PUBLISHED ON : ஏப் 25, 2021

'மே தினம்... சுப தினம்!'
உலக மக்களின்
சுப தினம்
உழைப்பாளிகளின்
மே தினம்!
உழைப்பின் சப்தம்
கருவியாகிறது!
உழைத்தவன் ரத்தம்
வியர்வையாகிறது!
வாரிசுகளின் கண்களில்
எதிர்பார்ப்பின் பிரதிபலிப்பு!
உழைப்பாளிகளின் கண்களிலோ
ஒரு கோடி ஜொலி ஜொலிப்பு!
இருபதில் துவங்குகிறது
உழைப்பாளியின் உழைப்பு!
அறுபதில் நெருங்குகிறது
ஆயுளின் அழைப்பு!
இடைப்பட்ட காலம்
முழுவதும் ஓட்டம்!
இறுதி வரை இருப்பதில்லை
வாழ்க்கையில் ஏற்றம்!
காய்த்துத்தான் போகிறது
உழைப்பாளிகளின் கைகள்!
கனியாமலே போகிறது
உழைப்பாளியின் கனவுகள்!
சம்பள நாட்களில்
காத்திருக்கிறது உறவுகள்!
சர்வசதா காலமும்
காத்திருக்கிறது வறுமை!
உலகப் போர் ஆட்டமோ
ஆண்டுக்கணக்கில் தான்
உழைப்பாளிகள் போராட்டமோ
ஆயுள் முழுமைக்கும்!
என்றாலும் -
உழைப்பை அவர்கள்
நிந்திப்பதும் இல்லை;
ஒரு நொடி கூட
நிராகரிப்பதும் இல்லை!
இவற்றை உணர்ந்து
உழைப்பாளிகளை உலகம்
நினைக்க வேண்டிய தினம், 'மே தினம்!'
நினைத்தால்...
அதுவே அவர்களுக்கு, 'சுப தினம்!'
சு. விஜயலட்சுமி, கடம்பூர்.
