PUBLISHED ON : ஜன 15, 2017

திருநெல்வேலி என்றால் அல்வா, தூத்துக்குடி என்றால் மக்ரோன்ஸ் என்று ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஸ்பெஷல் இனிப்போ, காரமோ அல்லது ஏதோ ஒரு சிறந்த உணவு வகை இருக்கும். அவ்வகையில், வெவ்வேறு ஊர்களின் சிறப்பு உணவு வகைகள் இப்பகுதியில் இடம் பெறும்.
தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில், சக்கை போடு போடுகிறது, பால் பன். சுடச்சுட வாழை இலையில் வைத்து, அதன் மேல் சீனிப்பாகு ஊற்றி சாப்பிட, தேவாமிர்தமாக இருக்கும். தென் மாவட்டங்களில், பரவலாக இருந்தாலும், மதுரை, வாடிப்பட்டி, பாலமேடு, தேனி, கம்பம் மற்றும் கூடலுார் போன்ற ஊர்களில், இது மிகவும் பிரபலம்.
பெரிய, 'சைஸ்' குலோப் ஜாமூன் போல இருக்கும், பால்பன், பெரும்பாலான டீக்கடைகளில், காலை, 5:00 மணிக்கெல்லாம், சுடச்சுட கிடைக்கிறது. மிருதுவாக இருப்பதால், குழந்தைகள் முதல், பல் போன முதியோர் வரை அனைவரும் சாப்பிடலாம்.
பால் பன் தயாரிக்கும் வடமலைராஜ், 'பசி தாங்கும் என்பதால், காலையில், வேலைக்கு செல்வோரின் உணவுப் பட்டியலில், இதற்கு முக்கிய இடமுண்டு. முன்பு, கருப்பட்டி அல்லது பனை வெல்லம் சேர்த்து, பாகு தயாரிப்போம்; அது, நோயை குணப்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கும். இப்ப, வெள்ளை சர்க்கரைக்கு, மக்கள் பழகி விட்ட நிலையில், பழைய கலவையை, யாரும் விரும்புவதில்லை...' என்கிறார்.
ஒரு கிலோ மைதா மாவில், தண்ணீர் மற்றும் 100 மி.லி., தயிர் விட்டு, ஜெல்லி போன்ற பதத்திற்கு பிசைந்து, சிறிது சோடா உப்பு சேர்க்க வேண்டும். அரை மணி நேரம் கழித்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, நல்லெண்ணெயில் பொரித்தெடுத்து, அவற்றை சீனிப்பாகில் ஊற விட்டு எடுத்தால், பால் பன் தயார்! பாகில், ஏலக்காய் மற்றும் சுக்கு சேர்த்தால், வாசமாகவும், சுவையாகவும் இருக்கும்.
வடமலைராஜ் மொபைல் எண்: 8438110392.
- மு.ஆதவன்
