PUBLISHED ON : பிப் 04, 2018

'தமிழக கிராமிய கதைகள்' நுாலிலிருந்து: ஒரு தந்தைக்கு சோம்பேறி மகன் இருந்தான்; அவனை திருத்த, ஒரு ஜோடி மாடுகளும், ஒரு செக்கும் வாங்கிக் கொடுத்து, தனியே, எண்ணெய் ஆட்டிப் பிழைத்துக் கொள்ள சொல்லி விட்டார்.
அப்போதும் திருந்தவில்லை, சோம்பேறி; மாடுகளை செக்கில் பூட்டி, அதன் கொம்புகளில் சலங்கையை கட்டினான். மாடு சுத்தும்போது சலங்கை சத்தம் கேட்கும்; அது நின்றால், சத்தமும் நின்று விடும். அப்போது மட்டும், மாட்டைக் கவனித்து ஓட்டினால் போதும்; அதுவரை நிம்மதியாக வேறு இடத்தில் துாங்கலாம் என எண்ணி, அவ்வாறு செய்தான்.
கொஞ்ச நேரம் சென்றதும், எழுந்து வந்து கவனித்தான். செக்கில் போட்ட எள் அப்படியே இருக்க, மாடு மட்டும் சுற்றியபடி இருந்தது.
'இவ்வளவு நேரம் சலங்கை சத்தம் கேட்டுக் கொண்டிருந்ததே... ஆனால், எண்ணெய் ஆட்டப்பட வில்லையே...' என திகைத்து, மறைவில் நின்று கவனித்தான். இவன் போய்விட்டதை கண்ட மாடு, சுற்றுவதை நிறுத்தி, ஒரே இடத்தில் நின்று கொம்பை மட்டும் ஆட்டி, சலங்கை சத்தத்தை உண்டு பண்ணியது.
சோம்பேறியுடன் பழகிய மாடல்லவா!
'உ.வே.சா.,வின், தமிழ்ப் பணி' என்ற நுாலிலிருந்து: ஒருமுறை சேதுபதி மன்னரை சந்திப்பதற்காக, அவரது மாளிகைக்கு சென்றார், உ.வே.சாமிநாதய்யர். வரவேற்பறையில், மன்னர் சேதுபதி மற்றும் அவரை சந்திக்க வருவோர் அமர, தனித்தனி ஆசனங்கள் போடப்பட்டிருந்தன. அங்கிருந்த நீண்ட ஆசனத்தில் அமர்ந்து, மன்னரின் வருகைக்காக காத்திருந்தார், உவே.சா.,
தனக்காக தமிழறிஞர் காத்திருப்பதை பணியாட்கள் மூலம் கேள்விப்பட்ட சேதுபதி, நெடுநேரம் காக்க வைத்து விட்டோமே என்ற பதற்றத்தில் விரைந்து வந்தவர், உ.வே.சா.,வை வணங்கி, தன் தனி ஆசனத்தில் அமராமல், உ.வே.சா., அமர்ந்திருந்த ஆசனத்தில், அவர் பக்கத்தில் அமர்ந்தார்.
மன்னர் தன்னுடன் அமர்ந்தது கண்டு மகிழ்ந்த சாமிநாதய்யர், 'சமஸ்தான அதிபதி அவர்களே... எனக்கு சம ஸ்தானம் (சரிசமமாக இடம்) தந்தீர்கள்...' என்றார். மன்னர் சிரித்தார்; இருவரும் நீண்ட நேரம் அளவளாவிய பின், தம் கைக் கடிகாரத்தை பார்த்தார், மன்னர்.
குறிப்பறிந்த உ.வே.சா., 'போதுமானது; எனவே போதுமானது...' என்றார். 'போதும் (பொழுதும்) ஆனது...' என்ற சிலேடையை ரசித்து மகிழ்ந்தார், மன்னர்.
திருக்குறள் முனுசாமி எழுதிய, 'திருக்குறளில் நகைச்சுவை' என்னும் நுாலிலிருந்து: 'ஒல்லியாக இருப்பவர்கள், குசும்பு, கிராதகம் பிடித்தவர்களாகவும், குண்டாக இருப்பவர்கள், நல்ல சுபாவம் உள்ளவர் களாகவும், வம்பு தும்புக்கு போகாதவர்களாகவும் இருப்பர் என்று சொல்கிறார்களே... அது உண்மைதானா?' என்று சினேகிதர் ஒருவரிடம் கேட்டேன்.
'உண்மைதான்; குண்டாக இருப்போர், வம்பு தும்புக்கு போகாததற்கு காரணம் இரண்டு... ஒன்று, அவர்களால் அவ்வளவு பெரிய உடம்பை துாக்கி சண்டை போட முடியாது; மற்றொன்று, எதிராளி திருப்பி அடித்தால் அவ்வளவு பெரிய உடம்பை துாக்கி, தப்பி ஓட முடியாது. மேற்படி இரண்டு காரணங்களை உத்தேசித்துதான் அவர்கள் ஒழுங்காக இருக்கின்றனர்...' என்றார், நண்பர்.
நடுத்தெரு நாராயணன்
