PUBLISHED ON : ஜூலை 21, 2019
ஜூலை 27 அப்துல்கலாம் நினைவு தினம்
ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின், 'அக்னிச் சிறகுகள்' சுயசரிதை நுாலிலிருந்து: சோதனை முறையிலான,
எஸ்.எல்.வி., - 3 செயற்கை கோளை, விண்ணில் செலுத்த, ஆகஸ்ட், 10, 1979ல் திட்டமிட்டிருந்தோம். 23 மீ., நீளம், 17 டன் எடையும் கொண்ட, எஸ்.எல்.வி., - 3, காலை, 7:58 மணியளவில், கம்பீரமாக விண்ணை நோக்கி கிளம்பி, திட்டமிட்டிருந்த வளைவு பாதையில் செல்ல ஆரம்பித்தது.
முதல் கட்ட பயணம், கனகச்சிதமாக முடிந்து, இரண்டாவது கட்டத்தை எட்டியது. எங்கள் நம்பிக்கை, விண்ணில் சிறகடித்துச் செல்வதை, ஆடாமல், அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தோம்.
இரண்டாவது கட்டம், தன் கட்டுப்பாட்டை இழந்து, 317 வினாடிகளில் எல்லாம் முடிந்து விட்டபடியால், நம்பிக்கை தகர்ந்து போனது.
என் உள்ளம் கவர்ந்த, ஏவுகலத்தின் எஞ்சிய பகுதி, ஸ்ரீஹரிகோட்டாவிற்கு, 560 கி.மீ., தொலைவில், கடலில் விழுந்தது.
கோபமும், விரக்தியும் கலந்த ஒரு வினோத உணர்வு எனக்குள். என் கால்கள் விறைத்து போய் வலி எடுத்தன. கோளாறு என் உடம்புக்கு இல்லை; மனதுக்கு என்னவோ ஆகிவிட்டது.
என்னுடைய, 'நந்தி ஹேவர்' ரக விமானம், கருவிலேயே அழிந்தது; 'ராட்டோ' திட்டம் கைவிடப்பட்டது;
எஸ்.எல்.வி., - டயமண்ட், நான்காவது கட்டத்துடன் ஏறக்கட்டியது. இவையெல்லாம், சாம்பலில் இருந்து உயிர்த்தெழும், 'பீனிக்ஸ்' பறவை போல் மறுபடியும் என் நினைவில் தோன்றின.
கானல் நீராகிப்போன, இந்த கனவுகளில் இருந்து எப்படியோ மீண்டு வந்து, புத்தம் புது கனவுத் திட்டத்தில் கவனம் செலுத்துவதற்கு கற்றுக் கொண்டிருந்தேன். இந்த தோல்விகள் எல்லாம், அன்று, மறுபடியும் உயிர் பெற்று எழுந்து, என்னை வாட்டின.
'ஒருவேளை, நீங்கள் தான், அதற்கு காரணம் என்றால், என்ன செய்யப் போகிறீர்கள்?' என்று, யாரோ, என்னிடம் கேட்டனர்.
இந்த கேள்விக்கு, விடை காண முயன்றேன். ஆனால், மிகவும் களைத்து போய் இருந்ததால், என்னால் ஆழமாக சிந்தனை செய்ய முடியவில்லை.
உடலும், மனதும், சக்தி இழந்து விட்டது. ஒரு வாரம் முழுவதும், சரியான துாக்கம் கிடையாது. வேறெங்கும் செல்லாமல், என் அறைக்கு சென்று, படுக்கையில் விழுந்தேன்.
மாலை வேளை நெருங்கிக் கொண்டிருந்த தருணம். யாரோ என் தோளில் இதமாக தொடுவதை உணர்ந்து, கண் திறந்தேன். டாக்டர் பிரம்ம பிரகாஷ், என் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார்.
'சாப்பிட போகலாமா?' என்று கேட்டார். அவரின் பரிவிலும், அன்பிலும் நெகிழ்ந்து போனேன்.
நான் துயரத்தில் இருந்தாலும், தனிமைப்பட்டு இருக்கவில்லை. டாக்டர் பிரம்ம பிரகாஷின் துணையால், என்னுள், புத்துணர்வும், புதிய நம்பிக்கையும் பரவியது.
இந்த இக்கட்டான சமயத்தில், எனக்கு உதவினார், டாக்டர் பிரம்ம பிரகாஷ். வேதனையை தாங்கிக்கொள்ளும் அவருடைய சக்தி, எங்களுக்கெல்லாம் உற்சாகத்தை அளித்தது.
திட்டத் தோல்வியின் துயரம், எனக்கு மட்டுமில்லை என்பதை தெளிவுபடுத்தி, 'தோழர்கள் அனைவரும், உங்களுக்கு பக்கபலமாக இருக்கின்றனர்...' என்று சொன்னார்.
இந்த வார்த்தைகள், எனக்கு உணர்வுப்பூர்வமான பேராதரவையும், பெரும் உற்சாகத்தையும் அளித்து, வழி காட்டின.
'இஸ்ரோ'வின், உயர்நிலை விஞ்ஞானிகள் பங்கேற்ற கூட்டத்தில், பேராசிரியர், தவனிடம் ஆய்வு முடிவுகள் அடங்கிய அறிக்கை கொடுக்கப்பட்டது. அதை, எல்லாரும் ஏற்றுக் கொண்டனர்.
சடாரென்று எழுந்து, பேராசிரியர் தவனிடம், 'சார்... தொழில்நுட்ப காரணங்களை சொல்லி, தப்பிக்க விரும்பவில்லை; எஸ்.எல்.வி., - 3 தோல்விக்கான பொறுப்பை, நான் ஏற்றுக் கொள்கிறேன்...' என்றேன்.
கொஞ்ச நேரம், அந்த கூட்டத்தில், ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவுக்கு நிசப்தம் நிலவியது. பிறகு, தவன் எழுந்து, 'கலாம், தொடர்ந்து சுற்றுப் பாதையில் இருப்பார்...' என்று கூறி, கூட்டம் முடிந்து விட்டதை உணர்த்தும் வகையில், அங்கிருந்து வெளியேறினார்.
நடுத்தெரு நாராயணன்
