
ஹரிஹர சர்மா எழுதிய, 'காந்தியின் நினைவுகள்' நுாலிலிருந்து:
மகாத்மா காந்தியும், பல்லும்!
காந்திஜியின் நண்பர் மகாதேவ் பாய் என்பவரிடம், காந்தியின் பல் ஒன்று இருந்தது. இதை பார்த்து ஒருவர் தனக்கு கேட்க, மற்றொருவர், 'அதை எனக்கு தரவேண்டும்... அது எனக்கு உரிமையுள்ளது...' என்று கூறினார். அப்போது, அந்த பக்கம் வந்தார், காந்திஜி.
'என்ன விஷயம், எதைப் பற்றி...' எனக் கேட்டார்.
'இந்த பல், தங்களுடையது. நான் பத்திரமாக வைத்திருந்தேன். இது, அவருக்கே உரிமை என கேட்கிறார்...' என்றார், மகாதேவ் பாய்.
'உரிமையை பற்றி பேசினால், நண்பர் மகாதேவ் பாய்க்கே அதிக உரிமை உண்டு. ஆனால், எல்லாருக்கும் மேல் எனக்கே அதிகம்; கொடுங்கள்...' என்று, அதை வாங்கினார், காந்திஜி.
அடுத்து, யாரும் எடுக்க முடியாத இடம் நோக்கி துாக்கி எறிந்து விட்டார்.
அந்த பல் மட்டும் இன்று இருந்திருந்தால், பலமுறை ஏலத்துக்கு வந்திருக்கும். பல லட்சம்,
விலை போயிருக்கும்; காந்தியின் பல் பிழைத்தது!
ரஸ்கின்... தோரோ... டால்ஸ்டாய்!
காந்திஜி சென்று தங்குமிடங்களில் எல்லாம், அவருடைய அபிமான மகான்களாகிய, ரஸ்கின், டால்ஸ்டாய் மற்றும் தோரோ இவர்களுடைய படங்களை முன்கூட்டியே மாட்டி வைத்து விடுவர்.
இவர்களுடைய புத்தகங்களை படித்து தான், காந்திஜி, தன்னை உயர்த்திக் கொண்டார் என்பது, பலரின் அபிப்பிராயம்.
ஒருமுறை, இதை பார்த்த காந்திஜி, 'இந்த படங்கள் என் காரணமாகவே இங்கே மாட்டப்பட்டிருக்கின்றனவா...' என்று கேட்டார்.
மேலும், 'ரஸ்கின், தோரோ மற்றும் டால்ஸ்டாய் முதலியோரின் நுால்களை படித்த பிறகே, நான் அவர்களுடைய கொள்கைகளை எனதாக்கிக் கொண்டேன் என்று கருதப்படுகிறது. ஆனால், என் கொள்கைகள் திடமான பிறகே, நான் அவர்களின் நுால்களை படித்தேன். என் சிரத்தை மேலும் திடமாயிற்று என்பது தான் உண்மை...' என்றார், காந்திஜி.
காந்திஜியும், கோவணமும்!
தண்டி யாத்திரையில் கலந்துகொள்ள, காந்திஜியுடன், சரோஜினி நாயுடுவும் வந்தார். அவருக்கு, காந்திஜியின் செயல் பிடிக்கவில்லை. இருந்தாலும், தலைவர் எவ்வழியோ அதுவே தன் வழியும் கூட என, புறப்பட்டு விட்டார்.
அப்போது, புடவை சாயம் தோய்க்கும் முகமதிய நண்பர் ஒருவர் வந்தார். தாமே சாயம் தோய்த்த ஒரு புடவையை, சரோஜினி தேவிக்கு காணிக்கையாக அளித்து, 'நீங்கள் சொன்னால், காந்திஜிக்கு ஒரு மூவர்ண கோவணம் தயார் செய்து கொடுத்து விடுகிறேன்...' என்றார்.
நகைச்சுவையாக பேசுவதில் வல்லவரான சரோஜினி தேவி, 'அப்படி ஏதேனும் செய்து வைக்காதீர். ஏனென்றால், உண்மையாகவே ஸ்வராஜ்யம் கிடைத்து விட்டால், அந்த மகிழ்ச்சியில், இந்த மூவர்ண கோவணத்தையே கிழித்து, கொடியாக்கி, பறக்க விட்டு விடுவார்...' எனக் கூற, கூடியிருந்த அனைவரும் சிரித்து விட்டனர்.
நடுத்தெரு நாராயணன்

