
ஆக., 16 ஆடித் தபசு
மதுரையில் மீனாட்சி அம்மனைப் போல, சங்கரன்கோவிலில், கோமதி அம்மனுக்கு தனி சிறப்பு உண்டு.
சிவ பக்தனான, சங்கன் எனும் நாக அரசனுக்கும், பெருமாள் பக்தனான பதுமன் எனும் மற்றொரு நாக அரசனுக்கும், 'சிவன் பெரியவரா, திருமால் பெரியவரா...' என்ற வாதம் எழுந்தது. இதற்கு விடை தேடி பார்வதியிடம் வந்தனர். 'இருவரும் சம சக்தி கொண்டவர்களே...' என்று பதிலளித்தாள் அம்பாள்; அதை, அவர்கள் அரை மனதாகவே ஏற்றனர்.
இதனால், உலக மக்கள், 'அரியும், அரனும் ஒன்று' என்பதை அறிய வேண்டும் என்பதற்காக, இருவரும் இணைந்து காட்சி தரும்படி வேண்டி, பூலோகத்தில் தவமிருந்தாள், அம்பிகை. அவளுடன் வானுலக தேவர்கள், பசுக்களாக மாறி வந்தனர். பசுவை, 'கோ' என்றும் 'ஆ' என்றும் சொல்வர். அதனால், கோமதி மற்றும் ஆவுடையம்மை எனும் பெயர் பெற்றாள், அம்பாள்.
'மதி' என்பதற்கு, நிலா போன்ற முகம் என்பது பொருள். அம்பாளின் முகம் அதைவிட பிரகாசமானது. கோமதியம்மையின் தவத்தை ஏற்று, 'சங்கர நாராயணராக' இணைந்து, காட்சி தந்தனர், சிவனும், விஷ்ணுவும்! சிவன், சங்கரலிங்கமாகவும் எழுந்தருளினார்.
கிராமங்களில், 'அரியும் சிவனும் ஒண்ணு; இதை அறியாதவன் வாயில் மண்ணு' என்று ஒரு சொலவடை உண்டு. இதில், முதல் வரிக்கு பொருள் தெளிவாகப் புரியும்; அடுத்த வார்த்தையில் தான் சூட்சுமம் இருக்கிறது. 'அறியாதவன்' என்பதை, அரி + யாதவன் என பிரித்தால், யாதவ குலத்தில் பிறந்த அரியாகிய கிருஷ்ணன் என, பொருள் கிடைக்கும்.
மண்ணைத் தின்ற கிருஷ்ணரை, அவரது வளர்ப்புத் தாய் யசோதை கண்டித்து, வாயைத் திறக்கச் சொன்னாள். அப்போது, அவரது வாயில் இந்த பிரபஞ்சமே தெரிந்தது. இதைத் தான், 'அரியாதவன் வாயில் மண்ணு' என்பர். இதுவே திரிந்து, 'அறியாதவன் வாய்' என, மாறிவிட்டதாகச் சொல்வர்.
தபஸ் மற்றும் தபசு என்றால் தவம் என்று பொருள். அம்பாள், சிவ விஷ்ணுவை சங்கர நாராயணராக காட்சி தர வேண்டி தவமிருந்து அவரது காட்சியைப் பெற்ற நாளே ஆடித்தபசு; இவ்விழா, 12 நாட்கள் நடக்கும்.
இந்நாளில், அம்பிகை தபசு மண்டபத்தில் எழுந்தருளி, கையில் விபூதிப்பையுடன் ஒரு கால் ஊன்றி தவம் இருக்கும் காட்சி நடக்கும். அன்று மாலை, சங்கரநாராயணர் அம்பாளுக்கு காட்சி தருகிறார். அதன்பின், சங்கரலிங்க சுவாமி, யானை வாகனத்தில், அம்பாளுடன் பவனி வருவார்.
அப்போது, பக்தர்கள் அம்பாளுக்கு காணிக்கையாக, தங்கள் வயல்களில் விளைந்த பொருட்களை வீசுவர். இதனால், விளைச்சல் பெருகும் என்பது, நம்பிக்கை. வயல் மற்றும் வீடுகளில் பூச்சி தென்படாமல் இருக்க, மண்ணாலான அதன் சிறு உருவச் சிலைகளை, உண்டியலில் போடும் வழக்கமும் உண்டு.
சிவன், அம்பாள் சன்னிதிகளுக்கு நடுவில், சங்கர நாராயணர் சன்னிதி உள்ளது. காலை பூஜையில் மட்டும் திருமாலுக்குரிய துளசி தீர்த்தம் தரப்படும்; மற்ற நேரங்களில் விபூதி தருவர். ஆடித்தபசு அன்று மட்டுமே, அம்பாளுக்கு காட்சி தர, வெளியே வருவார், சங்கரநாராயணன்.
ஆடித்தபசு நன்னாளில், கோமதி தாயையும், சங்கரநாராயணரையும் வழிபட்டு, விளைச்சல் பெருக வேண்டுமென வேண்டிக் கொள்வோம்!
தி.செல்லப்பா

