தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பணம்!

பணம்!

பணம்!


PUBLISHED ON : ஜன 08, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 08, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தலையணையில் முகம் புதைத்து, குப்புற படுத்திருந்தான், இசக்கிராஜா. அவனுக்கு அருகில், மனைவி, மருதாயும், 12 வயது மகன் மற்றும் 16 வயது மகளும் படுத்திருந்தனர்.

குடும்பத்தின் நான்கு உறுப்பினர்களுக்கும், 90 சதவீத மானியத்தில், மத்திய அரசு வழங்கிய, 'ஸ்மார்ட்' போன்கள் தலைமாட்டில், வரிசையாக, 'சார்ஜ்' ஆகிக் கொண்டிருந்தன. 'ஸ்மார்ட் போன்'களில் நூற்றுக்கணக்கான, 'ஆப்'கள் இலவசமாய் பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்தன. ரொக்கமில்லா பண பரிவர்த்தனையை, திறம்பட செய்ய, 15 நாட்கள் பயிற்சி வகுப்புக்கு, குடும்பத்தோடு சென்று வந்திருந்தான், இசக்கிராஜா.

படுக்கையில் இருந்து எழுந்த இசக்கிராஜா, நாட்காட்டியில் தாளை கிழிக்க, அது, ஜன., 5, 2018 என்றது!

தன் மணிபர்சை திறந்து ஆராய்ந்தான். உள்ளே, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஆதார் கார்டு, பான் கார்டு, வாகனம் ஓட்டுவதற்கான உரிம அட்டை, வாக்காளர் அட்டை, பெட்ரோ கார்டு, ரேஷன் ஸ்மார்ட் கார்டு இருந்தன; திருப்தியானான். அவனது மொபைல் போனில் குறுஞ்செய்தி வந்ததற்கான, சங்கீத சொடுக்கல் கேட்டதும், எடுத்துப் பார்த்தான். அதில், ஏர்டெல் டி.டி.ஹெச்.,க்கான, மாதாந்திர கட்டணம், 200 ரூபாயை, கட்ட சொல்லி அறிவுறுத்தப் பட்டிருந்தது.

டெபிட் கார்டை எடுத்து, தன் வங்கி கணக்கு மூலம், பணம் கட்டினான். பின், பல் துலக்கி, தெருவின் முகப்பில் இருக்கும், டீக்கடைக்கு சென்று டீ குடித்து, வீட்டுக்கும் பார்சல் டீ வாங்கி, கார்டை நீட்டினான்; 'ஸ்வைப்' மிஷனில், கார்டை தேய்த்து, 75 ரூபாயை எடுத்துக் கொண்டான், டீக்கடைக்காரன். வீடு திரும்பிய இசக்கிராஜா, பார்சல் டீயை மனைவி, மக்களுக்கு மூன்று டம்ளர்களில் பிரித்துக் கொடுத்தான்.

''கீரேய்...'' கூடைக்காரி கூவினாள்.

அவளை அழைத்து, ஒரு கீரைக்கட்டு, ஒரு குட்டி சுரைக்காய், ஒரு வாழைத்தண்டு, நான்கு முருங்கைக்காய்கள் வாங்கினாள், மருதாயி. தன், ஸ்மார்ட் போன் மூலம், கீரைக்காரியின், வங்கிக் கணக்கில், 60 ரூபாய் போட்டாள்.

''வேலைக்கு கிளம்பிட்டேன்... ஏதாவது வேணுமா புள்ள...'' என்று கேட்டான், இசக்கி.

''வீட்டு செலவுக்கு, 300 ரூபா, என் கணக்குல போட்டுட்டு போய்யா...''

நெட்பேங்கிங் மூலம், 300 ரூபாயை அவள் வங்கிக் கணக்கில் போட, பணம் கழிந்ததற்கும், பணம் வந்ததற்கும், இரு வெவ்வேறு குறுஞ்செய்திகள், இருவரின், 'ஸ்மார்ட்' போனிலும் வந்தன.

''கரன்ட் பில், 176.50 ரூபாய் மறக்காம கட்டு!''

உடனே பணம் கட்டினான்.

''மகனுக்கு ஸ்கூல் பீஸ், ரெண்டாயிரம் ரூபா கட்டணும்!''

அதையும் கட்டியவன், தன், மொபெட்டில் கிளம்பினான். வழியில் இருந்த பெட்ரோல் பங்க்கில், வாகனத்தை நிறுத்தினான்.

பங்க்கின் இடது புறத்தில், மிகப்பெரிய பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதில், வெண்தாடி வேந்தர் பிரதமர் மோடி, கையாட்டியபடி நின்றிருந்தார். மோடியின் புகைப்படத்தின் அருகில், 'காகிதப்பணம் வைத்துக் கொள்வது பெரும் குற்றம்; மீறினால், ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். ரொக்கமில்லா, 'டிஜிட்டல்' பணவர்த்தனையே, நாட்டுக்கு நலம் பயக்கும்...' என்கிற வாசகங்கள், கொட்டை எழுத்தில், அச்சிடப்பட்டிருந்தன.

இசக்கிராஜாவின், பெட்ரோ கார்டை வாங்கிப் பார்த்த, பெட்ரோல் போடுபவன், ''உன் பெட்ரோ கார்டு, காலாவதி ஆயிடுச்சு; 500 ரூபா கட்டி, புதுப்பிச்சுக்க,''என்றான்.

இசக்கி, டெபிட் கார்டை நீட்டியதும், 'ஸ்வைப்' மிஷனில், கார்டை தேய்த்து, புது பெட்ரோ கார்டு வழங்கினான்.

வாகனத்துக்கு, ஒரு லிட்டர் பிரீமியம் பெட்ரோலும், 30 மில்லி ஆயிலும், போடப்பட்டது. நகரின், புறநகர் பகுதிக்கு விரைந்தான், இசக்கி. வாஜ்பாய் நகரில், ஆங்காங்கே, புதிய வீடுகள் கட்டப்பட்டு கொண்டிருந்தன. ஒரு வீட்டின் முன், வாகனத்தை நிறுத்தி, ஸ்டாண்டிட்டான்.

இரு சித்தாள்களும், உதவி கொத்தனார் ஒருவரும் வந்திருந்தனர். அவர்கள் இசக்கிராஜாவுக்கு வணக்கம் போட்டனர்.

'ஸ்டோர் ரூம்' சாவியை நீட்டிய, இசக்கிராஜா, ''ஒரு சிமென்ட் மூட்டையை, 'ஓபன்' செய்து, சிமென்ட்டையும், மணலையும் கலந்து கலவை, 'ரெடி' செய்யுங்க,'' என்று உத்தரவிட்டான்.

பின், தன் கொத்தனார் பணியை ஆரம்பித்தான்.

காலை, 11:00 மணிக்கு, வீட்டு உரிமையாளர் வந்தார். ''வணக்கம் இசக்கி...''

''வணக்கம் சார்...'' என்றான் வேலையைத் தொடர்ந்தபடி!

சிறிது நேரத்தில், வீட்டு உரிமையாளரின் மனைவி, வீடு கட்டும் பணியை, மேற்பார்வை இட வந்திருந்தாள். தலையில் தொப்பியும், கண்களில் குளிர் கண்ணாடியும் அணிந்திருந்தாள்.

மனைவியை விட்டு விட்டு, கிளம்பிப் போனார் வீட்டு உரிமையாளர்.

மதிய உணவு இடைவேளையில், 'ஸ்வைப்' மிஷனில், கார்டு தேய்த்து, உணவு பொட்டலம் வாங்கினான், இசக்கிராஜா. சாப்பிட்டு முடித்ததும், பொங்கலுக்கான, 'ஷாப்பிங்'கை, 'ஆன்லைனில்' செய்து முடித்தான்.

பின், வேலைக்கு இடையில், தன் வங்கி கணக்கு மூலம், தேனீர் வாங்கி வழங்கினாள், உரிமையாளர் மனைவி.

மாலை, 6:00 மணிக்கு, கட்டடப் பணி முடிந்தது. இசக்கிராஜாவுக்கான, சம்பளம், 1,500 ரூபாய், உதவி கொத்தனாருக்கான சம்பளம், 1,000 ரூபாய் மற்றும் சித்தாள்களுக்கு, தலா, 500 ரூபாயையும், அவரவர் வங்கி கணக்கில் போட்டாள், உரிமையாளர் மனைவி. பணம் வந்ததற்கான, குறுஞ்செய்தி, அவரவர், 'ஸ்மார்ட்' போனில் பளிச்சிட்டது.

வீட்டிற்கு கிளம்பிய இசக்கிராஜா, வழியில், 'டாஸ்மாக்' தென்பட, கார்டை, 'ஸ்வைப்' செய்து, ஒரு குவார்ட்டர் பிராந்தி வாங்கி பத்திரப்படுத்தினான். கார்டை தேய்த்து, பேக்கரியில், மனைவி, மக்களுக்கு தின்பண்டம் வாங்கினான்.

வீட்டு வாசலில், வாகனத்தை நிறுத்தி இறங்கியதும், அவன் கையிலிருந்து பிராந்தி பாட்டிலை பார்த்த மருதாயி, ''ஏய்யா... அப்புறம் குடி; இப்ப, சிவன் கோவிலுக்கு போய்ட்டு வந்திரலாம்,'' என்றாள்.

குவார்ட்டர் பாட்டிலை, குடிசைக்குள் பத்திரப்படுத்தி, மனைவி, மக்களுடன் கோவிலுக்கு கிளம்பினான், இசக்கிராஜா.

பக்தர்கள் அனைவர் கையிலும், மானிய விலையில் வாங்கப்பட்ட, 'ஸ்மார்ட்' போன்கள் இருந்தன; அர்ச்சகர் கழுத்திலும், ஒரு, 'ஸ்மார்ட்' போன் தொங்கியது.

சிவபெருமானை, இசக்கிராஜா குடும்பம் கும்பிட்டது.

அர்ச்சகர், அர்ச்சனை தட்டை நீட்டி கிசுகிசுத்தார்... ''இசக்கி... தட்சணையை, 20 ரூபா பணத்தாளா போடேன்...''

''சாமி... நீ என்ன, காங்கிரஸ்காரனா... என்னை, வம்பு, கிம்புல மாட்டி விட்ராதே, உனக்கான தட்சணை ரூபாயை, உன் வங்கி கணக்கில் போடுறேன்,''என்று கூறி, அவர் கணக்கில் போட்டான்.

உண்டியலின் அருகில், கோவில் நிர்வாகி, 'ஸ்வைப்' மிஷனுடன் உட்கார்ந்திருந்தார். காணிக்கை போட, அவரை நெருங்கினான், இசக்கிராஜா.

''எவ்வளவுப்பா காணிக்கை போடப் போற?''

''20 ரூபா...''

கார்டை நீட்டினான். கார்டை, 'ஸ்வைப்' மிஷனில் தேய்த்தார். கோவில் வங்கி கணக்கில், 20 ரூபாய் வரவானது.

கோவிலின் வெளிப்பிரகாரத்தில், சிறிது நேரம் அமர்ந்து, எழுந்த இசக்கிராஜா குடும்பம், வெளிவாசலுக்கு வந்தனர். 20க்கும் மேற்பட்ட, பிச்சைக்காரர்கள் வரிசை கட்டி அமர்ந்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் தலா இரண்டு ரூபாயை, பிச்சையாய் அவரவர், 'ஸ்வைப்' மிஷன் தேய்த்து வழங்கினான், இசக்கிராஜா.

'பிச்சை போட்டதற்கு நன்றி...' குறுஞ்செய்தி வந்தது.

வீட்டிற்கு வந்ததும், குவார்ட்டர் பாட்டில், ஒரு சொம்பு நீர், ஊறுகாய் பொட்டலம் மற்றும் மசால்வடைகளை பரப்பினான், இசக்கிராஜா.

பாட்டிலில் இருந்த முழுவதையும் குடித்து முடித்ததும், இசக்கிராஜாவுக்கு, போதை தலைக்கேற, விம்மி விம்மி, அழ ஆரம்பித்தான். வாய் கோண, இரு கைகளாலும், முகத்தில், அறைந்து கொண்டான்.

''எதுக்கய்யா அழற... எதுனாலும், சொல்லிட்டு அழு,'' பதறினாள், மருதாயி.

''நான், நல்லா தானப்பா படிக்கிறேன்; பின்ன ஏன் அழற...'' என்றான், மகன்.

''நான், எந்த முகநூல் நண்பனோடும், ஊர் சுத்தல... எதுக்கப்பா அழற...'' என்றாள், மகள்.

''காகித பணத்தை, கண்ணால பாக்க முடியலயே... எல்லாம், வைப்பு மெசினு, இஸ்மாட்டு போனு, டெபிட்டு கார்டு, கரீக்கிட் கார்டுன்னு, பணத்தை தொடாமயே சம்பாதித்து, செலவழிக்கிறோம். தொடாமயே, பொண்டாட்டி கூட குடும்பம் நடத்தற மாதிரி, சாப்பாட்டை, வெறுமனே பாத்தே, பசியாறுகிற மாதிரி இருக்குதே இந்த ரொக்கமில்லா, டிசிட்டலு பண பரிவர்த்தனை.

''வியர்வை வழிய உழைச்சிட்டு வந்து, சம்பள பணத்தை வருடி பாக்கற சுகமே தனி. அச்சடிச்ச பல வர்ண காகித பணத்தை தொட்டு பாக்கணும்ன்னு, ஆசை ஆசையா இருக்கு புள்ளே. யார்கிட்டயும், வாய் விட்டு கேக்க, பயமா இருக்கு,'' என்றான்.

விஷமமாக சிரித்தாள், மருதாயி. எழுந்து, மண்பானைகளை உருட்டி, எதையோ எடுத்தவள், 'டொட்டா டொய்...' என்று மூடிய கைகளை, அவன் முன் திறந்தாள். கையில், ஒரு, 10 ரூபாய் நாணயமும், 20 ரூபாய், 50 ரூபாய், 100 ரூபாய் நோட்டுகளும், இருந்தன.

''ஏது புள்ள... குடு குடு...'' பரபரத்தான் இசக்கிராஜா; பணத்தை பார்த்ததும், அவன் கை விரல்கள் நடுங்கின.

''ஒன்றரை வருஷமா, யாருக்கும் தெரியாம, பதுக்கி வச்சிருக்கேன்ய்யா...'' என்று கூறி அவனிடம் நீட்டினாள்.

பயபக்தியாய் வாங்கியவன், நாணயத்தையும், ரூபாய் நோட்டையும், முகர்ந்து பார்த்து, முத்தமிட்டான்; முகத்தோடு வைத்து கொஞ்சினான்; தரையில் வைத்து, சாஷ்ட்டாங்கமாய் விழுந்து சேவித்தான்; கண்களில் ஆனந்தக் கண்ணீர் தாரை தாரையாய் பெருக்கெடுத்தோடியது.

செல்ல நாயை தடவி கொடுப்பது போல, தடவி கொடுத்து. ''பிளாஸ்டிக் அட்டைகளிலும், வங்கி கணக்குகளிலும், 'ஆப்'களிலும் சுவைப் மிசின்களிலும், தசம எண்களாய் ஒளிந்து கொண்ட காகித பணமே, உன்னை எங்கே தேடுவேன்...''

இசக்கிராஜாவின் ஒப்பாரி, பாழடைந்து பூட்டிக் கிடந்த, வவ்வால் பண்ணை அமைந்த, நாசிக் அச்சகத்துக்குள் எதிரொலித்து, அடங்கியது.

நிலாமகன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us