PUBLISHED ON : நவ 27, 2016

டிச.3 திருச்சானூர் தேரோட்டம்
திருச்சானூரில் அருள்பாலிக்கிறாள், திருப்பதி வெங்கடாஜலபதியின் துணைவி அலமேலு மங்கை. இக்கோவிலில் கார்த்திகை மாதம் நடக்கும் பிரம்மோற்சவம் விசேஷமானது.
கிருஷ்ணாவதாரம் முடிந்து, பெருமாள் வைகுண்டத்தில் தங்கியிருந்த சமயம், பூலோகத்தில் கலியுகம் துவங்கி, அநியாயங்கள் பெருகின; எனவே, அவர் மீண்டும் பூமியில் அவதாரம் செய்யும்படி தேவர்களின் தந்தையான காஷ்யப முனிவர் தலைமையில், யாகம் துவங்கினர், முனிவர்கள்.
யாகத்தின் பலனை, சாந்த குணம் கொண்டுள்ள தெய்வத்துக்கே தருவதென்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, வைகுண்டம் சென்றார், பிருகு முனிவர். அங்கிருந்த திருமால், அவரைக் கண்டு கொள்ளாதவர் போல் நடித்தார். கோபமடைந்த பிருகு, திருமாலின் மார்பில் எட்டி உதைத்தார். அவரோ, உதைத்த பாதத்தையும், தடவி கொடுத்தார். இதையடுத்து, அவரே பொறுமையானவர் என்று முடிவு செய்தார், பிருகு முனிவர்.
ஆனால், திருமாலின் மார்பில் வசிக்கும் லட்சுமி தாயார், பிருகுவின் உதை, தன் மீது பட்டதால் கோபமடைந்து, அவரை தண்டிக்கும்படி கணவனிடம் வேண்டினாள்; மறுத்து விட்டார், திருமால்.
இதனால், லட்சுமி கோபம் கொண்டு, பூலோகத்தை அடைந்து, தவத்தில் ஆழ்ந்தாள். மனைவியைப் பிரிந்த திருமாலும், மானிட அவதாரம் எடுத்து, அவளைத் தேடி பூலோகம் வந்தவர், திருவேங்கட மலையில், ஒரு புற்றில், கண்மூடி அமர்ந்தார். அவருக்கு பசி கடுமையாக இருந்தது.
இதையறிந்து, கணவர் மீது இரக்கம் கொண்டு, மாடு மேய்க்கும் பெண் போன்று, ஒரு பசுவையும், கன்றையும் ஓட்டி வந்து, அவ்வூர் மன்னனிடம் விற்றாள், லட்சுமி தாயார்.
அப்பசு மேய்ச்சலுக்கு சென்ற போது, திருமால் இருந்த புற்றுக்குச் சென்று, பால் சொரிந்தது. இதைப் பார்த்த மாடு மேய்ப்பவன், பசுவை அடிக்க, அது பெருமாளின் தலையில் பட்டு, ரத்தம் சிந்தியது.
தன் காயம் குணமாக, மூலிகை தேடிச் சென்ற பெருமாள், வராஹ மூர்த்தியின் ஆசிரமத்தைக் கண்டார். அங்கிருந்த வகுளாதேவி, (முற்பிறவியில் கண்ணனின் வளர்ப்பு தாயாக இருந்த யசோதை.) தன் பிள்ளையான திருமாலைக் கண்டு, முற்பிறவி ஞாபகம் வரப்பெற்றாள். திருமாலும், வகுளாதேவியை, 'அம்மா...' என்று அழைத்தார். அவள், தன் பிள்ளைக்கு, சீனிவாசன் (செல்வம் பொருந்தியவன்) என்று பெயரிட்டு, காயம் தீர மருந்திட்டாள்.
திருப்பதி அருகிலுள்ள சந்திரகிரி பகுதியை, ஆகாசராஜன் என்பவன் ஆண்டு வந்தான். பிள்ளை வரம் வேண்டி, புத்திர காமேஷ்டி யாகம் செய்வதற்காக, யாகம் செய்யும் இடத்தை செம்மைப்படுத்தும் போது, பூமியில் புதைந்திருந்த பெட்டிக்குள், தாமரை மலரில், படுத்த நிலையில், ஒரு பெண் குழந்தை கிடந்தது. தாமரைக்கு, 'பத்மம்' என்று பெயர் உண்டு; எனவே குழந்தைக்கு, பத்மாவதி என்று பெயரிட்டான்.
ராமாவதாரத்தின் போது, வேதவதி என்னும் பக்தை, ராமனை மணாளனாக பெற வேண்டி, தவம் செய்தாள். ராமனும், அவளிடம், தான் அப்பிறப்பில் ஏகபத்தினி விரதன் என்பதால், பின்னாளில், அவளை மணம் செய்து கொள்வதாக வாக்குறுதி தந்தார். அதன்படி, பத்மாவதியாக பிறந்தாள் வேதவதி. சீனிவாச பெருமாளுக்கும், பத்மாவதிக்கும் திருமணம் நடந்தது. அதன்பின், கலியுகம் முடியும் வரை, பக்தர்களுக்கு அருள் தர, திருமலையில் எழுந்தருளினார், சீனிவாசன்.
சோழமன்னன் தொண்டைமான், தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் உதவியுடன், பெருமாளுக்கு கோவில் எழுப்பினார். பத்மாவதி தாயார், அலமேலுமங்காபுரத்தில் அருளாட்சி செய்கிறாள். சீனிவாசப் பெருமாள், தினமும் திருச்சானூர் வந்து தங்கி, காலையில், திருமலை திரும்பி விடுவதாக, ஐதீகம்.
தற்போது, இங்கு, கார்த்திகை பிரம்மோற்சவம், நடைபெறுகிறது. டிச.,3ல், தாயார், தேரில் பவனி வருவதை காண, கிளம்புவோம்.
தி.செல்லப்பா
