தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை

திண்ணை

திண்ணை


PUBLISHED ON : மார் 22, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 22, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ எழுதிய, 'ரத்தம் கசியும் இதயத்தின் குரல்' நுாலிலிருந்து:

ஐேராப்பிய நாடான, போர்ச்சுகலில், இருந்து, ஆயுதங்களை ஏற்றி, இலங்கை சென்ற விமானம், எரிபொருள் இல்லாத காரணத்தால், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இறங்க நேரிட்டது. விமான நிலையத்தில், சுங்க அதிகாரிகளின் நடவடிக்கையால், விமானம் முடக்கப்பட்டது.

தமிழர்களை கொன்று குவிப்பதற்காக, சிங்கள அரசு வரவழைத்த ஆயுதங்கள் அவை. சம்பவம் நடந்த அதே நாளில், இந்திய பிரதமரின் மாளிகையில், விருந்தினராக அமர்ந்திருந்தவர் யார் தெரியுமா?

'தமிழர்களை கூண்டோடு கருவறுப்பேன்...' என்று கொக்கரித்த, இலங்கையின் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர், அதுலத் முதலி. அவரது வேண்டுகோளின்படி, அன்றைய பிரதமர் ராஜிவ் உத்தரவிட, தமிழர்களை தாக்கும் ஆயுதங்களோடு கொழும்பிற்கு பறந்தது, விமானம்.

இதுபற்றி, மாநிலங்களவையில், கேள்வி நேரத்தின்போது, வினா எழுந்தது. பிரதமர் ராஜிவ் சொன்ன பதில், என்னை நிலைகுலையச் செய்தது.

'எந்த விமானமும் ஆயுதங்களோடு இந்தியாவில் இறங்கவில்லை...' எனச் சொல்லி, இரண்டு வினாடி, சபையை பார்த்து புன்முறுவலித்தார், ராஜிவ். அதன்பின், 'அந்த விமானத்தில் வெடிகுண்டு தான் இருந்தது. ஆயுதங்களுக்கும், வெடிகுண்டுகளுக்கும் வித்தியாசம் உண்டு...' என்றார்.

உடனே, நான் குறுக்கிட்டு, 'அந்த வெடிகுண்டுகள், தமிழர்களை கொல்லத்தானே எடுத்து செல்லப்பட்டன...' என்றேன்.

'அப்படி ஒன்றும் அந்த வெடிகுண்டுகளில் குறிப்பிடப்படவில்லை...' என்றார், ராஜிவ்.

நொந்த உள்ளத்தோடு, இந்திய அரசின் உதவியை நாடிய எங்களுக்கு, பிரதமரின் கிண்டல் பேச்சு, இந்தியாவின் மனப்பான்மையை உணர்த்தியது.

'பிரதமர் ராஜிவ் வாதத்தின் அடிப்படையிலேயே கேட்கிறேன்... பாகிஸ்தானுக்கு, அமெரிக்கா ஆயுதங்கள் தருவதை ஆட்சேபிக்கிறீர்கள். அந்த ஆயுதங்களில், 'இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்தப்படும்...' என்று, அமெரிக்க அதிபர், ரீகன் எழுதி அனுப்பியிருக்கிறாரா...' என்றேன்.

எழுத்தாளர், ரகமி எழுதிய நுாலிலிருந்து: ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து, சுப்பிரமணிய சிவா, ஊர் ஊராக போய் பிரசாரம் செய்தார். எனவே, சிவாவின் உடலிலுள்ள தொழுநோயை காரணம் காட்டி, அவரை, ரயிலில் பயணம் செய்யக்கூடாது என, 1924ல் தடை விதித்தது, ஆங்கிலேய அரசு.

இதை பொருட்படுத்தாமல், குதிரை மற்றும் மாட்டு வண்டிகளில் பயணம் செய்து, தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தார், சிவா. அத்துடன் நாடகங்களையும் நடத்தினார். மக்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்தது. தர்மபுரி அருகில், பாப்பாரப்பட்டியில் பாரத மாதாவுக்கு, ஒரு கோவில் கட்டியிருந்தார்.

ஜூலை 21, 1925ல், சிவாவின் உடல்நிலை மோசமடைந்தது. பாப்பாரப்பட்டிக்கு செல்ல விரும்பினார், சிவா. ரயிலில் பயணம் செய்ய தடை இருந்தாலும், ரயிலிலேயே அழைத்துச் செல்லும்படி கூறி, அதற்கான வழி ஒன்றையும், தன் சீடரான சுந்தரபாரதியிடம் ரகசியமாக கூறினார்.

சிவாவின் முழு உடலை, கம்பளியால் போர்த்தி, 'டிராலி' வண்டியில் உட்கார வைத்தார். கால் இல்லாத முடம், உடல் நிலையும் சரியில்லாதவர் என்று கூறி, ரயில்வே பிளாட்பார போலீஸ்காரரை ஏமாற்றி, வெகு சிரமப்பட்டு, ஜூலை 22ல், பாப்பாரப்பட்டிக்கு, சிவாவை அழைத்து சென்றார், சுந்தரபாரதி.

மறுநாள், ஜூலை 23, வியாழக்கிழமை அதிகாலை, 6:00 மணியளவில், சிவாவின் உயிர் பிரிந்தது. அப்போது, அவருக்கு வயது, 41 கூட நிறைவடையவில்லை.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us