தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/தாய் எனும் தெய்வம்!

தாய் எனும் தெய்வம்!

தாய் எனும் தெய்வம்!


PUBLISHED ON : மே 14, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 14, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''காவேரி, இன்னிக்கு சீக்கிரமாவே வண்டியை எடுக்கணும். திருவண்ணாமலைக்கு ஒரு, 'பார்ட்டி'யை அழைச்சுட்டு போகணும்,'' என்றான், குமரன்.

''நாளைக்கு, கலையோட, 'ஸ்கூல் பீஸ்' கட்ட, 1,000 ரூபாய் வேணும். ஏற்பாடு பண்ணுங்க,'' என்றாள், காவேரி.

''சரி, நான் சொன்னது காதில் விழுந்ததா இல்லயா... அம்மா இன்னும் எழுந்துக்கலையா?''

''என்னிக்கு சீக்கிரம் எழுந்தாங்க, எப்பவும் முனகல் தான்,'' அலுத்துக் கொண்டாள், காவேரி.

குமரனின் மனம் பின்னோக்கி ஓடியது.

கிராமத்தில், அவன் தந்தையுடன் வசித்து வந்தாள், தாய் காந்திமதி. இருவருமே கடின உழைப்பாளிகள். இருந்த கொஞ்ச நிலத்தில், சாகுபடி செய்து வாழ்க்கை நடத்தினர். குமரன், பிளஸ் 2 முடித்ததும், பிழைப்பு தேடி சென்னைக்கு வந்தான்.

உருப்படியாக எந்த வேலையும் கிடைக்கவில்லை. அவனை, 'டிரைவிங்' கற்க சொல்லி வற்புறுத்தினாள், காந்திமதி. சில ஆண்டுகள், ஒரு டாக்டரிடம் டிரைவராக இருந்தான்.

'எவ்வளவு நாள் தான், இந்த வேலை செய்வே, ஒரு கார் வாங்கி ஓட்டக்கூடாதா?' என்றாள் காந்திமதி.

'கார் வாங்க, கடன் எவன் குடுப்பான்... என் சேமிப்பில் டயர் மட்டும் தான் வாங்க முடியும்...' என்றான், குமரன்.

பத்தே நாளில் அவன் பெயருக்கு ஐந்து லட்ச ரூபாய்க்கான, 'செக்' வந்தது.

'அம்மா, ஏது இவ்வளவு பணம்... எப்படி புரட்டினாய்?' என்றான்.

'உனக்கேம்பா அந்தக் கவலை. எங்களால் நிலத்தில் ரொம்ப நேரம் வேலை செய்ய முடியலை. அதனால், ஒரு பகுதியை விற்றோம். உனக்கு தேவையான சமயத்தில் உதவாத நிலம் எதுக்கு?' என்றாள், காந்திமதி.

கார் வாங்கி, நாணயமாக நடந்து, நிறைய உழைத்தான், குமரன். நிறைய வாடிக்கையாளர்கள் சேர்ந்தனர். அவன் வாழ்வில் வந்தாள், காவேரி. விரைவில் கலை பிறந்தாள்.

குமரனது பெற்றோரின் வாழ்க்கை, கிராமத்தில் தொடர்ந்தது. அவன் அப்பா இறக்கும் வரை எல்லாம் தெளிந்த நீரோடை போல ஓடிக் கொண்டிருந்தது. அதன் பின், காந்திமதியை தன்னுடன் அழைத்து வந்து விட்டான்.

இருந்த பாக்கி நிலத்தையும், வீட்டையும் விற்று, பணத்தை வங்கியில் போட்டாள், காந்திமதி.

''இன்னும் கொஞ்சம் பணம் கொடுத்தால், இன்னொரு வண்டி வாங்கி விடலாம். இவங்களுக்கு எதுக்கு இவ்வளவு பணம்?'' என முணுமுணுக்க ஆரம்பித்தாள், காவேரி.

''ஏற்கனவே நமக்கு நிறைய கொடுத்துட்டாங்க. இன்னும் எவ்வளவு கொடுத்தால் தான் உனக்கு திருப்தி?'' கோபத்துடன் கேட்டான், குமரன்.

தன்னால் முடிந்த வேலைகளை செய்தாள், காந்திமதி. ஆனால், வேலை செய்து ஓய்ந்து போன உடம்பு, ஒத்துழைக்க மறுத்து, அடிக்கடி காய்ச்சல் வந்தது.

''பொங்கி கொட்டறது போதாதுன்னு இந்தம்மாவுக்கு சிசுரூஷை வேறு பாக்கி,'' என்று புலம்பினாள் காவேரி.

நாட்கள் ஓடின.

''ஒரு நல்ல கார் விலைக்கு வருகிறது. நீ வாங்கி, மெல்ல பிசினஸை விரிவாக்கலாம்,'' என்று யோசனை சொன்னான், குமரனின் நண்பன் ஒருவன்.

''காவேரி, உன் நகைகளை அடகு வைத்து, இந்த காரை வாங்கலாம். சீக்கிரமாகவே மீட்டுத் தரேன்,'' என்றான், குமரன்.

''நான் தர முடியாது. உங்கம்மாவை தர சொல்லுங்க. பணத்தை இடுக்கி வச்சுக்கிட்டு என்ன செய்ய போறாங்க? வேணும்ன்னா கொஞ்சம் கொஞ்சமா திருப்பி கொடுத்துடலாம்,'' என்று கத்தினாள்.

''சரி, கத்தாதே. அம்மா காதில் விழப் போகிறது,'' அவளை அடக்கினான், குமரன்.

இருப்பினும், பக்கத்து அறையிலிருந்த காந்திமதி, இந்த வாக்குவாதத்தை கேட்டாள்.

மறுநாள் காலை, ''குமரா, வங்கியிலிருந்து, 10 லட்சம் எடுத்துக்கோ. உனக்கு உதவாத பணம் யாருக்கு உதவும்...'' என்றாள்.

குமரன் மறுத்தும் கேட்கவில்லை. இரண்டாவது கார் வாங்கி, வாடகைக்கு விட்டான். மாதங்கள் ஓடின. மூன்றாவது காரும் வந்தது. நல்ல வீடாக வாங்கி, குடியேறினர். காந்திமதியின் உடல் நிலை சீர்குலைய ஆரம்பித்தது.

கலைக்கு பாட்டியென்றால் உயிர். தினமும் பாட்டியுடன் சிறிது நேரம் செலவழித்தாள். அதுவே காவேரிக்கு இன்னும் எரிச்சல் மூட்டியது.

'சதா இருமறாங்க, கிட்ட போயி உட்காராதே. உனக்கும் தொத்திக்கும்...' என்று மகளை கண்டித்தாள்.

காந்திமதிக்கு காய்ச்சல் குறையவில்லை. மருத்துவமனையில் சேர்த்து, பலவித பரிசோதனைகள் செய்தனர். கடைசியில் அவளுடைய வியாதிக்கு, காச நோய் என்று பெயர் சூட்டினர்.

'குணமடைந்த பின், ஏதாவது முதியோர் இல்லத்தில் சேர்த்துடுங்க. வியாதியை பார்த்து, நம் குழந்தை வளர வேண்டாம்...' என்றாள் காவேரி.

'உனக்கோ, எனக்கோ இந்த வியாதி வந்தால், வீட்டை விட்டு போவோமா... வயதான தாயை வீட்டை விட்டு துரத்த நினைக்கறியே, இது என்ன நியாயம்?' என்றான், குமரன்.

'அவங்க இந்த வீட்டுல இருந்தா நானும், என் குழந்தையும் போயிடுவோம்...' என்று கத்தினாள், காவேரி.

பத்து நாளில், காந்திமதியை வீட்டிற்கு அழைத்து வந்தனர். அம்மாவை பார்த்துக் கொள்ள ஒரு ஆயாவை ஏற்பாடு செய்தான், குமரன். மாமியார் இருந்த அறை வாசலிலிருந்தே, நாலு வார்த்தை பேசுவாள், காவேரி. கலையை அந்த அறை பக்கமே போக விடவில்லை.

குமரன் மட்டும் தான் இரண்டு வேளையும் அம்மாவை வந்து பார்த்தான்.

''ஏம்பா, கலை எப்படி இருக்கா? பாட்டின்னு ஓடி வருவாளே. ஆளையே காணும்,'' கேட்டாள், காந்திமதி.

''அவளுக்கு தேர்வு நடக்கிறது. மும்முரமா படிச்சிண்டிருக்கா. வருவாம்மா,'' என்றான், குமரன்.

தினமும் குமரனை வறுத்தெடுத்தாள் காவேரி.

''முதியோர் இல்லம் பற்றி விசாரிச்சீங்களா? இன்னும் பத்து நாள் டைம். ஒண்ணும் நடக்கலேன்னா, கலையுடன் என் அம்மா வீட்டுக்கு போய் விடுவேன்,'' என்று பயமுறுத்தினாள், காவேரி.

'பெற்ற தாயை, உயிரை குடுத்து வளர்த்தவளை எப்படி துரத்துவேன். கடவுளே, இது என்ன சோதனை?' என்று, தனிமையில் கதறி துடித்தான், குமரன்.

மறுநாள் காலையில், அவனுக்கு சவாரிக்கு அழைப்பு வந்தது.

''காவேரி, நான் அரை மணியில் கிளம்பணும். ஏதாவது டிபன் இருந்தா எடுத்து வை,'' என்றான்.

''நீங்க ரெடியாகுங்க. நான் எடுத்து வைக்கிறேன்,'' என்றாள், காவேரி.

அவனை நிம்மதியாக சாப்பிடக் கூட விடவில்லை.

''நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும். வரும் வழியில் இறங்கி, நாலு இடம் பார்த்துட்டு வாங்க,'' என்றாள்.

அவனுக்கு வந்த அழைப்பிலிருந்த முகவரிக்கு சென்று, வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தி, 'ஹாரன்' அடித்தான், குமரன். பலமுறை அடித்த பிறகு தான் கதவு திறந்தது. வயதான மூதாட்டி ஒருவர், கையில் ஒரு கைத்தடியுடன், துாக்க முடியாமல் ஒரு கனத்த பையுடன் நின்றிருந்தாள்.

''இந்த பையை காரில் வைக்க முடியுமா தம்பி?'' என, கேட்டாள்.

மறு பேச்சு பேசாமல், பையை வாங்கி, அவளை மெல்ல நடத்தி, காரில் உட்கார வைத்தான், குமரன்.

''தம்பி, உனக்கு ஆட்சேபணை இல்லைன்னா எனக்காக சில மணி நேரம் செலவழிக்க முடியுமா?'' கேட்டாள், அந்த முதியவள்.

தன் தாய் வயதை ஒத்த அந்த மூதாட்டியை பார்த்தான், குமரன்.

''என்னப்பா யோசிக்கறே... மீட்டரில் எவ்வளவு ஆகுதோ குடுத்துடறேன்,'' என்றாள்.

''அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, அம்மா. சொல்லுங்க, எங்கே போகணும்?'' என, கேட்டான்.

''நான் சொல்ற இடத்துக்கெல்லாம் மெல்ல போப்பா...

''முதலில் ஒரு கல்யாண மண்டபத்திற்கு சென்றனர்.

''இந்த மண்டபத்தில் தான் எனக்கு திருமணம் நடந்தது. அப்போ இது சின்ன, சாதாரண மண்டபமா இருந்தது,'' என்றாள், மூதாட்டி.

அடுத்து, ஒரு பெரிய மருத்துவமனைக்கு சென்றனர்.

''எல்லாமே பெரிசா இருக்கு. பல வருஷம் ஓடிப்போச்சு. இங்குதான் என் மகன் பிறந்தான்...'' என்றாள்.

பிறகு, அவளுடைய மகன் படித்த பள்ளிக்கூடம், கல்லுாரி, அவள் கணவர் வேலை பார்த்த இடம், அவள் மகன் வேலை பார்க்கும் இடம் என, பல இடங்களுக்கு சென்றனர்.

''போதும்பா. ரொம்ப ஓய்ச்சலா இருக்கு. இனி, நான் கடைசியாக தங்கும் இடத்துக்கு அழைச்சிண்டு போ,'' என்றாள், அந்த முதியவள்.

அவள் சொன்ன இடம் ஒரு முதியோர் இல்லம்.

''ஏம்மா, உங்க வீடு இருக்கறச்சே இங்கு எதுக்கு தங்கணும்?'' ஆச்சரியம் தாங்காமல் கேட்டான், குமரன்.

''என்ன சொல்றது, என் மகனை, 10 மாதம் வயத்துல சுமந்தேன். அதன் பின், மார்பிலும், மடியிலும் சுமந்தேன். இப்போதும் என் மனசுல சுமக்கிறேன். ஆனா, இன்னும் ஒரு சில வருஷமே இருக்கப் போற நான், அவனுக்கு பாரமாயிட்டேன்.

''எனக்கு உடம்பு சரியில்லாமல் போனதும், என்னை இங்கு தனியா வச்சுட்டான். இப்போ அந்த வீட்டையும் கேட்கிறான். எங்கேயாவது நல்லா இருக்கட்டும்,'' என்றாள்.

அவள் கண்கள் குளமாகின. அவளை மெல்ல இறக்கி விட்டான்.

''உனக்கு எவ்வளவு பணம் தரணும்?'' கேட்டாள், மூதாட்டி.

''ஒண்ணும் வேண்டாம், அம்மா. உங்களை ஏற்றி வந்தது, ரொம்ப சந்தோஷம்மா. நான் அடிக்கடி வந்து உங்களை பார்த்துக்கிறேன்,'' என்றான், குமரன்.

''நீ நல்லா இருக்கணும்பா,'' என்றாள்.

ஒரு பெண் வந்து, அந்த மூதாட்டியை உள்ளே அழைத்துப் போனாள். குமரனுக்கு யாரோ சம்மட்டியால் தலையில் அடிப்பதுபோல் இருந்தது. அன்று முழுவதும் அந்த தாயின் நினைவு தான். மனம் பாரமாக இருந்தது.

வீட்டிற்கு வந்ததும், ''போன காரியம் என்ன ஆச்சு... முதியோர் இல்லம் பார்த்தீங்களா?'' என கேட்டாள், காவேரி.

''காவேரி, நீ சொன்ன மாதிரி, நீயும், கலையும் உங்கம்மா வீட்டிற்கு போக ஏற்பாடு செய்கிறேன். எனக்கு உயிர் கொடுத்த தாய் தான், என் தெய்வம். அந்த தெய்வத்தை உதறி, இதயக் கோவிலிலிருந்து துரத்த, எனக்கு மனம் இல்லை.

''கடைசி காலத்தில், உடல் நலம் குன்றி இருக்கும் அவரை பேணி காப்பது, என் கடமை. அந்த தாயின் கண்ணீரில், என் வாழ்க்கை முன்னேறுவது எனக்கு துளியும் சம்மதமில்லை.

''உன்னால், என்னுடன் ஒத்துழைக்க முடிந்தால் இரு. இல்லையெனில், உன் விருப்பப்படி போகலாம். ஒன்று மட்டும் நினைவு வைச்சுக்க, குருத்தோலை ஒருநாள் பழுத்தோலை ஆகும்,'' என்றபடியே அவளின் பதிலை எதிர்பாராமல், தாயின் அறையை நோக்கி போனான், குமரன்.

பதில் சொல்ல முடியாமல் வாயடைத்து நின்றாள், காவேரி.

பானு சந்திரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us