/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கவிதைச்சோலை! - என்றென்றும் கண்ணதாசன்!
/
கவிதைச்சோலை! - என்றென்றும் கண்ணதாசன்!
PUBLISHED ON : அக் 16, 2022

மதுக்கூட அவன் நாவில் மதுரமாகும்
மங்காத அவன் பெயரும் மகுடம் சூடும்
புதுமைக்கும், பழமைக்கும் பாலம் கட்டும்
புத்துணர்வை நமக்களித்து மகிழ்வைக் கூட்டும்!
பொதுவுடைமை எண்ணங்கள் பெரிதாய் தோன்றும்
பொன்னான தத்துவங்கள் பொலிவை ஏற்கும்
எதுகைக்கும் மோனைக்கும் ஏற்றம் தந்தார்
இணையில்லா கண்ணதாசன் என்றும் வாழ்வார்!
இதிகாசங்கள் அவன் கவியில் எளிமை ஏற்கும்
எளியோரை சென்றடைந்து இனிமை சேர்க்கும்
செதுக்கிட்ட சித்திரம் போல் சொற்கள் மின்னும்
செந்தமிழும் அவன் திறனை சிறப்பாய் சொல்லும்
முத்திரையாய் பல கவிதை முனைந்து நிற்கும்
முணுமுணுத்தால் நாளெல்லாம் நெஞ்சை அள்ளும்
எத்திக்கும் அவன் கவிதை ஒலிக்கும் ஓங்கி
ஈடில்லா கண்ணதாசன் என்றும் வாழ்வார்!
எதற்கெனினும் ஏற்றதொரு பாடல் உண்டே
எல்லாருக்கும் ஒரு கவிதை ஏற்பதாகும்
விதவிதமாய் விருத்தங்கள் வரிசைக் கட்டும்
வார்த்தைகளும் சரளமாக வந்து கொட்டும்
பதவிகளும் தேடி வந்து தாளைத் தாங்கி
பாரெல்லாம் அவன் புகழைப் பரப்பும் ஓங்கி
உதாரணமாய் அவன் வாழ்வு உலகில் நிற்கும்
ஒப்பற்ற கண்ணதாசன் என்றும் வாழ்வார்!
- திருவரங்க வெங்கடேசன், பெங்களூரு.

