sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கேளடி கண்மணி!

/

கேளடி கண்மணி!

கேளடி கண்மணி!

கேளடி கண்மணி!


PUBLISHED ON : அக் 29, 2017

Google News

PUBLISHED ON : அக் 29, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''பாரதி... நான் இவ்வளவு சொல்றேன், ஏன் காது கொடுத்து கேக்க மாட்டேங்குற...'' என்றார், அப்பா ராகவன் சலிப்பாக!

''நீங்கதாம்பா என்னோட உணர்வுகள புரிஞ்சுக்க மாட்டேங்குறீங்க...''

''ஏண்டி... கல்யாணமாகி, ஆறு மாசம்கூட ஆகல; அதுக்குள்ள இப்படி பிடிவாதமா வந்து நிக்குற...'' என்றாள் ஆற்றாமையுடன், அம்மா.

''ஓ... அதுதான் உன் பிரச்னையா... உன் மக, வாழாவெட்டியா வந்து உட்கார்ந்துடுவாளோ, அக்கம்பக்கம் உள்ளவங்களுக்கு பதில் சொல்லணுமே... இதுதானே உன் பயம்...'' என்றாள், பாரதி.

''அம்மா சொல்றத விடு. விஜய் நல்ல பையன்; எந்த கெட்ட பழக்க வழக்கமும் கிடையாது. கல்யாணமான இந்த குறுகிய காலத்துல, அவரை, நீ முழுசா புரிஞ்சுக்கலயோன்னு தான் தோணுது,''என்றார், ராகவன்.

''அப்பா... நீங்க போன தலைமுறை ஆளு; உங்களால சில விஷயத்த புரிஞ்சுக்க முடியாது. எங்க ரெண்டு பேரோட கருத்தும் ஒருநாள் கூட ஒத்துப்போனதே கிடையாது. நான் சொல்ற எதையும் அவன் புரிஞ்சுக்கிறது இல்ல,'' என்று குற்றப் பத்திரிகை வாசித்தாள்.

''அப்படியே இருந்தாலும், கடைசியில, நீ நினைச்சபடி தானேம்மா நடக்குது...''

''ஒவ்வொரு முறையும் சண்டைப் போட்டுத் தான் காரியத்த சாதிக்க வேண்டியிருக்கு... என்னால, அவனோட போராட முடியாது. அவன், எனக்கு, 'செட்'டாக மாட்டான்; என்னோட நிம்மதியே போச்சு... விவாகரத்து செய்யலாம்ன்னு இருக்கேன்...'' என்று அவள் கூறியதும், அப்பாவும், அம்மாவும் ஆடிப் போயினர்.

அன்று மாலை, பாரதிக்கு தெரியாமல் மாப்பிள்ளையை பார்க்க கிளம்பினர், ராகவன் தம்பதி.

''மாப்பிள்ள... பாரதி ஏதோ சிறுபிள்ளைத்தனமா பேசுறா... எதையும் மனசுல வைச்சுக்காதீங்க,'' என்றார், ராகவன்.

''மாமா... எனக்கு உங்க ரெண்டு பேர் மீதும் ரொம்ப மரியாதை இருக்கு. ஆனா, உங்க மகளைப்பத்தி இப்படி சொல்றேன்னு வருத்தப்படாதீங்க... அவ, சராசரி பொண்ணு இல்ல; அவளுக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கு. அதுக்கு, என்னால ஈடு கொடுக்க முடியல. 24 மணி நேரமும் அவ கட்டுப்பாட்டுலேயே நான் இருக்கணும்ன்னு நினைக்குறா... ஆபீசுக்கு போனா, எங்கே இருக்கேன், என்ன செய்யறேன், எப்ப சாப்பிடுறேன், யார் கூட சாப்பிடுறேன்ன்னு எல்லாமே அவளுக்கு உடனுக்குடன், 'மெசேஜ்' அனுப்பணும். அப்படி அனுப்பினாலும் அதுலயும் குத்தம் கண்டுபிடிச்சு, ஒரே சண்டை. பிரண்ட்ஸ் கூட வெளியே போகக்கூடாது; லேட்டா வந்தா சண்டை. எனக்கு இந்த வாழ்க்கை மூச்சு முட்டுது. நான் எந்த தப்பான முடிவுக்கும் போக மாட்டேன்; அவளா வழிக்கு வரட்டும்ன்னு காத்திருக்கேன். இந்த பிரிவு கூட, அவளை யோசிக்க வச்சா நல்லது,'' என்று தன் எண்ணத்தை கூற, அவன் நிலைமை இருவருக்கும் புரிந்தது.

எதையும் புரிந்து கொள்ள மறுக்கும் மகளை, எப்படி மாற்றுவது என்ற கவலையுடன் வீடு வந்து சேர்ந்தனர், பாரதியின் பெற்றோர்.

''பாரதி... எனக்கு ஆபீசில், முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு. அதனால, லீவுக்கு நானும், உங்கம்மாவும் கிராமத்துக்கு வரல; நீ மட்டும் பாட்டி வீட்டுக்கு போயிட்டு வா,'' என்றார் ராகவன்.

சந்தோஷமாக ஒத்துக் கொண்டாள், பாரதி. மனம் சலிப்பாக இருப்பதற்கு மாற்று, தாத்தா - பாட்டி வீட்டுக்கு போவது தான் என்று தோன்றியது. அது, அவளுக்கு பிடித்தமான இடமும் கூட!

பாரதி, சென்னையில் பிறந்து, வளர்ந்தவள் என்றாலும், அவளது பெற்றோரின் பூர்வீகம், தென்காசி அருகே உள்ள இயற்கை அழகு கொஞ்சும் இலஞ்சி. தாத்தாவுக்கும், ஆச்சிக்கும் தங்கள் ஒரே பேத்தியான பாரதி மீது கொள்ளை பிரியம்.

பாரதியை வரவேற்க, வண்டி கட்டி, தென்காசி ரயில்வே ஸ்டேஷனுக்கே வந்து விட்டார், தாத்தா. பாரதியை பார்த்ததும், ஆச்சிக்கு சந்தோஷம் தாங்கவில்லை.

''வாடி பாரதி... மாப்பிள்ளையையும் கூட்டிட்டு வந்திருக்கலாம்; கல்யாணமான புதுசுல விருந்துக்கு வந்ததோட சரி...'' என்றாள்.

''சரி கிழவி... பேசிக்கிட்டே இருக்காம, முதல்ல அவளுக்கு குடிக்க ஏதுன்னாச்சும் கொடு,'' என்றார், தாத்தா.

''பல்லு விளக்கிட்டு வா; காபி கலந்து தாரேன். உனக்கு பிடிக்குமேன்னு, திரட்டுபால் கிளறி வைச்சிருக்கேன். அங்க தான் வேலை வேலைன்னு அலையற... இங்க, நல்லா ரெஸ்ட் எடு; ஒரு வேலையும் செய்யக்கூடாது,'' என்ற ஆச்சியின் அன்பு, பாரதியை நெகிழ வைத்தது.

அரண்மனை மாதிரி பெரிய வீடும், தோட்டமும், எப்போதுமே அவளுக்கு ரொம்ப பிடிக்கும். இரவு சாப்பிட்டதும், திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, 'ஜிலுஜிலு'வென வீசிய காற்று, கண்ணைச் சொக்க, தூங்குவதற்காக, எழுந்து உள்ளே சென்றாள்.

தேக்கு கட்டிலும், இலவசம் பஞ்சு மெத்தையும் இதமான தூக்கத்தை தர, ரொம்ப நாளைக்கு பின், நிம்மதியாக தூங்கினாள், பாரதி.

காலையில் மெதுவாக எழுந்தவள், பல் துலக்கி, பாட்டி கொடுத்த காபியுடன், வீட்டுக்கு பின்புறம் இருந்த தோட்டத்து மேடையில் அமர்ந்தாள்.

''ஆச்சி... தாத்தாவ எங்க காணோம்?''

''அவரு வயக்காட்டுக்கு போயிருக்காரு...''

''காலை சாப்பாடு...''

''வழக்கமா வேலைக்காரி செவ்வந்தி கொண்டு போய் கொடுத்துட்டு வருவா...'' என்றவள், ''இன்னைக்கு நீ வந்திருக்கிறதுனால, பலகாரம் சாப்பிட வந்திடுறதா சொல்லிட்டு போனாரு...'' என்றாள்.

''காலையில என்ன ஆச்சி ஒரே சத்தம்... தாத்தாவுக்கும், உனக்கும் சண்டையா...'' என்று கேட்டாள்.

''அதை விடு கண்ணு... வழக்கமா நடக்கிற விஷயந்தான்; நான் ஏனைன்னா அவரு கோனைம்பாரு... சண்டையில்லாத புருஷன், பொண்டாட்டி யாரு இருக்கா சொல்லு...''

அவர்கள் பேசுவதை கேட்டபடி உள்ளே நுழைந்த தாத்தா, ''அம்மாடி... இந்த கிழவிக்கு திமிரு ரொம்ப ஜாஸ்தியாப் போச்சு... இவக் கூட எப்பப்பாரு ஒரே அக்கப்போர் தான்; பேசாம, இந்தக் கிழவிய ரத்து செய்துட்டு, செவ்வந்திய உனக்கு சின்ன ஆச்சியா கொண்டாந்துரலாம்ன்னு பாக்கேன்...'' என்று கூறி, 'இடிஇடி'யென சிரித்தார்.

''கிழவனுக்கு ஆசையப் பாரு... கை, கால் விழுந்தா, செவ்வந்தியா உன்னை கவனிக்கப் போறா... நான் தானேய்யா கவனிக்கணும்...'' என்றாள், ஆச்சி.

''சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்டி...'' என்று மனைவியை கொஞ்சியவர், ''பதனி வித்து வந்தாங்க; உனக்கு பிடிக்குமேன்னு தூக்குல வாங்கியாந்திருக்கேன்; அதோட, செவ்வாழை இளநீர், ஒரு குலை கொண்டு வந்து போடச் சொல்லியிருக்கேன்; பாரதிக்கு வெட்டிக் கொடு,'' என்றார், தாத்தா.

இருவரின் குறும்பான பேச்சை ரசித்தபடி எழுந்தாள், பாரதி. அவர்கள் வெளியே சண்டை போடுவது போல் தெரிந்தாலும், இருவருக்குள்ளும் பாச பிணைப்பு இருப்பது புரிந்தது.

பலகாரம் சாப்பிட்டு முடித்த தாத்தா, ''மதியத்துக்கு சாப்பாட்டை செவ்வந்திகிட்ட கொடுத்தனுப்பு; புள்ள இருக்குறதனால, சாயந்திரம் வெள்ளனவே வந்துடுறேன்...'' என்றார்.

''மறுபடி செவ்வந்தியா... ஆச்சி ஜாக்கிரதை!'' கலகலவென சிரித்தாள், பாரதி.

தாத்தா போன பின், பாட்டியும், பேத்தியும் ஓய்வாக உட்கார்ந்தனர்.

''பாரதி... நாம ரெண்டு பேரும் பல்லாங்குழி விளையாடுவோமா... அப்படியே கடலை அவிச்சு வைச்சிருக்கேன்; தட்டுல போட்டு எடுத்துட்டு வா...''

''அதெல்லாம் இருக்கட்டும் ஆச்சி... தாத்தா பாட்டுக்கு வயக்காட்டுலேயே கிடக்காரு... உனக்கு வீட்டுல தனியா போரடிக்காதா...''

''ஆம்பளைங்க கொஞ்சம் வெளியில போயிட்டு வந்தாத்தான், நமக்கும் கொஞ்சம் விட்டாத்தியா இருக்கும்; பொழுதன்னைக்கும் ஒருத்தர் மூஞ்சிய ஒருத்தர் பாத்துக்கிட்டு இருந்தா, அலுப்புத்தான் வரும்...''

''ஆச்சி... அந்த செவ்வந்திக்கு நீ ரொம்ப இடம் கொடுக்குற...''

''தாத்தா பேசுனத கேட்டு பயந்துட்டியா... அது சும்மா கிண்டலுக்கு... அவருக்கு எம்மேல ரொம்ப பிரியம், மரியாதை!''

''அதுதான் பாத்தேனே... உனக்கு பிடிக்குமேன்னு தூக்குல பதனிய வாங்கிட்டு வந்தாரே... விஜய்யும் அப்படித்தான் ஆச்சி... சண்டை போட்டாலும், எனக்கு பிடிச்ச சாக்லேட், ஐஸ்கிரீம் வாங்கிட்டு வருவான்... கோபப்பட்டாலும் பாத்து பாத்து செய்வான்...'' முதல் முறையாக தன்னை மறந்து, விஜய்யை பற்றி பேசினாள்.

''புருஷன், பொண்டாட்டி உறவுங்குறது அதுதாண்டி... சண்டை, சச்சரவு மாதிரிதான் அன்பும், அரவணைப்பும் இருக்கும். எனக்கும், உங்க தாத்தாவுக்கும் எந்த விஷயத்திலும் ஒத்த கருத்து கிடையாது. நான் சொல்றது, அவருக்கு சரின்னு பட்டாலும், அதை ஒத்துக்க மாட்டாரு; பொதுவா, ஆம்பளைங்க அவ்வளவு ஈசியா நாம் சொல்றத ஏத்துக்க மாட்டாங்க...''

''ஈகோ ஆச்சி...''

''அது எதுவோ... முதல்ல ஏத்துக்காத மாதிரி கத்திட்டு, அப்புறம் சரிம்பாங்க... நாம, அதையெல்லாம் அலசி ஆராய்ஞ்சுட்டு இருக்க கூடாது. அதப்போல, நீ செவ்வந்திய பத்தி யோசிக்க தேவையில்ல. அவரு எத்தனை பொம்பளைங்க கிட்ட சிரிச்சு பேசினாலும், அவருடைய அன்பு, மரியாதை எல்லாம் எம்மேல தான் இருக்கும். அவங்க நம்ம மீது வச்சுருக்கிற அன்பையும், மரியாதையையும் வெளிக்கொண்டு வர்றது நம்ம கையில இருக்கு. இப்ப, உனக்கு அது புரியாது; வயசாகி, கை, கால் தளரும் போது தான், வாழ்க்கைத்துணையோட அருமை புரியும்,'' என்றவள், ''என்ன பாரதிம்மா... ஆச்சி பேசியே கொல்றேன்னு நினைக்கிறயா...'' என்றாள்.

''இல்ல ஆச்சி... நீங்க, ஒரு அனுபவ பெட்டகம்; அதுலேயிருந்து நாங்க எடுத்துக்க வேண்டிய பொக்கிஷம், நிறைய இருக்கு,'' என்ற பாரதி, முதல் முறையாக யோசிக்க ஆரம்பித்தாள்.

தி. வள்ளி






      Dinamalar
      Follow us