PUBLISHED ON : ஏப் 25, 2021

சிப்பி புக்ஸ் பதிப்பகம், சாமி சிதம்பரனார் எழுதிய, 'தமிழர் தலைவர் ஈ.வெ.ரா.,' நுாலிலிருந்து: மலேயா நாட்டில், ஈ.வெ.ரா.,வின் சொற்பொழிவை கேட்பதற்கென, ஒவ்வொரு இடத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர்.
ராமசாமியார் என்ற பெயரை கேட்டவுடன், பாமர மக்கள் பலர், அவரை ஒரு சாமியார் என்றே நினைத்தனர். இந்திய சாமியாரை தரிசிக்க வேண்டுமென்று, அவரிடம் பலர் வந்தனர்.
ஒரு சிறு கிராமத்தில், மாலை, 6:00 மணிக்கு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடாகி இருந்தது. சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஏராளமான மக்கள் வந்திருந்தனர். பொதுக்கூட்டம் முடிந்து, இரவு சாப்பாடும் முடிந்தது.
இரவு நிலவில், தெருவில், நாற்காலிகள் போட்டு, ஈ.வெ.ரா.,வுடன் தோழர்களும் அமர்ந்து, உரையாடிக் கொண்டிருந்தனர்.
இச்சமயம், 40 வயதுள்ள பெண்மணி, தன், 20 வயது பெண்ணுடன் வந்தாள்.
'இந்தியாவிலிருந்து வந்திருக்கும் சாமியார் எங்கே...' என்று தேடினாள்.
அங்கிருந்தவர்கள் சிரித்தபடியே, ராமசாமியாரை கை காட்டினர்.
உடனே, தன் பெண்ணுடன் அவர் காலில் விழுந்து வணங்கி, 'சுவாமி... நான், 10 கல்லுக்கு அப்பாலிருந்து வருகிறேன். ஆதலால், நேரமாகி விட்டது. உங்கள் உபதேசத்தை கேட்க கொடுத்து வைக்கவில்லை.
'இவள், என் பெண். கல்யாணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் பிள்ளை இல்லை. நீங்கள் ஏதாவது நல்வாக்கு கொடுக்க வேண்டும். தங்கள் வரத்தால் தான் பிள்ளை பிறக்க வேண்டும்...' என்றாள், பரிதாப குரலில்.
இதைக் கேட்டதும், பக்கத்திலிருந்தவர்கள் நகைத்தனர். ஈ.வெ.ரா.,வும் நகைத்தார்.
அப்பெண்மணியின் அறியாமைக்கு இரங்கினார்.
'அம்மா... நான் சாமியாரல்ல; வெறும் ஆசாமி தான். எனக்கே, 30 ஆண்டுகளாக பிள்ளை இல்லை. நான் சொல்வதை நம்பாவிட்டால், இந்த அம்மாவை (நாகம்மையாரை காட்டி) கேட்டுப் பார். தனக்கே பிள்ளை இல்லாதவன் உனக்கு எப்படி வரம் கொடுக்க முடியும்...
'பிள்ளை இல்லாவிட்டால் என்ன, இங்கு இருக்கும் வரை, நன்றாக சம்பாதித்து சாப்பிடுங்கள். சிக்கனமாக செலவு செய்து, மீதம் பிடியுங்கள். அப்போது தான், இந்தியாவுக்கு போனால், சுகமாய் இருக்கலாம்...' என்றார்.
'சாமி... நீங்கள் சொல்வதை நான் நம்ப மாட்டேன். பெரியவர்கள் இப்படித்தான் சொல்வர். ஏழையின் மேல் பெரிய மனது வைத்து ஆசிர்வாதம் பண்ண வேண்டும்...' என்று, பிடிவாதம் பண்ணினாள், அப்பெண்.
இறுதியில், அவளுக்கு மகிழ்ச்சி உண்டாக, 'சரி... உன் மகளுக்கு இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு பிள்ளை கவலை வேண்டாம். பிறகு, ஆண் குழந்தை பெற்று, சுகமாக வாழ்வாள்...' என்று, சொன்னார்.
அவளும் சமாதானமடைந்து, சென்றாள்.
நண்பர்கள் அனைவரும், வேடிக்கையாக பரிகாசம் செய்தனர்.
'உலகத்தை வென்ற மாவீரர்கள்' நுாலிலிருந்து: பல நாடுகளை வென்று, வெற்றிக் களிப்பில், நாடு திரும்பும்போது, கடுமையான நோயால் பாதிக்கப்பட்டார், மாவீரன் அலெக்சாண்டர். உடன் வந்த வைத்தியர்கள் கூட கைவிட்ட நிலை.
இனி, பிழைப்பது அரிது என்ற அந்த நேரத்தில், தன் அம்மாவை பார்க்க ஏங்கினார், அலெக்சாண்டர்.
ஆனால், நிலைமை மோசமானது. உடனே, தன் தளபதிகளை அழைத்து, தன், மூன்று கடைசி ஆசைகளை அறிவித்தார்.
ஒன்று: என் சவப்பெட்டியை மருத்துவர்கள் தான் சுமந்து செல்ல வேண்டும்.
இரண்டு: வீடு முதல் இடுகாடு வரை, என் இறுதி ஊர்வலப் பாதை முழுக்க, நான் கவர்ந்து வந்த முத்து, மணி, நவரத்தினங்களை வீசி வரவேண்டும்.
மூன்று: இரு கைகளும் வெளியே தெரியும்படியாக என்னை சவப்பெட்டியில் வைத்து மூட வேண்டும்.
'ஏன்...' என, கேட்டார், தளபதி.
'நான், என் வாழ்வில் கற்றுக்கொண்ட மூன்று பாடங்களை தான், மக்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.
'ஒன்று: எப்பேர்ப்பட்ட மன்னனாக இருந்தாலும், வைத்தியர்கள் கைவிடும் நாள் வரும். எனவே, அவர்களை துாக்கச் சொன்னேன்.
'இரண்டு: ஒரு குண்டுமணி தங்கம் கூட, செத்த பின் என்னுடன் வரப்போவதில்லை. எனவே, அவற்றை ஊர்வல பாதையில் இறைத்து விட சொன்னேன்.
'மூன்று: இந்த பூமிக்கு வெறும் கையனாக வந்தேன். வெறுங் கையனாகவே போகிறேன். எனவே, வெறுங்கைகள் வெளியே தெரியும்படி சவப்பெட்டியை மூடச் சொன்னேன்...' என்றார்.
நடுத்தெரு நாராயணன்
