PUBLISHED ON : செப் 29, 2019

* செங்கல்பட்டு மாவட்டத்தில், சேக்கிழார் பிறந்த, குன்றத்துாரில், முருகன் கோவில் பிரியும் திருநீர்மலை சாலையிலுள்ளது, காத்யாயினி கோவில். இது, பல்லவர் காலத்து கட்டட கலையில் உருவானது. லட்சுமி கோபுர கருவறையில், அத்தி மரத்தால் ஆன, மகாலட்சுமி தாயார் சன்னிதி உள்ளது.
ஒவ்வொரு மாதமும், பவுர்ணமி அன்று மட்டுமே, இந்த அத்தி திருமகளை பார்க்க முடியும். மற்ற நாட்களில், கோவிலின் வில்வ மர பிருந்தாவனத்தில், தைலக் காப்பிட்டு வைக்கப்பட்டிருப்பாள்.
தொடர்ந்து, ஆறு பவுர்ணமி தினத்தில், தாயாரை தரிசித்து, தீபம் ஏற்றி, குபேர வாசல் ஸ்ரீஸ்துதி படித்து வழிபட வேண்டும். இவ்வாறு செய்தால், கடன் தொல்லை தீர்ந்து, செல்வ சேர்க்கை மற்றும் காரிய சித்தி உண்டாகும் என்பது ஐதீகம்.
வரும், சாரதா நவராத்ரி, ஒன்பது நாட்களிலும், விசேஷ அலங்காரத்துடன், தரிசனம் தருவாள்.
* விஜயதசமி அன்று, பெருமாள் கோவில்களில், வன்னி மரக்கிளையை வைத்து, அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து, பூஜை நடத்துவர். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால், கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும்.
* குழந்தைகள், கொலு பொம்மைகளை பார்த்து கதை கேட்டால், பொறுமையாக சொல்ல, முதலில் நீங்கள் அறிந்து வைத்திருத்தல் நல்லது. குழந்தைகளின் அறிவையும், பக்தியையும், திறமையையும் கொலு வளர்க்கும்
* நவராத்திரி கடைசி நாளன்று, இமய மலைக்கு துர்க்கை திரும்பிச் செல்வதாக ஐதீகம். எனவே, வட மாநிலங்களில், துர்க்கை சிலைகளை கங்கையில் போட்டு விடுவர்
* நவராத்திரி ஐந்தாம் நாள், லலிதாம்பிகையின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று, ஒன்பது சிறுமியருக்கு, உடை தானம் செய்தால், நினைத்தது நடக்கும்.
