PUBLISHED ON : ஜன 03, 2021

'கொரோனா' எனும் கொடிய நோய், உலகம் முழுதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர், 'இப்படி எல்லாம் நடக்கும் என்று, கனவில் கூட நினைக்கவில்லை...' என, அழுது புலம்புகிறார்.
புலம்பலுக்கு காரணம், இவரது பெயர், 'ஜிம்மி கொரோனா' என்பது தான். இவருக்கு திருமணமாகி, ஒரு குழந்தை உள்ளது.
இத்தனை ஆண்டுகளாக, எந்த கவலையும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்வை கழித்தவர், 'கொரோனா' பரவலுக்குப் பின், பெரும் பிரச்னைகளை சந்தித்து வருகிறார்.
'ஏதாவது ஒரு இடத்துக்குச் சென்று பெயரை கூறினால், யாரும் நம்ப மறுக்கின்றனர். அடையாள அட்டையை காட்டித் தான், நம்ப வைக்க வேண்டியுள்ளது...' என்கிறார்.
'இப்படியெல்லாம் பெயர் வைப்பாங்களா...' என, பலரும் கிண்டலடிக்கின்றனர்.
அறிமுகமானவர்களே, 'வாங்க மிஸ்டர் கொரோனா...' என, கேலியும், கிண்டலுமாக அழைப்பது, இவரை ரொம்பவே வெறுப்பேற்றியுள்ளது.
— ஜோல்னாபையன்

