PUBLISHED ON : நவ 09, 2014

நள்ளிரவு மணி, 12:00 -
என் நீண்ட நாள் கனவு நாவலான, 'அம்மா'விற்கான ஆரம்ப புள்ளி வைத்தபோது, அலைபேசி அழைத்தது. எடுத்தேன்; மறுமுனையில் புவனா. ''ஹலோ...'' என்றதில் என் குரல் தெளிவு, என் உறக்கத்தைப் பற்றி சொல்லி விட்டது போலும்.
''என்னடா இன்னும் தூங்கலயா... சரி சரி... இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.''
''ரொம்ப நன்றி; ஆமா... நீ ஏன் இன்னும் தூங்கல?'' என்றேன்.
''உனக்கு வாழ்த்து சொல்ல தான் காத்திட்டிருந்தேன்; ஓகே... நீ தூங்கு. காலைல வீட்டுக்கு வர்றேன்; அம்மாகிட்ட சொல்லிடு,'' என்றவள், மீண்டும் ஒரு முறை, வாழ்த்துகளை சொல்லி தொடர்பை துண்டித்தாள்.
புவனா என் நீண்ட நாள் தோழி; என் எழுத்துக்களின் முதல் வாசகி. எந்த ஒரு விமர்சனமும், திருத்தங்களையும் சொல்லாதவள். 'இயற்கையையும், இயல்பையும் அப்படியே ஏத்துக்க பழகிக்கணும். வாழ்க்கை என்பது குழந்தைகளின் சுவற்றுக் கிறுக்கல்கள். எங்கு துவங்கும், எங்கு முடியும் என, நம்மால் தீர்மானிக்க முடியாது...'என்பாள். புன்னகை பூந்தோட்டத்தின் சொந்தக்காரி. அவளின் நீண்ட நாள் விண்ணப்பம், என் பிறந்த நாளில், அன்னை இல்லத்திற்கு ஒரு நாள் உணவு வழங்க வேண்டும் என்பது. அதற்கான ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தாள். அதற்காக, நாளை, அன்னை ஆதரவற்றோர் இல்லம் செல்ல வேண்டும்.
எனக்கு சம்பாத்தியம் கம்ப்யூட்டரில்; மன நிறைவு கவிதையில். இந்த நூற்றாண்டில் சுமாராக எழுதுபவர்களின் வாழ்க்கை முறைக்கு நானும் விதிவிலக்கல்ல. பணத் தேவைக்கு ஒரு வேலை; ஆத்ம திருப்திக்கு எழுத்து.
வழக்கம் போல் இன்றும் கிளம்பி, நண்பர்களின் வாழ்த்துகளுக்கு நன்றி சொல்லி, சாமி கும்பிட்டு, அம்மாவிடம் ஆசீர்வாதம் பெற்றபோது, ''அப்பாவிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கோ,'' கையில் வைத்திருந்த பூச்சரத்தை கொடுத்தபடி சொன்னாள் அம்மா.
அப்பாவின் புகைப்படத்திற்கு பூச்சரமிட்டு வணங்கிய போது, நினைவுகள் பின்னோக்கி நகர்ந்ததை தவிர்க்க இயலவில்லை. சில நொடிகள் அப்பா, பள்ளி பருவம், கிராமத்து வாழ்க்கை என உணரப்பட்ட அதிர்வுகளில் இருந்து மீட்டுக் கொண்டு வந்தாள் அம்மா. ''டேய்... டிபன் எடுத்து வச்சுருக்கேன், சாப்பிட வா,'' என்றாள்.
சாப்பிடும் வேளையில், ''புவனா போன் பண்ணியிருந்தா... கிளம்பி வர்றாளாம்; போகும்போது கோவிலுக்கு போயிட்டு அப்படியே அன்னை ஆதரவற்றோர் இல்லத்திற்கு போகணுமாம்...கூட வாங்கன்னு கூப்பிட்டா,'' என்றாள்.
''ஆமாம்மா நேத்தே உங்ககிட்ட சொல்லச் சொன்னா... நான் தான் மறந்துட்டேன். இன்னைக்கு ஒரு நாள் சாப்பாட்டு செலவ நாம செய்யறதுன்னு ஏற்பாடு செய்துருக்கா; வா போயிட்டு வந்திரலாம்,'' என்றேன்.
''நா எதுக்குப்பா... நீங்க போயிட்டு வாங்க. எனக்கு ஒடம்புக்கு ஒரு மாதிரியா இருக்கு; நான் கோவிலுக்கு வந்திட்டு அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு வந்திடறேன்,'' என்றாள்.
''இல்லம்மா நீயும் வா. கொஞ்ச நேரத்துல வந்திடலாம். அதுவுமில்லாம சாப்பாட்டுக்கு பணம் கொடுக்கிறத விட, அவங்க கூட உட்கார்ந்து ஒரு வேளை சாப்பிட்டா, அங்க இருக்கிறவங்களுக்கு ஆறுதலா இருக்கும்ல,''என்றேன்.
''சரிப்பா நான் கிளம்பறேன்; நீ சாப்பிடு. அந்த பாத்திரத்தில் பாயாசம் செய்து வச்சிருக்கேன் புவனா வந்ததும் எடுத்துக் கொடு,'' என்று சொல்லி, தன் அறைக்கு சென்றாள் அம்மா.
பத்து நிமிட இடைவெளியில் புவனா வந்தாள்.
''அம்மா தயாராகிட்டு இருக்காங்க; நீ ஸ்வீட் சாப்பிடு,'' என்று அவளுக்கு ஸ்வீட் எடுத்து கொடுத்தேன்.
சாப்பிட்டுக் கொண்டே, ''புது டிரஸ் நல்லாயிருக்கு, நான் தான் எடுக்கும்போதே சொன்னேனில்ல... உனக்கு இந்த கலர் நல்லா இருக்கும்ன்னு,'' என்றாள்.
சிறிது நேரத்தில் அம்மாவும் புறப்பட, கோவிலுக்கு சென்ற பின், நேராக, அன்னை இல்லம் சென்றோம்.
வரும் வழியில் அம்மாவின் அறிவுரையின்படி இனிப்புகள் வாங்கிக் கொண்டோம். இல்லத்தின் பொறுப்பாளரை சந்தித்தோம். அங்கு தங்கியிருக்கும் நபர்களோடு சிறிது நேரம் உரையாடும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
இப்படியான உரையாடல்கள் அவர்களின் தனிமை உணர்வை பெருமளவு குறைக்கும் என்பது அவரின் நம்பிக்கை. உண்மைதான், நமக்கென யாரும் இல்லையென்ற உணர்வு கொடுக்கிற வலியை, வார்த்தைகளில் விவரித்துவிட முடியாது. சிலரிடம் உரையாடியதிலிருந்து அவர்கள் இம்மாதிரியான சந்திப்புகளை, உரையாடல்களை மகிழ்ச்சியான தருணமாகவே எண்ணுகின்றனர் என்பதை உணர்ந்தேன்.
எப்போதும் அதிகம் பேசாத அம்மா, இல்லத்தில் உள்ளோரிடம் சகஜமாக பேசியது எனக்கு ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. அதிலும், தன் வயது ஒத்த பெண்களோடு குழந்தை போல் பேசிக் கொண்டிருந்தாள். ஒரு தருணத்தில் அவளும் அந்த தனிமையை உணர்ந்தவள் தானே! புவனாவிடம் சொன்னேன்...
''தனிமையின் வலிமை மற்றும் வலி பெரும்பாலும் காதலை மையப்படுத்தியே ஒரு கவிதையாகவோ, கதையாகவோ சொல்லப்படுகிறது. ஆனால், மிகப் பெரிய வலியை கொண்டுள்ள இவர்களது வாழ்க்கையின் வலிகள், மிக குறைவாகவே பதிவு செய்யப்படுகின்றன,'' என்றேன்.
உடனே, புவனாவின் பார்வை, 'இதை சொல்லத்தான் இங்கு அழைத்து வந்தேன்...' என்றது.
''எனக்கு ஒரு உதவி செய்வாயா... இவர்களைப் பற்றி இவர்களுக்காக ஒரு கவிதை எழுதணும்; அதன் மூலம் கிடைக்கும் பணமும், அங்கீகாரமும் இவர்களுக்காக சமர்பிக்கப்படணும்,'' என்றாள்.
''சரி,'' என்றேன்.
பேசிக் கொண்டே தோட்டத்துப் பக்கம் செல்ல, 40 வயது மதிக்கதக்க ஒரு பெண், அங்குள்ள செடிகளுக்கு நீர் ஊற்றிக் கொண்டிருந்தாள். எங்கோ பார்த்த முகமாய் இருக்க, அருகே சென்றேன்.
அது, பூரணியக்கா!
''பூரணியக்கா...'' என்று அழைத்தேன்.
''ஆமா... நீங்க...'' என இழுத்தவள், உற்று நோக்கினாள். சில நொடிகளில் ஞாபகம் வந்தவளாய், ''நீ பி.டி., மாஸ்டர் பையன் தானே...'' என்று கேட்டாள்.
எத்தனையோ ஆண்டுகள் கடந்து போயிருந்தாலும் என் முகம் அவளுக்கு நினைவில் இருந்தது. எட்டு ஆண்டுகளுக்கு பின், அவளை சந்திக்கிறேன்.
புவனாவிடம், பூரணியக்கா, ''இவரு எங்க ஊரு பி.டி., மாஸ்டர் பையன். உங்களுக்கு பழக்கமாம்மா?'' என்று கேட்டாள்.
''ஆமாம்... நாங்க நண்பர்கள்; ஆமா... உங்களோட பேரு அன்னம் தானே,'' என வினவி முடிக்கும் முன்பே குறுக்கிட்ட பூரணியக்கா, ''என் பேரு அன்னபூரணிங்க,'' என்றாள்.
''யாராவது பூரணின்னு கூப்பிட்டா, எனக்கு என் ஊர் ஞாபகம் வந்திரும்; அதனாலயே எல்லார்க்கிட்டயும், என் பேரு அன்னம்ன்னு சொல்லி வச்சுருக்கேன்,'' என்றாள்.
பூரணியக்கா நான் வளர்ந்த கிராமத்தில் வாழ்ந்தவள். சிறு வயதில் கணவனை இழந்து, பின்னொரு நாளில் பெயர் தெரியாத வியாதிக்கு தன் தகப்பனும் பலியாக, தனியொரு ஆளாக, கிராமத்தில் வசித்து வந்தாள்.
''இங்க எப்ப வந்தீங்க?'' என்றேன்.''அதாச்சு தம்பி... ஆறேழு வருஷம்,'' என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அலுவலகத்தில் இருந்து, 'அன்னம்...' என்ற அழைப்பு வர, ''அய்யா கூப்பிடுறாங்க; இதோ வர்றேன்,'' என்று சொல்லி போனாள்.
தனி மனுஷியாக வாழ்ந்தவள், இப்படி ஒரு இடத்தில் வாழ்வது, எனக்கு நியாயமாகவே பட்டது. ஆனால், கிராமத்தை விட்டு வர விரும்பாத பூரணியக்கா, ஏன் இங்கே வந்தாள் என்று எழுந்த கேள்வியை, எனக்குள்ளே வைத்துக் கொண்டேன்.
நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், பள்ளிக்கு அருகே குடியிருந்த பூரணியக்கா, வீட்டுத் திண்ணையிலேயே பெட்டி கடை வைத்திருந்தாள்.
பள்ளிக்கு வரும் பிள்ளைகளுக்கு மிட்டாய், மாங்காய், ஆரஞ்சு, பலா பழம் என விற்பதோடு, ஆசிரியர்களின் தேவைக்காக பீடி, சிகரெட்டும் விற்பாள். அதில் கிடைக்கும் சிறு வருமானமே அவளின் ஜீவனம். பள்ளி விடுமுறை நாட்களிலும் அவள் கடை இயங்கும். ஆனால், மாங்காய், ஆரஞ்சு போன்றவை இல்லாமல் இருக்கும்.
கிராமத்து பள்ளியென்பதால் சில ஆசிரியர்கள் பள்ளி வளாகத்துக்குள் புகைப்பிடிப்பது சாதாரண நிகழ்ச்சி. ஆனால், என் அப்பா பி.டி., மாஸ்டர் மட்டும் பள்ளி வளாகத்துக்குள் புகைபிடிக்க மாட்டார்; பூரணியக்கா கடையில் மறைவாக நின்று புகைப்பிடிப்பார்.
அப்பா போலீஸ் அதிகாரி மாதிரி இருப்பார்; மிலிட்டரியில் சேர்வதற்காக தன் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருந்ததாக கூறுவார். 'ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் பி.டி., மாஸ்டர் வேலை கிடைக்கவே, மிலிட்டரியில் சேரவில்லை...' என்று, அப்பா தன் நண்பர்களிடம் பேசியதை, நானும் கேட்டிருக்கிறேன்.
அப்பாவுக்கு சிகரெட் பிடிக்கும்; மிகவும் ரசித்து புகைப்பார். அவர், சிகரெட் பிடிக்கும்போது ரொம்ப அழகாக தெரிவார். அதிலும், வில்ஸ் சிகரெட் தான் பிடிப்பார். அந்த ஊரிலே அப்பாவை தவிர வேறு எத்தனை பேர் இந்த சிகரெட் பிடிப்பர் என்று எனக்கு தெரியாது. ஆனால், அப்பாவுக்காக மட்டுமே பூரணியக்கா கடையில் வில்ஸ் பில்டர் வாங்கப்படும்.
விடுமுறை நாட்களில் கூட சிகரெட் பிடிப்பதற்காக, அப்பா, பூரணியக்கா கடைக்கு வருவார். சில சமயங்களில் நானும் உடன் வருவேன். அவருடன் பைக்கில் அழைத்துச் செல்வார் என்ற ஒரே காரணத்துக்காக. அப்போதெல்லாம் பூரணியக்கா, என்னிடம் ரொம்ப அன்பாக பேசுவாள். தலையில் கை வைத்து கேசம் கோதுவாள்; கன்னங்களைத் தடவி செல்லமாய் கிள்ளுவாள்; அப்பா சிகரெட் பிடிக்கும் சமயத்தில் எனக்கு ஏதேனும் தின்னக் கொடுப்பாள்.
ஒரு திருமண விழாவிற்கு சென்று திரும்புகையில், பேருந்து விபத்து ஒன்றில் என் அப்பா இறந்தபோது, ஒரே இரவில் பாலைவனமாகிப் போனது என் குடும்ப தீவு. அம்மாவிற்கு என்ன செய்வதென்றே தெரியாத நிலையில், அம்மா வழி தாத்தாவின் ஆலோசனைப்படி, அம்மாவின் பூர்வீகமான பரமக்குடிக்கு இடம் பெயர்ந்தோம். படிப்பறிவில்லாத அம்மா, என்னை படிக்க வைத்தது இங்கு தான்.
அப்பா இறந்து இரண்டு மாதங்கள் கழித்து, பள்ளியில் டி.சி., வாங்குவதற்காகவும், எங்களுக்கென்றிருந்த வீட்டை அப்பாவின் நண்பர் ஒருவரின் பராமரிப்பில் விடுவதற்காகவும் நானும், அம்மாவும் கிராமத்திற்கு சென்றிருந்தோம். அப்போது பூரணியக்காவின் வீடும், கடையும் பூட்டப்பட்டிருந்தது. அதன் பின், இரண்டு மாதத்திற்கு ஒரு முறையேனும் அம்மாவும், தாத்தாவும் கிராமம் சென்று வருவர். நான் சில ஆண்டுகள் கழித்து ஒரு முறை அம்மாவோடு கிராமம் சென்று வந்தேன். அப்போதும் பூரணியக்காவின் வீடும், கடையும் பூட்டப்பட்டிருந்தது.
மழையும், வெயிலும், காற்றும் பாதித்தது போக, தனி ஒருத்தி வாழ்ந்து வந்த சுவடுகள் மறைந்த நிலையில், ஓட்டை விழுந்த கூரையும், பாதி கரைந்திருந்த சுவர்களுமாக இருந்தது பூரணியக்கா வீடு. நண்பர்களிடம் விசாரித்ததில், யாருக்கும் பூரணியக்கா எங்கு இருக்கிறாள் என்று தெரியவில்லை. நானும், காலங்களால் மறக்கப்பட்ட நினைவுகளின் பட்டியலில், பூரணியக்காவும் சேர்க்கப்பட்டதாக எண்ணி, மறந்து விட்டேன்.
இன்று எதிர்பாராத விதமாக அவளை சந்தித்தது, மீண்டும் ஒரு முறை என் பள்ளி நாட்களையும், என் அப்பாவையும் நினைவூட்டியது.
தனி ஒரு பெண் அதிலும் சிறு வயதில் கணவனை பறி கொடுத்த ஒருத்தி, எத்தனை நாள் நிம்மதியாக இருந்திட முடியும் அல்லது இப்படி ஒரு இடம் இருக்கிறதென்று அவள் யார் மூலமாவது அறிந்திருக்க வேண்டும்.
இல்லத்தில் இருந்து கிளம்பும் வேளையில் வராண்டாவில், ஒரு பையன் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருப்பதையும், அவனருகில் அம்மா நின்று கொண்டிருப்பதையும் கவனித்தேன். சுருட்டை முடியுள்ள அவன், தன் இடது கையால் ஓவியம் வரைந்து கொண்டிருந்தான். நான் அம்மாவை அழைத்தேன்; அம்மா, நினைவில் இருந்து மீண்டவளாக என்னைப் பார்த்து, ''கிளம்பலாம்...'' என்றாள்.
அம்மா, நான், புவனா மூவரும் வீடு வந்து சேர்ந்தோம். வழியெங்கும் அப்பாவின் நினைவுகள், அம்மாவிற்கும் இருந்திருக்கக்கூடும்.
இரவு மணி, 10:30; என் நாவலின் முதல் பக்கம், ஒரு திருத்தத்தோடு எழுதப்பட்டிருந்தது... 'அம்மா... அப்பாவாகியிருந்தார்!' காரணம், அப்பாவின் நினைவுகள் மட்டுமல்ல, பூரணியக்கா, அப்பாவின் சுருள் சுருளான முடி, அவரது இடது கை பழக்கம், ஓவியத்தின் மீது அவர் கொண்டிருந்த விருப்பம்...
எல்லாம் தெரிந்தும் உணர்வுகளை உறைய வைத்து, உறங்கிக் கொண்டிருந்தாள் அம்மா. சில ஒப்புதல்களோடும், சில மறுப்புகளோடும் நான், என் நாவலை எழுதிக் கொண்டிருந்தேன்.
என்.சிவபாலன்
வயது: 30.
கல்வித்தகுதி: டி.எம்.இ., - பி.பி.ஏ., - எம்.பி.ஏ.,
பணி: கோவை அக்வா டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் மேலாளர், புத்தகம் படிப்பது, சிறுகதை எழுதுவது, திரைப் படம் பார்ப்பது இவரது பொழுது போக்குகள்.
