PUBLISHED ON : ஏப் 03, 2011

பொதுவாக, பத்திரிகையாளர்கள்தான் மற்றவர்களை பிரபல மாக்குவர்; ஆனால், இந்த கிரிக்கெட் சீசனில், பார்வை இல்லாத, பெண் பத்திரிகையாளர் ஒருவர் பிரபலமாகி உள்ளார்; அவர்தான், சானியா ஷல்மாதி, வயது 28.
பாகிஸ்தானில் பிறந்த இவர், சிறுவயதில் கண்ணில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, பார்வையை இழந்தார்; ஆனால், நம்பிக்கையை இழக்காமல், கல்வியில் கவனம் செலுத்தியதை தொடர்ந்து, தகவல் தொடர்பு துறையில், முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றார்.
இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான், முல்தான் நகரில் உள்ள ஜக்காரிய பல்கலையில் சேர்ந்து, பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த, 2009ல், லாகூரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது நடந்த பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவத்தை கேள்விப்பட்டு, மிகவும் வருத்தப்பட்டவர், காயம் பட்டவர்களை நேரில் பார்த்து, ஆறுதல் கூறினார்.
அந்த சந்திப்பை, உணர்வுப்பூர்வமாக உள்ளூர் ரேடியோவில் பேசினார், பல பக்கத்திலும் இருந்து, அந்த பேட்டிக்கு பெரும் ஆதரவு கிளம்பவே, பத்திரிகையாளராக மாறினார்.
அதன்பின், பிரபல கிரிக்கெட் வீரர்களை பேட்டி எடுப்பதும், கிரிக்கெட் போட்டிகளை பற்றி எழுதுவதுமாக, பிசியாகி விட்டார்.
சர்வதேச கிரிக்கெட் நடைபெறும் மைதானத்தில், பத்திரிகையாளர் காலரியில் இவருக்கு என்று எப்போதுமே தனி இடம் உண்டு.
தன் சகோதரர் பிலாலுடன், 'காலரிக்கு' வரும் சானியா, போட்டி பற்றிய வர்ணனைகளை ரேடியோ மூலம் கேட்டும், மைதானத்தில் நடப்பவைகளை தன் சகோதரர் பிலால் சொல்ல, சொல்ல கேட்டும், 'பிரைய்லி' முறையில் உருவாக்கப்பட்ட தன், 'லேப்டாப்' மூலம் அங்கு இருந்தபடியே செய்திகளை அனுப்பி வைக்கிறார்.
அதே போல, பிரபல வீரர்களின் பேட்டிகளை முழுமையாக டேப் செய்து, பின், இவரது பாணியில், 'எடிட்' செய்து, ரேடியோவில் ஒலிபரப்புவதும் இவரது ஸ்பெஷாலிட்டி.
அந்த வகையில், இந்தியா, இலங்கை, மேற்கு இந்திய தீவுகள், இங்கிலாந்து உள்ளிட்ட பல அணி வீரர்களும், சானியாவை தனிப்பட்ட முறையில் அறிவர்.
இதனால், சானியா என்றால் எப்படியும் விசேஷ பேட்டி செய்தி கிடைக்கும் என்பதால், பாகிஸ்தானில் உள்ள பிரபல பத்திரிகை ஏஜென்சி, இந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு செய்தி சேகரிக்க, இவரை நியமித்தது.
இதற்கு முன், இலங்கையில் நடந்து வரும் சர்வதேச போட்டிகள் குறித்தும், உலக கோப்பையின் இறுதிப் போட்டிக்கான செய்திகளை சேகரித்தும் கொடுத்துள்ளார்.
இவருக்கு, வாழ்க்கையில் உள்ள ஒரே விருப்பம், இந்தியாவும், பாகிஸ்தானும் சண்டை நாடுகளாக இல்லாமல், அன்பு பாராட்டும் நட்பு நாடுகளாக இருக்க வேண்டும் என்பதுதான்; அதற்கு, கிரிக்கெட்தான் பாலமாக அமையும். இனி வரும் நாட்களில், இரு நாட்டு சகோதரர்களும் உணர்வர் என்கிறார் உணர்ச்சிப் பூர்வமாக.
***
- எல்.எம்.ராகவேந்தர்
