sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/எதிரியல்ல தோழி!

எதிரியல்ல தோழி!

எதிரியல்ல தோழி!


PUBLISHED ON : மார் 03, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 03, 2019


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உள்ளே கொஞ்சம் பரபரப்பாக இருந்தது, நிர்மலாவுக்கு. அலுவலக பரபரப்பையும் மீறி, அவள் கண்கள் வாசல் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தன.

கார் விபத்தில் கணவனை பறிகொடுத்த, பானு, கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பின், இன்று அலுவலகத்திற்கு வரப்போகிறாள்.

அந்த நாள், நிர்மலாவின் கண்களுக்குள்ளேயே இருந்தது. விபத்து நிகழ்வு குறித்த தகவல் வந்தபோது, நிர்மலாவுடனும், மல்லிகாவுடனும் உணவு அருந்திக் கொண்டிருந்தாள், பானு.

காவல் அதிகாரி தான், பானுவின் மொபைல் போனில் அழைத்தார். கணவனின் எண் என்பதால், மிக இயல்பாக பேசத் துவங்கிய பானு, கண நேரத்தில், 'ஆ...' என்று அலறி, மயங்கி, சரிந்தாள்.

அவள் கணவன் சங்கரின் மரண செய்தி என்று தெரிய வந்ததும், அலுவலகம் அதிர்ந்து போனது.

நிர்மலா துடித்து போனாள். அதை விட அதிர்ந்து போனாள், மல்லிகா.

தாங்க முடியவில்லை. 'கடைசி வரை சேர்ந்தே இருப்போம் என்று கை பிடித்து, சத்தியம் செய்து உருவாக்கிய பந்தம், இப்படி பாதியில் பறிபோன பரிதாபம்... இரண்டு பெண் குழந்தைகளை ஆளாக்க வேண்டிய கட்டாயம்... தனிமையும், இளமையுமாக இந்த அநீதியான சமூகத்தை எதிர்கொள்ள வேண்டிய அவலம்... அய்யோ... எப்படி சமாளிக்க போகிறாள், பானு?'

சட்டென்று அமைதியானது, அலுவலகம்.

உள்ளே வந்தாள், பானு.

இளைத்திருந்தாள்; முகம் வாடி, வற்றியிருந்தது. சின்னஞ்சிறு கருப்பு பொட்டு, லேசான பவுடர் தீற்று, படிய வாரிய தலை, கோடுகள் போட்ட காட்டன் சுரிதாரில் மெல்லிய புன்னகையுடன். இருக்கைக்கு போய், 'பயோ மெட்ரிக் லாகின்' செய்து, நிர்மலாவிடம் வந்தாள்.

''குட்மார்னிங் நிர்மலா... எப்படி இருக்கே... உன், 'சுகர் லெவல் கண்ட்ரோல்'ல தானே இருக்கு... 'வாக்கிங்' போற தானே,'' என்றாள், மிக இதமாக.

''நீ... நீ,'' என்று தடுமாறிய நிர்மலா, ''நீ சொல்லு, பானு... என்ன சொல்றது, எதை கேக்கிறதுன்னே தெரியலே... வாழ்க்கை ரொம்ப மோசம்... உன் குழந்தைகள் எப்படி இருக்காங்க,'' என்றாள்.

''ஒரு மாசத்துல மெல்ல மெல்ல எல்லாம் இயல்புக்கு வருது, நிர்மலா. நல்லவேளையா, மிகப்பெரிய தொகைக்கு காப்பீடு பண்ணியிருக்கார்... அதுவே பெரிய பலமா இருக்கு... வீட்டு கடனை அடைச்சுடலாம்... என் சம்பளம் தாராளமா போதும் எங்களுக்கு... சரி... அப்புறமா பேசலாம் வரேன்.''

மல்லிகாவிடம் போனாள், பானு. இருவரும் மிக இயல்பாக புன்னகையுடன் பேசுவதையும், டப்பாவை திறந்து மல்லிகா, கேசரி எடுத்து கொடுப்பதையும், பானு, அதை வாங்கி வாயில் போட்டுக் கொள்வதையும், திகைப்புடன் பார்த்தாள், நிர்மலா.

மல்லிகாவிற்கு என்ன ஆயிற்று என்று தான் தோன்றியது, நிர்மலாவுக்கு.

''நிம்மி... மத்தியானம், என் சீட்டை கொஞ்சம் பார்த்துக்க முடியுமா உன்னால... 'ஜஸ்ட்' அரை மணி நேரம் தான்... எனக்கு, 'கோர்ட்' வரை போகிற வேலை இருக்கு,'' என்றபடி வந்தாள், மல்லிகா.

''கோர்ட்டுக்கா... என்ன விஷயம், மல்லி?''

''நம்ம வினுவுக்காக.''

''வினுவா... அந்த புது பொண்ணு... கல்யாணமாகி, கேரளாலருந்து வந்தாளே... அவளா... என்ன பிரச்னை?''

''புருஷன் சரியான, 'ரோக்' நிர்மலா... 'சைக்கோ' மாதிரி நடந்துக்கறான்... பாவம், அழுது கதறிட்டா அந்த பொண்ணு... எதிர்த்தா பேசறேன்னு நாக்குலேயே சூடு போட்டிருக்கான் பாவி... படிச்ச முட்டாள்... என்ன பண்ணலாம்ன்னு, 'லீகலா ஒபினியன்' கேக்க தான், அவளை கூட்டிகிட்டு போறேன்.''

''அய்யோ பாவமே... ஆனா, ஒரு விஷயம், மல்லி... அந்த, வினுவுக்கும் வாய் ஜாஸ்தின்னு நெனைக்கிறேன்.''

''இருக்கட்டுமே... அதுக்காக, 'வயலன்ஸ்'ல இறங்கலாமா அந்த பையன்... சரி, வரேன்,'' என்றபடி, மல்லிகா சென்றாள்.

பெருமூச்சுடன் உட்கார்ந்தாள், நிர்மலா.

'மல்லிகா, வர வர ரொம்ப தான் நாட்டாமை பண்ணுகிறாள். எந்த வீட்டில் தான் பிரச்னை இல்லை... வேலை பார்க்கிற பெண் என்பது, கல்யாண மார்க்கெட் வரை தான் மதிப்பாக இருக்கிறது. அதற்கு பின், அவளும் அதே அடிமை வகையறா தான். சம்பாதித்து கொடுத்து, அவனிடம் கையேந்தி நிற்க வேண்டும்.

'தாதி, தாசி, வேலைக்காரி, சமையல்காரி என்று, சகல அவதாரங்களுடன் அவனை திருப்திபடுத்த வேண்டும். என்ன செய்வது, ஆண் இல்லாத வாழ்க்கை என்பது மகா கொடுமை. கண்டவனும் கை வைக்க பார்ப்பான். பார்வையே துகில் உரிக்கும்.

'குறைந்தபட்சம், 'காஸ்' சிலிண்டரை கூட துாக்கி வைக்க முடியாத உடல் வலிமையை வைத்து, வெற்றி வீராப்பு எதற்கு... தேவையில்லாமல் மூக்கை நுழைத்து, இருக்கிற நிம்மதியை கெடுத்துக் கொண்டிருக்கிறாள், மல்லிகா. ஏன், அந்த பானுவை கூட பேசி பேசி மாற்றிக் கொண்டிருக்கிறாள்.

'கைம்பெண் கோலமெல்லாம் வேண்டாம் தான்... அதற்காக, ஒற்றை ரோஜா என்ன, கண் மை என்ன, கலர் புடவை என்ன, கலகல சிரிப்பு என்ன... மூன்று மாதம் முன், கணவனை விபத்தில் பறிகொடுத்தவள் என்று, பானுவை பார்த்தால், யாராவது சொல்ல முடியுமா...'

''ஒரு நிமிடம், நிம்மி,'' என்று, முறுவலுடன் எதிரில் வந்து நின்றாள், பானு.

நிமிர்ந்து, திடுக்கிட்டாள், நிர்மலா.

''குக்கரி, பேக்கரி வகுப்பு ஆரம்பிக்க போறேன் நிம்மி... 'ஒன்லி ஆன் வீக் எண்ட்...' மாசத்துக்கு எட்டே கிளாஸ்... எங்க வீட்டு மாடியில, 'ஷெட்' போடறேன்... வர சனிக்கிழமை, ஆரம்பம். நீ கட்டாயம் வரணும்... இந்தா இன்விடேஷன்,'' என்று மலர்ச்சியுடன் அழைப்பிதழை கொடுத்து, ஒயிலாக நடந்தாள், பானு.

அயர்ந்து நின்றாள் நிர்மலா. 'கனவல்லவே இது... வந்து போனது, பானுவா... இல்லை, மேரி கோம்சா... பேச்சில் எவ்வளவு தெளிவு, என்ன தைரியம், யார் கொடுத்த துணிச்சல், ஒருவேளை...'

''நிம்மி... என்ன யோசனை... பானுவ பாத்தியா, தன் வீட்டிலேயே கிளாஸ் ஆரம்பிக்கறா... இவளுக்காக, 'யூ டியூப் சேனல்' கூட, ஏற்கனவே அவ பொண்ணு ஆரம்பிச்சிருக்கா... எப்படி... சூப்பர்ல,'' என்று சிரித்தபடி வந்தாள், மல்லிகா.

''எனக்கு சரியா படலே, மல்லிகா. இன்னும் அஞ்சு மாசம் கூட ஆகலே, சங்கர் இறந்து... அதுக்குள்ள எப்படி இவ பழைய மாதிரி ஆயிட்டா... வாழ்ந்து, ரெண்டு புள்ளை பெத்து, குப்பை கொட்டினதை எப்படி அவ்வளவு ஈசியா மறக்க முடியும்... 'சம்திங் வெரி சினிகல்' மல்லிகா,'' என்றபோது, கோபம் மற்றும் எரிச்சலுடன் நடுங்கியது, அவள் குரல்.

ஏறிட்டு தோழியை பார்த்தாள், மல்லிகா. கவலை, யோசனை என்று பற்பல உணர்வுகள் தோன்றி மறைந்தன, அவள் முகத்தில். பிறகு மெல்ல, சிறகின் வருடல் போல, மல்லிகா குரல் ஒலித்தது...

''நீயும், நானும் பெண், நிர்மலா... அதனாலேயே நம் பிரச்னைகள் என்னன்னு ஆழமா புரிஞ்சுக்க முடியும்... வரலாறு படிச்சவங்க நாம்... பெண்கள் என்றால், இப்படி தான் இருக்க வேண்டும்...

''கைம்பெண்ணா, ஓரமா நில்லு... மணவிலக்கு வாங்கினவளா... புருஷன் வேற ஊர்ல இருக்கானா... சண்டை போட்டுகிட்டு அம்மா வீட்டுல இருக்கிறவளா, நீங்கள்லாம் என் புருஷனை மயக்க கூடியவங்க, தள்ளியே இருங்கன்னு, பெண்களையே நம்ப வெச்சுட்டாங்க பார்த்தியா... உலகின் மிகப்பெரிய மோசடி, இது தான், நிர்மலா...

''அப்பட்டமான ஆணாதிக்க சிந்தனை அது... அதை அப்படியே ஏத்துகிட்ட பெண்கள் தான், ஆண்களை விட மோசமானவங்க... அவங்க பார்வை தான் ஆபத்தானது... பெண்கள் குறித்த பார்வை மாறணும்... மொதல்ல பெண்கள்கிட்ட அது மாறணும்...

''பானுவோட தைரியத்தை பாராட்டற மனசு, உனக்கு வேணும்... வினுவுக்கு நடக்கிற அநீதிக்கு, உன் மனசுல கோபம் வரணும்... பெண்கள்கிட்ட இந்த மாற்றம் வரணும்... பெண்ணுக்கு பெண் உதவியா, ஆதரவா, நம்பிக்கையா இருக்கணும்... இது தான் மாற்றத்துக்கான முதல் படி... நான் சொல்றது சரிதானே நிர்மலா?''

''உண்மை தான் மல்லிகா... பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்கிற மாதிரியான பொது கருத்தை, பெண்ணுக்குள்ளேயே திணிச்சு வெச்சிருக்கு சமுதாயம்... அப்படி இல்லே... உண்மையில், பெண் கரிசனமானவள்... அன்பு மயமானவள் என்பதை உணர்த்தும் வகையில், நம் மன ஆழத்துல இருக்கிற அந்த நல்ல பண்புகளை மீட்டெடுக்கலாம்... மொதல்ல, நான், என்னை மீட்டெடுக்கிறேன் மல்லிகா,'' என்றபோது, அவள் குரல் நெகிழ்ந்து, நிறைவாக ஒலித்தது.

வி.சுபத்ரா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us