PUBLISHED ON : பிப் 18, 2018

'விடை தெரியாத மர்மங்கள்' நுாலிலிருந்து: தமிழக முன்னாள் முதல்வர், மறைந்த, ஜெயலலிதாவின் வாழ்க்கையை போன்றது தான், தென் அமெரிக்காவைச் சேர்ந்த, அர்ஜென்டினா நாட்டின் இரும்புப் பெண்மணியான, ஏவாவின் வாழ்க்கையும்! பேரழகியான ஏவா, ஆரம்பத்தில் ஒரு நடிகை; பிற்காலத்தில் அரசியலுக்கு வந்தவர். சினிமாவில் நடித்து வந்த அவரை, அரசியலுக்கு அழைத்து வந்தார், அர்ஜென்டினா முன்னாள் அதிபர், பெரோன்.
மக்கள் நலன் ஒன்றையே தன் மூச்சாக நினைத்து உழைத்தவர், ஏவா. உடல் நலம் குன்றி, ஒருநாள் அவர் இறந்து விட்டார். அவரது உடலை, 'எம்பாமிங்' முறையில், பதப்படுத்தி வைத்தனர். ஒரு நாள், இரண்டு நாள் அல்ல... 20 ஆண்டுகள், அவரது உடலை பாதுகாத்தனர்.
தென் அமெரிக்காவில் உள்ள அர்ஜென்டினா நாட்டில், லாஸ் டால்டாஸ் என்ற சிற்றுாரில், ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர், ஏவா. குடும்பச் சூழல் காரணமாக, வீட்டை விட்டு, அர்ஜென்டினாவின் தலைநகரான, ப்யுனஸ் ஏர்ஸ்க்கு இடம் பெயர்ந்தார். நடிகையாக ஜொலிக்க வேண்டும் என்ற விருப்பமே, அவர் வீட்டை விட்டு வெளியேறக் காரணம். அவர் நம்பிக்கை பொய்க்கவில்லை; இயற்கையிலேயே பேரழகியான அவருக்கு, நடிக்கும் வாய்ப்பு எளிதில் கிட்டியது.
மேடை நாடகங்கள், வானொலி மற்றும் திரைப்படங்களில், தன் நடிப்பு திறமையால் மக்களை கவர்ந்தார், ஏவா. நாடகங்கள், திரைப்படங்கள் மூலமாக, பெண்கள் நலனுக்கு குரல் கொடுக்கவும் செய்தார். அச்சமயத்தில் தான், ஏவாவின் பேரழகையும், மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மையையும் கண்ட, அந்நாட்டு அரசியல் தலைவரான, யுவான் பெரோன், ஏவா மீது காதல் கொண்டார். தன் முதல் மனைவியை இழந்த சோகத்தில் இருந்த பெரோனுக்கு, ஆறுதல் தந்ததோடு, 1945ல் அவரையே திருமணமும் செய்து கொண்டார், ஏவா. திருமணம் முடிந்து ஆறே மாதங்களில், அர்ஜென்டினாவின் அதிபராக பொறுப்பேற்றார், பெரோன்.
அர்ஜென்டினா நாட்டின், 'பர்ஸ்ட் லேடி' என்ற பெருமையை பெற்ற ஏவா, அந்த செல்வாக்கை பெண்கள் உரிமை மற்றும் முன்னேற்றத்துக்காகவும், ஏழைகள் நல்வாழ்வுக்காகவும் பயன்படுத்தினார். மக்கள், அவரை தங்களை காக்க வந்த தேவதையாக பார்த்தனர்; ஆனால், ராணுவமும், மற்ற அரசியல் தலைவர்களும் அவரை முட்டுக்கட்டையாக நினைத்தனர். தன் கணவர் அதிபராக நீடிக்க வேண்டியே மக்களுக்கு சேவை செய்வது போல் அவர் நடிப்பதாக குற்றம் சாட்டினர். இன்னும் சிலர், பெரோனின் ஆட்சியை, சர்வாதிகார ஆட்சி என குறிப்பிட்டனர். ஆனால், அவருடைய ஆதரவாளர்களோ, இந்த கருத்துகளை எல்லாம் புறந்தள்ளினர்.
மீண்டும், 1952ல் தேர்தல் வந்த சமயத்தில், 'ஏவா அதிபராக வேண்டும்...' என்ற மக்கள் கோரிக்கையை, புன்னகையுடன் நிராகரித்தார், ஏவா. இரண்டாவது முறையாக அதிபரானார், பெரோன். அடுத்த ஆறே மாதங்களில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார், ஏவா. பெரோனின் விருப்பப்படி, ஏவாவின் உடல், 'எம்பாம்' செய்யப்பட்டு, மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.
ஆனால், 1955ல் நாட்டில் ராணுவக் கிளர்ச்சி ஏற்பட்டு, நாட்டை விட்டு துரத்தப்பட்டார், யுவான் பெரோன். ஏவாவின் இறந்த உடலை தாங்கியிருந்த பெட்டி அகற்றப்பட்டது. ஏவாவின் பெயர் மக்கள் மனதிலிருந்து அழிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், அவர் புகைப்படங்கள், அவரைப் பற்றிய சுவரொட்டிகள் ஆகியவற்றுக்கு தடை விதித்தனர், ஆட்சியாளர்கள். பெரோன் மற்றும் ஏவா பெயர்களை உச்சரித்தவர்கள், கடுமையான தண்டனைக்கு உள்ளாயினர்.
கடந்த, 1955 முதல் 1971 வரை, 16 ஆண்டுகள் அவரது உடல் எங்கே இருக்கிறது என்ற தகவலே இல்லை. 1973ல் ராணுவ ஆட்சி முறியடிக்கப்பட்டு,மீண்டும் அர்ஜென்டினா திரும்பிய பெரோன், மூன்றாவது முறையாக அதிபரானார். மிலன் நகரில், புதைத்து வைக்கப்பட்டிருந்த, ஏவாவின் உடல், திரும்பக் கொண்டு வரப்பட்டது.
ஏவாவின் உடலை, தன் இல்லத்திலேயே பத்திரமாக வைத்தார், பெரோன். அவர் இறந்த பின், அர்ஜென்டினா நாட்டின் அதிபராக பதவியேற்ற, பெரோனின் மூன்றாவது மனைவி, இசபெல், பெரோனின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு அருகிலேயே, ஏவாவின் உடலையும் அடக்கம் செய்தார்.
ஏவா வாழ்க்கையை பற்றி, எவிட்டர் என்ற பெயரில், 1996ல் திரைப்படம் வெளியானது. ஹாலிவுட் நடிகை, மடோனா நடித்து, வெளியான அப்படம், ஏவாவின் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டியது. இன்னொரு படமான, ஏவா துயிலவில்லை என்ற தலைப்பில் வெளியான ஸ்பெயின் நாட்டு திரைப்படம், கடத்தப்பட்ட, ஏவாவின் உடல் என்ன ஆனது என்ற மர்மத்துக்கு விளக்கம் கொடுத்தது.
நடுத்தெரு நாராயணன்
