PUBLISHED ON : ஜன 28, 2018

மதுரை காந்தி மியூசியம் வெளியீடான, மகாத்மா காந்தியின் சுயசரிதையான, 'சத்திய சோதனை' நுாலிலிருந்து:
பத்திரிகை ஒரு பெரிய சக்தி; ஆனால், கரையில்லாத நீர் பிரவாகம், எவ்வாறு கிராமப்புறங்களை எல்லாம் மூழ்கடித்து, பயிர்களையும் நாசமாக்கி விடுமோ, அதேபோல கட்டுப்பாடு இல்லாத பேனாவும் நாச வேலைக்கு தான் பயன்படும். கட்டுப்பாடு என்பது வெளியிலிருந்து வருவதாக இருந்தால், கட்டுப்பாடு இல்லாததை விட, அது அதிக விஷம் ஆகும்.
கட்டுப்பாடு உள்ளுக்குள் இருந்தே வருவதாக இருந்தால் தான் லாபம் உண்டு. இந்த நியாயம் சரியானது என்றால், உலகில் இப்போது இருக்கும் பத்திரிகைகளில் எத்தனை, இந்த சோதனையில் தேறும்... பயனில்லாதவைகளாக இருப்பவைகளை யார் நிறுத்துவர்!
பொதுவாக நல்லதையும், தீயதையும் போல, பயனுள்ளவையும், பயனற்றவையும் கலந்து தான் வரும். மனிதனே அதில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்!
பத்திரிகையாளர் சாமி சிதம்பரனார் எழுதிய, 'தமிழர் தலைவர் பெரியார்' நுாலிலிருந்து;
அது, 1903ம் ஆண்டு; தன் தந்தைக்கு உதவியாக வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார், ஈ.வெ.ரா., அப்போது, அவர் வயது, 24. திருச்சியில் ஒருவரிடமிருந்து வரவேண்டிய ஆயிரம் ரூபாய்க்கான வழக்கிற்காக, வக்காலத்து நமூனாவில், தம் தந்தையின் பெயரை தாமே கையெழுத்து போட்டு, வழக்கறிஞரிடம் கொடுத்து, ஈரோடு திரும்பி விட்டார்,
ஈ.வெ.ரா., இதனால், ஆத்திரப்பட்ட வழக்கறிஞர், தந்தை கையெழுத்தை மகன் போர்ஜரி செய்து, மோசடி செய்து விட்டதாக வழக்கு தொடுத்தார்.
இதனால், பயந்து போன, ஈ.வெ.ராவின் தந்தை வெங்கட் நாயக்கர், தங்கள் பெயருக்கு களங்கம் விளையுமோ என்று அஞ்சி, சேலம் விஜயராகவாச்சாரியார், சென்னை நார்ட்டன் துரை போன்ற பிரபல வழக்கறிஞர்களின் உதவியை நாடினார்.
'இந்த கையெழுத்தை தான் போடவில்லை என்று ராமசாமி சொல்லி விட்டால், தப்பித்துக் கொள்ளலாம்; அது ஒன்று தான் வழி...' என்று அவர்கள் ஆலோசனை கூறினர். ஆனால், பிடிவாதமாக பொய் கூற மறுத்து விட்டார், ஈ.வெ.ரா., வருவது வரட்டும் என, சிறை வாழ்க்கைக்கு ஒத்திகை பார்க்க துவங்கி விட்டார்.
அதாவது, தன் தங்கக் காப்பு, தண்டை, கடுக்கன் முதலிய நகைகளை கழற்றி, சவரம் செய்து கொள்ளாமல், கேழ்வரகு களி சாப்பிட்டு, தலையணை இல்லாமல், வெறும் பாயில் படுத்து பழகி வந்தார்.
இரண்டு மாதம் கழித்து, திருச்சி உதவி கலெக்டரான ஆங்கிலேய இளைஞர் ஒருவர் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. வெங்கட் நாயக்கர் பெரிய வியாபாரியானதால், வேடிக்கை பார்க்க கோர்ட்டில் நிறைய கூட்டம்.
அரசு வழக்கறிஞரான கணபதி ஐயர், கலெக்டரிடம் அனுமதி பெற்று, ஈ.வெ.ராமசாமிக்காக வழக்காட வந்தார். உதவி கலெக்டர், கணபதி ஐயரைப் பார்த்து விவரம் கேட்டார். பின், குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஈ.வெ.ராமசாமியையும் கேட்டார்.
தகப்பனாருக்காக, தானே வியாபார விஷயங்களை கவனிப்பதால், வயதான அவருக்காக, தானே கையெழுத்து போட்டதாக ஒப்புக்கொண்டார், ஈ.வெ.ரா., தந்தை வெங்கட் நாயக்கரும் அச்சத்துடன் ஆமோதித்தார்.
வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 'ராமசாமி யாரையும் மோசடி செய்யும் நோக்கத்தோடு இந்த கையெழுத்தை போடவில்லை; உண்மையை ஒப்புக்கொண்டதால், விடுதலை செய்கிறேன்...' என்றார், நீதிபதி.
நடுத்தெருநாராயணன்
