PUBLISHED ON : மே 31, 2015

உத்தமர்களின் வாய்ச்சொல், சத்திய மார்க்கத்தையே உரைக்கும்; அதன் வழி நடந்தால் நல்லதையே அடைவோம்.
அரசர் ஒருவர், தேவேந்திரனை நோக்கி, பல காலம் தவம் இருந்தார். அவருடைய தவத்திற்கு இரங்கிய தேவேந்திரன், கற்பக மரத்தையே அரசருக்குக் கொடுத்து விட்டார்.
கேட்டதை மட்டுமல்ல, நினைத்ததை எல்லாம் கொடுக்கக் கூடிய கற்பக மரம் கிடைத்ததும், தலை கால் புரியாமல் மனம் போனபடி வாழ்ந்தார் அரசர்.
அரசரைப் பற்றி அறிந்த தத்தாத்திரேயர், 'தவசீலரான இந்த அரசன் கற்பக விருட்சத்தை பெற்றதும், கடைந்தேறும் வழியைப் பற்றி எண்ணாது, உலக இச்சைகளில் உழன்று கொண்டிருக்கிறானே... இவனுக்கு நல்லறிவு புகட்ட வேண்டும்...' என நினைத்தார்.
ஒரு நாள், அரண்மனைக்குள் நுழைந்த தத்தாத்திரேயர், 'விடு விடு' வென்று நடந்து போய், அரசருக்கு மட்டுமே உரித்தான உயர் ரக இருக்கையில் அமர்ந்தார்.
சேவகர்களால் அவரைத் தடுக்க முடியவில்லை.
தகவல் அறிந்த அரசர் வேகமாக வந்து பார்த்தார். 'யார் நீ... என்ன தைரியம் இருந்தால், என் இருக்கையில் அமர்வாய்... போ வெளியே...' என்றார்.
'மன்னா... கோபப்படாதே... இந்தச் சத்திரத்தில், நீ தங்கி இருப்பதைப் போலத் தான், நானும் தங்கியிருக்கிறேன். இதற்குப் போய் கோபப்படுகிறாயே...' என்றார்.
'இது ஒண்ணும் சத்திரமல்ல; என் அரண்மனை. போ வெளியே...' என்று கோபத்துடன் கூறினார்.
'ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, இங்கு வசித்து வருகிறாயோ...' என்றார் தத்தாத்திரேயர்.
'இல்லை... நான் பிறந்தது முதல், இங்கு தான் வாழ்ந்து வருகிறேன்...' என்று மன்னர் சொல்ல, 'உனக்கு முன் இங்கு இருந்தது யார்?' எனக் கேட்டார் தத்தாத்திரேயர்.
மன்னர் பொறுமை இழந்து, 'எனக்கு முன் என் தந்தை; அவருக்கு முன், என் தாத்தா; அதற்கு முன் என் கொள்ளுத் தாத்தா... இப்படிப் பல பேர் இங்கு தான் இருந்திருக்கின்றனர்...' என்றார்.
'ஆக, இங்கு யாருமே நிரந்தரமாகத் தங்கவில்லை. ஒருவர் வர, ஒருவர் போக என்று தான் இருந்துள்ளனர். அப்படி என்றால், இது சத்திரம் தானே? இதைப் போய் அரண்மனை என்கிறாயே... அதுவும் உன் அரண்மனை என்கிறாய். இது எப்படி?'' என, அமைதியாக கேட்டார் தத்தாத்ரேயர்.
மன்னருக்கு, 'சுருக்'கென்றது. தத்தாத்திரேயரின் திருவடிகளில் விழுந்து வணங்கி, உபதேசம் பெற்று உயர்ந்தார் அரசர்.
நல்லதையே கேட்போம்; நமக்கது உதவும்!
பி.என்.பரசுராமன்
திருமந்திரம்!
பதிபல ஆயது பண்டு இவ்வுலகம்
விதிபல செய்து ஒன்னும் மெய்ம்மை உணரார்
துதிபல தோத்திரம் சொல்ல வல்லாரும்
மதியிலர் நெஞ்சினுள் வாடுகின்றாரே!
கருத்து: பழங்காலம் முதல் இவ்வுலகத்தில், ஒரே பரம் பொருள் பலவாறாகச் சொல்லப்படுகிறது. அந்த இறைவனின் அருளை அடைவதற்காக, விதிமுறைப்படி சடங்குகளையும், விரதங்களையும் கடைபிடிப்பவர்கள், இறை உண்மையை உணர மாட்டாதவர்களாக இருக்கின்றனர். ஸ்தோத்திரங்களையும், துதிப்பாடல்களையும் சொல்லும் திறமை பெற்றவர்கள் கூட, இறை உண்மையை உணராது, கருத்தழிந்து மனவாட்டம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
- பரம்பொருள் ஒன்றே, பல தெய்வங்களாக இருக்கிறது; அதை உணர வேண்டும் என்பது கருத்து.
