரியா, 4:00 மணிக்கு வருவோம். எங்களுக்கு டீ சாப்பிடற பழக்கமில்ல. ஒன்லி லெமன் டீ; ஸ்வீட், காரம் வேண்டாம். பிஸ்கட் மட்டும் போதும். அதுவும் மேரி பிஸ்கட்டா இருந்தா நல்லது. ஏற்கனவே பொண்ணு போட்டோவ பார்த்தாச்சு... அதனால, முடிஞ்சா மாதிரி தான். எங்க பையனுக்கு நேரம் முக்கியம். அரை மணி நேரத்துல கிளம்பிடுவோம்; ஓ.கே.,?'' ரகுவின் அப்பா ராமநாதன் பேசினார்.

''சரிங்க... அப்புறம் ஒரு விஷயம், கோவில்ல ஒரு முக்கிய மீட்டிங்காம்... என் வீட்டுக்காரர் லேட்டா வர்றேன்னார்... தப்பில்லையே?''

''நோ ப்ராப்ளம்!''

உரையாடலை முடித்து நேரத்தை பார்த்தாள், வானதி. சரியாக, 1:00 மணி. பரபரப்பானாள்.

''ஸ்ரேயா, ரெடியாகுடி... டான்னு, 4:00 மணிக்கு வந்துடுவாங்களாம்,'' என்ற வானதி, உதவிக்கு வந்த தம்பியிடம், ''டேய், ஹாலை ஒழுங்குபடுத்து... கடைக்கு போய் நாலு எலுமிச்சம்பழம் வாங்கிட்டு வா,'' என்றாள்.

சொன்னபடி, 4:00 மணிக்கு பெற்றோருடன் வந்தான், ரகு. 'டிப் - டாப்'பாக இருந்தான்; நேர்த்தியாக வாரப்பட்ட தலை; அழகுக்காக ஒரு கண்ணாடி; சாம்பல் நிறத்தில், 'இன்' செய்யப்பட்ட சட்டை. சோபாவில் அமர்ந்தவன், தன் கைகளை கட்டிக்கொண்டு எங்கேயும் பார்க்காமல் சிந்தித்துக் கொண்டிருந்தான்.

முதலில் ரகுவின் அப்பா பேசினார்.

''குட்... வீடு, 'நீட்'டா இருக்கு. இது மாதிரி இருந்தாதான் என் பையனுக்கு பிடிக்கும். கொஞ்சம் அவன பத்தி சொல்லிடறேன்... சின்ன வயசுலேர்ந்தே சிக்கனமாத்தான் பேசுவான். அதே மாதிரிதான் மத்தவங்ககிட்டேயும் எதிர்பார்ப்பான்.

''ரொம்ப, 'டிஸிப்ளின்!' பொருட்கள் அந்தந்த இடத்துல இருக்கணும். அதது நேரப்படி நடக்கணும். கரெக்டா காலையில், 8:00 மணிக்கு டிபன்; 1:00 மணிக்கு லஞ்ச்; நடுவுல, 4:00 மணிக்கு லெமன் டீ; இரவு, 8:00 மணிக்கு டிபன். நேரம் தவறினா சாப்பிட மாட்டான். மனசுல பட்டத பேசறவன்...

''பொதுவா, 'லைட் கலர்ஸ்'தான் பிடிக்கும். வியாழன்னா, பாபா கோவிலுக்கு போய் ஒரு மணி நேரம், தியானம் பண்ணுவான். பொழுதுபோக்குன்னா, வார இறுதியில, 'டிவி'ல ஒரு படம் பார்ப்பான். மத்தபடி செய்தி மட்டும் தான்.

''அதனால, நாளைக்கு உங்க பெண்ணை கட்டாயப்படுத்துவான்னு நினைக்காதீங்க... இது அவனோட அடையாளங்கள். நீங்க, உங்க பொண்ண பத்தி சொல்லலாம்!''

வானதியின் தம்பி சிரித்தபடி, ''சூப்பர்ங்க... எங்க மாப்பிள்ளை ஒரு கோடு போட்டு நடக்கறார்னா, எங்களுக்கு பெருமைதாங்க.''

''எங்க பொண்ணு, கொஞ்சம் ஜாலி டைப். ஓரளவு சமைப்பா. விளையாட்டு, சினிமா கூட பிடிக்காது. வேற பெருசா சொல்றதுக்கில்ல... நல்ல பொண்ணு,'' என்றாள், வானதி.

''குட்... நேரம் போகுது, வரசொல்றீங்களா?'' என்றாள், ரகுவின் அம்மா.

''இதோ...'' என்றபடியே உள்ளே சென்றாள், வானதி.

ஒரு தட்டில் லெமன் டீ மற்றும் பிஸ்கட்களுடன் மெதுவாக வந்தாள், ஸ்ரேயா. மூவருக்கும் பணிவுடன் கொடுத்து, ரகுவின் கண்களை சில நொடி ஊடுருவினாள்.

''ப்ளீஸ்... சேர்ல உட்காருங்க,'' புன்முறுவலுடன் கூறிய ரகு, ''தர்மசங்கடமா நினைக்காதீங்க... இது ஒரு சம்பிரதாயம் தான்... ஐ லைக் யு... உங்க முடிவை இப்ப கூட சொல்லலாம். இது, உங்களுக்கான வாய்ப்பு. ஏதாவது பேசுங்க...'' என, கூடுதலாக பேசினான்.

''நான் அம்மாகிட்ட சொல்றேன்; அவங்க உங்ககிட்ட சொல்வாங்க. கொஞ்சம் வெட்கமா இருக்கு... நாம நிறைய பேசத்தான போறோம்,'' அவள் வார்த்தைகளில் சம்மதம் தெரிய, அனைவரும் மகிழ்ந்தனர்.

''உங்க அப்பா பத்தி சொல்லுங்க... ப்ளீஸ்!'' மீண்டும் கேட்டான், ரகு.

''என் அப்பா பேரு, குருநாதன். இப்ப ஆன்மிகத்துல விரும்பமுள்ளவர். அதுக்கு காரணம், ரெண்டு வருஷத்துக்கு முன், வட மாநில, 'டூர்' போனார். அங்க ஒரு கோவில்ல திடீர்னு ஏற்பட்ட மாற்றத்துல, ஆன்மிகவாதியா மாறிட்டாரு.

''எங்ககிட்ட எப்பவும் போலத்தான் இருக்காரு; மனசளவுல நல்ல மாற்றம் தெரியுது. இப்ப கூட கோவில் சம்பந்தமான பணிக்காக போயிருக்காரு... கண்டிப்பா, உங்க வீட்டுக்கு வந்து பார்க்கறேன்னு சொன்னாரு... இங்க இல்லேங்கறதுல எந்த காரணமும் இல்ல. உங்கள் போட்டோ பார்த்து பிடிச்சிருக்குன்னு சொன்னாரு,'' முடித்தாள், ஸ்ரேயா.

''ஓ... இல்லறத்துக்குள்ள துறவறமா?'' ரகுவின் அப்பா சொல்ல, அனைவரும் சிரித்தனர்.

ரகு, கைக்கடிகாரத்தை பார்த்தான். மூவரும் விடைபெற்று கிளம்பினர்.

பெண் வீட்டாருக்கும் மகிழ்ச்சி.

அன்றிரவு, சற்று வருத்தப்பட்டார், குருநாதன்.

''ப்ச்... நான் இருக்க முடியாம போச்சே... சரி, நாளைக்கே போய் பார்த்திடறேன்,'' என்று, உடனே போனும் செய்தார்.

''ரொம்ப சந்தோஷம், கண்டிப்பா வாங்க... ஆபீஸ்லேந்து சரியா, 7:00 மணிக்கு வந்துடுவான் ரகு,'' என்றார், ரகுவின் அப்பா.

மறுநாள் மாலை, 5:00 மணி.

குருநாதன் ஆன்மிகவாதி என்று சொன்னதால், ரகுவின் அம்மா சில விஷயங்கள் கூறினாள்.

''இங்க பாருங்க, சம்பந்தி வந்தா உட்கார ஒரு மரச்சேர், பந்தாவா இருக்கணும். பிளாஸ்டிக், பீங்கான், 'கப்' வேண்டாம். பித்தளை டபரா டம்ளர் எடுக்கறேன். அவருக்கு நேரா கால்மேல் கால் போட்டு உட்காராதீங்க... அவரு ஆன்மிக சம்பந்தமா ஏதாவது, 'அட்வைஸ்' சொன்னா பொறுமையா கேட்டுக்கலாம். அவங்க வீட்ல, நம்பள கவனிச்சா மாதிரி நாமளும் கவனிக்கணும்ங்க.''

''சரி!'' என்றார், ரகுவின் அப்பா.

சரியாக, 7:00 மணிக்கு வந்தான், ரகு. 7:30 ஆகியும் குருநாதன் வரவில்லை.

''என்னப்பா இது, 8:00 மணிக்கு சாப்பிடும்போது வருவாரோ?'' சந்தேகப்பட்டான், ரகு.

அடுத்த ஐந்து நிமிடத்தில் வந்தார், குருநாதன்.

மூவரும் சற்று ஆச்சரியப்பட்டனர். 'டீ - ஷர்ட்'டும், 'பெர்முடாசும்' போட்டிருந்தார். இரு கைகூப்பி தலை குனிந்து வணக்கம் சொன்னார். ஆச்சரியத்தை மறைத்து வரவேற்றனர், ரகு வீட்டினர். உள்ளே வந்து சோபாவில் ஓரமாக அமர்ந்தார்.

''எப்படி வந்தீங்க?''

''ம்... 'டூ வீலர்'லதான் வரணும்ன்னு நினைச்சேன். பஸ்ல வந்து இறங்கி வழி கேட்டேன். ஷேர் ஆட்டோவுல போகலாம்ன்னு சொன்னாங்க... விடு, நடந்து நாளாச்சேன்னு நடந்தே வந்தேன். என்ன... 3 கி.மீ., இருக்கும். சரி... இவர்தான் மாப்பிள்ளையா... அம்சமா இருக்கீங்க,'' என்றார், குருநாதன்.

''என்ன சாப்பிடறீங்க?'' ரகுவின் அப்பா கேட்டார்.

''எது வேணும்னாலும்!''

''டீ, காபியா... இல்ல டிபன் மாதிரி?''

''எதா இருந்தாலும் கொடுங்க... இல்ல தண்ணி கூட போதும்!''

''இல்ல, நீங்க ஆன்மிகத்துல இறங்கிட்டீங்கன்னு உங்க வீட்ல சொன்னாங்க... ஆனா நீங்க?'' சந்தேகமாக கேட்டாள், ரகுவின் அம்மா.

''ஆன்மிகத்துல இல்ல, நான் மாறிட்டேங்கிறது உண்மைதான். முன்பு எனக்குன்னு கொள்கை, கட்டுப்பாடு, நோக்கம், பழக்கம்ன்னு வரையறையோடு செயற்கையா இருந்தேன். ஆனா, பத்ரிநாத் பக்கத்துல உள்ள ஆஸ்ரமத்துல ஒரு மகானோட அருளுரை கேட்டேன்.

''சுருக்கமா சொன்னார், 'நாம மனிதனா பிறந்தது பெரிய வரம். இதுல நாம், நம்பள பெரிய ஆளா நினைக்கக் கூடாது. எல்லாரும் சமம், எல்லாரையும் அனுசரிச்சு போகணும்; கூடிய வரைக்கும் யாருக்கும் எந்தவித துன்பத்தையும் தரக் கூடாது. அதுக்கு நம் பழக்க வழக்கம் காரணமா இருக்கக் கூடாது. நிலையில்லாத வாழ்க்கையில நம் நடைமுறையும் சூழ்நிலைக்கேத்தபடி மாத்திக்கணும்'ன்னாரு...

''அதனால, நான் மாறிட்டேன்; இதுதான் வழக்கம். இது தவறினா உடனே கோபம்கிறது மறைஞ்சு போச்சு... அத ஆன்மிகம்ன்னும் சொல்லலாம்... நீங்க வந்தன்னிக்கு கூட, கோவில்ல மணியடிக்கறவரு வரலை; அந்த வேலைய செய்யறா மாதிரி ஆயிடிச்சு...

''இவ்வளவு துாரம் என்னை பத்தி சொல்றதுக்கு கூச்சமா இருக்கு. சரி, விஷயத்துக்கு வர்றேன். உங்க குடும்பத்த ரொம்ப பிடிச்சிருக்கு. எனக்கு ஒரே பொண்ணு, கல்யாணத்த நிறைவா செய்யறேன்,'' அழகாக சொன்னார், குருநாதன்.

டம்ளரில் கொடுத்ததை என்னவென்று பார்க்காமலேயே அருந்தினார்.

விடைபெறும் போது, ''அங்கிள் எப்படி போவீங்க?'' கேட்டான், ரகு.

''நடந்தே தான்.''

''வேண்டாம்... நான் வண்டியில, பஸ் ஸ்டாப் வரைக்கும் வர்றேன்,'' என்றான், ரகு.

மறுக்காமல், ''சரி!'' என்றார், குருநாதன்.

அவர் சென்ற பிறகு ரகுவின் பெற்றோர் அதிசயித்தனர்.

நல்ல ஆன்மிக சிந்தனையுள்ள மனிதன், தனக்கென்று எந்த அடையாளத்தையும் ஏற்படுத்த விரும்பமாட்டான். அவனுடைய ஒரே அடையாளம் துன்பம் தராமல், யாரையும், எதையும் அனுசரித்து போவதுதான்.

நான் இப்படி தான், இது பிடிக்கும், இது பிடிக்காது, இதுதான் பாலிசி, பஞ்சுவாலிட்டி தான் உயிர். என்னை பத்தி தெரியாது, நான் சொல்றதுதான் செய்வேன். நான் ஒரு மாதிரி, உயிர் போனாலும் நான் அத செய்ய மாட்டேன். அவரு முன்கோபக்காரரு...

இது மாதிரி ஆயிரக்கணக்கான அடையாளங்களால், மனிதன் எதை சாதிக்கப் போகிறான்... அதுவும், வயதானால் வலுவிழந்து பாவம் என்றல்லவா கதியாகிறான்... இந்த தனி மனித குண அடையாளங்களே ஒருவித அகங்காரத்தின் வெளிப்பாடு தானே... அதுவும் தனக்கு மேலே ஒரு சக்தி உள்ளதை நம்புபவர்கள், இத்தகைய பிடிவாதங்களை வைத்திருப்பது நியாயமா?

குருநாதன் குடும்பத்தின் சம்பந்தம் கிடைத்தது குறித்து, ரகு மற்றும் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், தங்களை மாற்றிக் கொள்வதற்கான முயற்சியையும் மேற்கொண்டனர்.

கீதா சீனிவாசன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us