PUBLISHED ON : ஜூலை 30, 2017

ஆக., 3 ஆடிப்பெருக்கு; ஆக.,4 வரலட்சுமி விரதம்
குடும்பம் மற்றும் இயற்கையை பேணுதல் என்ற இரண்டு விஷயங்களில் மனிதர்கள் ஒற்றுமையை கடைப்பிடித்தால், வாழ்வில் அமைதியும், இன்பமும் ஏற்படும். இதனாலேயே, இயற்கையைக் காக்க ஆடிப்பெருக்கும், தம்பதியர் ஒற்றுமைக்கு வரலட்சுமி விரதம் என்ற விழாவையும் கொண்டாடினர், நம் முன்னோர். இவ்விரண்டு விழாக்களும், இந்த ஆண்டு, அடுத்தடுத்த நாளில் வருவது விசேஷம்.
'பெருக்கு' என்றால் பெருகுதல்; வீட்டில் செல்வம் கொழிக்க வேண்டுமானால் விவசாயம் செழிக்க வேண்டும். அதற்கு தேவை தண்ணீர்.
ஆனி, ஆடி மாதங்களில் பெரும்பாலான அணைகள் திறக்கப்படும். அப்போது மக்கள் ஆற்றுக்கோ, கால்வாய்க்கோ சென்று, மஞ்சளை அரைத்து, நீரில் கலந்து விடுவர். வெற்றிலையில் சூடம் கொளுத்தி, ஆற்றுக்கு தீபாராதனை செய்து மிதக்க விடுவர். ஆறுகளை புனிதமாகக் கருதி, ஆற்றில் கழிவுநீர் கலக்க அனுமதிக்க மாட்டார்கள். இன்று என்ன நிலை என்பது நமக்கே தெரியும்.
வரும் ஆடிப்பெருக்கன்று ஆறுகளைப் பாதுகாக்க நாம் அனைவரும் உறுதிமொழி எடுத்து, செயலில் இறங்க வேண்டும்; இது, காலத்தின் கட்டாயம்.
ஆன்மிக ரீதியாக இந்த நாளில் லட்சுமி தாயாருக்கு பால், தேன், தானியம், சர்க்கரை பொங்கல் படைத்து பூஜை செய்து வேண்டினால், மனம் குளிர்ந்து அருள்புரிவாள்.
அடுத்து வரலட்சுமி விரதம்... குடும்ப ஒற்றுமையைப் பேண, இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. கணவன், மனைவிக்கிடையே புரிதலும், ஒருவருக்கு ஒன்று என்றால் மற்றவர் தாங்கமாட்டார் என்ற நிலை இப்போது மாறி வருகிறது. இந்த விரதத்தின் நோக்கம் என்ன தெரியுமா?
தன் கணவரான திருமாலின் மார்பில் குடியிருப்பவள், லட்சுமி. இதைப் போன்று, கணவனின் நெஞ்சில் மனைவி இடம் பிடிக்க வேண்டும்; மனைவியின் மனம் நோகாமல் கணவன் நடந்து கொள்ள வேண்டும். விரதத்தன்று நோன்புக்கயிறு கட்டி, பாயசம் படைத்தால் மட்டும் போதாது; தம்பதியர் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அப்போது தான், குழந்தைகளும் அதை பின்பற்றுவர்.
இவ்விரண்டு விழாக்களையும் அர்த்தமுள்ள வகையில் கொண்டாடுவோம்; ஒற்றுமையைப் பேணுவோம்!
தி.செல்லப்பா
