PUBLISHED ON : ஜூலை 25, 2021

அனைவர் மனங்களிலும் இனம் புரியாத ஒரு பயம், அப்பிக் கிடக்கிறது. எப்படியாவது இதிலிருந்து மீண்டு வந்து தான் ஆகவேண்டும்.
'அட போங்க சார்... நீங்க வேற, என்னதான் தைரியமா இருந்தாலும், ஊரே நடுங்குற இந்த நேரத்துல கூட, முன்னுக்குப் பின் அறிமுகம் இல்லாதவங்க கூட, நெருப்பா வார்த்தைகளைக் கொட்றாங்க. என்ன செய்ய...' என்றார்.
அதற்கு, பழந்தமிழ் நுாலான, 'செயங்கொண்டார் வழக்கம்' எனும் நுால் வழி காட்டுகிறது.
'அவர்கள் அப்படித்தான் பேசுவர். அந்த தீய குணம் கொண்டவர்களுக்கு, பதில் சொல்லிக் கொண்டிருக்காதீர். யானை நிழல் பார்த்த கதை போல ஆகிவிடும்...' என்கிறது, அந்நுால்.
நுாறு பாடல்களை கொண்ட அந்நுாலில், ஒரு கதையும், அதற்கேற்ற பழமொழியும் இடம்பெற்றிருக்கும். அந்நுால் சொல்லும் கதை:
ஒரு யானைக்கு, தன் நிழலை பார்க்க வேண்டுமென்ற விருப்பம் உண்டானது. ஒரு பெரிய குளத்தில் போய், நம் நிழலை பார்க்கலாம். தண்ணீரில் நம் பிம்பம் தெரியும் என்ற எண்ணத்தோடு, குளத்திற்கு சென்றது, யானை.
வழியில், தவளை குறுக்கிட்டது...
'கன்னங்கரேல் என்று, இவ்வளவு குண்டான உடம்பை வைத்து, நீ, வெளியில் வருகிறாய் பார். என்ன ஜென்மமோ... துாண் மாதிரி நான்கு கால்கள். பின்னால், சிறியதாக ஒரு வால். போதாது என்று, முன்னால் பெரிதாக நீண்ட ஒரு வால் (தும்பிக்கை), முறம் போன்ற காதுகள்...
'கொஞ்சம் கூட பொருத்தமில்லாத சின்னஞ்சிறிய கண்கள்; முன்னால் இரண்டு குச்சி (தந்தங்)கள் வேறு. இப்படிப்பட்ட உருவத்தோடு தைரியமாக வெளியில் வேறு சுற்றுகிறாய்...' என்றது.
யானைக்கு உயர்வாக சொல்லப்படும் அனைத்தையும் இழிவாகப் பேசி, அவமானப்படுத்தியது, தவளை.
அதை பொருட்படுத்தாமல் சென்றது, யானை.
'எங்கே போகிறாய்?' என, விடாமல் சீண்டியது, தவளை.
'குளத்தின் தண்ணீரில் என் உருவத்தை பார்க்கலாம் என்று போய்க் கொண்டிருக்கிறேன்...' என்றது, யானை.
'நீ, எப்படிப் பார்க்கிறாய் என்பதை, நான் பார்க்கிறேன்...' என்ற தவளை, யானைக்கு முன் போய், குளக்கரையில் தயாராக இருந்தது.
யானை, குளக்கரையை அடைந்ததும், குளத்தில் குதித்து, அங்குமிங்குமாக தாவி, நீரை கலக்கத் துவங்கியது, தவளை.
அலைபாயும் நீரில் யானையின் உருவத்தை பார்க்க முடியாததால், அதன் எண்ணம் ஈடேறவில்லை.
'எந்தவிதமான ஒட்டுறவும் இல்லாத தவளை, யானைக்கு இடையூறு செய்ததைப் போல, எந்தவிதமான ஒட்டுறவும் இல்லாத கூனி, ஸ்ரீராமருக்கு பட்டாபிஷேகம் நடைபெறாதவாறு தடுத்தாள்...' என்று சொல்லி, 'செயங்கொண்டார் வழக்கம்' எனும் நுால் அறிவுறுத்துகிறது.
யாராவது, எதையாவது சொல்லி, அவமானப்படுத்தி, ஊக்கத்தை குறைக்க முயல்வர். அதற்கு சற்றும் இடம் கொடுக்காமல் ஒதுங்கி, பயமின்றி தைரியமாக செயல்படுவோம்; நலம் பெறுவோம்!
பி.என். பரசுராமன்
ஆன்மிக தகவல்கள்!
மார்கழி அதிகாலையில் வாசலில் கோலம் இடாமலும், வீட்டில் விளக்கு ஏற்றாமலும் கோவிலுக்கு செல்லக் கூடாது.
