PUBLISHED ON : செப் 10, 2023

மகாராஷ்டிர மாநிலத்தின் ஒரு கிராமத்தில், புது விதமான சட்டம் ஒன்று இருந்தது.
'ஆணோ, பெண்ணோ, முதியவர்களோ, சிறுவர்களோ, -இந்த கிராமத்தின் வழியாகப் போகிறவர்கள் யாராக இருந்தாலும், கூலி எதுவும் வாங்காமல், குளம் வெட்டிக் கொடுக்க வேண்டும்; மன்னர் உத்தரவு...' என்பதே, அந்த சட்டம்.
அந்த கிராமத்தின் வழியாக செல்பவர்கள் அனைவரையும் வற்புறுத்தி, அவர்களது கைகளில் மண்வெட்டி மற்றும் கடப்பாரையை கொடுத்து, குளம் வெட்டும்படி நிர்ப்பந்தப்படுத்தி வந்தார், மன்னர்.
ஒருசமயம், தன் சீடர்களுடன், அந்த கிராமத்தின் வழியாகச் சென்றார், ஸ்ரீ மத்வாசாரியார்.
அவரையும் வழிமறித்தார், மன்னர்.
விபரம் அறிந்த ஒரு சிலர், 'மன்னா, இவர் குருநாதர். ஆசார்ய புருஷர்...' என்று சொல்லி, தடுத்தனர்.
'சட்டத்தின் முன் அனைவரும் சமம். யாராக இருந்தாலும் சரி, குரு ஸ்தானம் வகிப்பவராக இருந்தாலும், அவரும் மற்ற யாத்திரிகர்களைப் போல, குளம் வெட்டித் தான் ஆக வேண்டும்...' என வற்புறுத்தினார், மன்னர்.
'என்ன ஆகுமோ?' என, பயந்தனர், அனைவரும்.
துறவிகளைத் துன்புறுத்தும் அந்த மன்னருக்கு, பாடம் புகட்டத் தீர்மானித்தார், ஸ்ரீ மத்வாசாரியார்.
அதன்படி, 'மன்னா, நாங்கள் துறவிகள். மண்ணை வெட்டி எங்களுக்கு பழக்கமில்லை. இந்த மண்வெட்டியை எப்படி பயன்படுத்துவது... மண்ணை எப்படி வெட்டி எடுப்பது என்பதை, நீயே செய்து காட்டு...' என்றார்.
அங்கிருந்த அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தாலும், அதை முகத்தில் காட்டாமல் இருந்தனர்.
'எல்லார் எதிரிலும் ஒரு துறவி, தன்னை இப்படிப் பேசி விட்டாரே...' என, மன்னருக்கும் மனத்தாங்கல் உண்டானது. இருப்பினும், மண் வெட்டியை எடுத்து, மண்ணை வெட்ட ஆரம்பித்தார், மன்னர்.
காலையில் ஆரம்பித்த வேலை, அப்படியே நீண்டு போய், மாலை வரை நீடித்தது. மண்ணை வெட்டிக் கொண்டே இருந்தார், மன்னர்.
அவரால் மண் வெட்டுவதை நிறுத்த முடியவில்லை. கைகள் வலித்தன. உடம்பு சோர்ந்து போனது. என்ன முயற்சி செய்தும், அவரால் வெட்டுவதை நிறுத்த முடியவில்லை. ஸ்ரீமத்வரின் பெருமையை உணர்ந்து கொண்டார், மன்னர்.
'சுவாமி, தெரியாமல் செய்து விட்டேன். அடியேன் செய்த அபசாரத்தைப் பொறுத்து, அருள் புரிய வேண்டுகிறேன்...' என்றார், மன்னர்.
மன்னித்தார், ஸ்ரீ மத்வாசாரியார்.
'மன்னா... மக்களிடம் இருந்து வசூல் செய்யும் வரிப்பணத்திலிருந்து, குளம் வெட்ட ஏற்பாடு செய். அதை விட்டுவிட்டு அப்பாவி வழிப்போக்கர்களைத் துன்பப்படுத்தாதே...' என்றார்.
திருந்திய மன்னர், ஸ்ரீ மத்வாசாரியாரின் திருவடிகளில் விழுந்து வணங்கினார்.
ஆட்சியாளர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் நிகழ்வு இது.
பி. என். பரசுராமன்
