PUBLISHED ON : ஜூலை 16, 2023

எஸ்.எஸ்.மாரிசாமி எழுதிய, 'ராஜாஜியுடன் 1000 நாட்கள்' நுாலிலிருந்து: திருவண்ணாமலையில், ராஜாஜிக்கு ஒரு நிகழ்ச்சி இருந்தது. ராஜாஜி, திருவண்ணாமலை செல்வதில், நேருவுக்கு விருப்பம் இல்லை. ஆனால், அதை பொருட்படுத்தவில்லை, ராஜாஜி.
'இந்த மாதிரி அடுத்தவர் யோசனைகளை கேட்டு நடந்தால், வேலைக்கு ஆகாது. திருவண்ணாமலையிலுள்ள, ஹிந்து கோவிலில் திருப்பணி நடக்கிறது. அதற்கு வருவதாக ஒப்புக்கொண்டு விட்டேன்.
'மற்றொரு காரணம், திருவண்ணாமலை ரயிலடியில், என் பழைய நண்பர் ஒருவர், என்னை பார்க்க வருவார். அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்...' என்று, செயலரிடம் கூறினார், ராஜாஜி.
'அந்த நபர் எப்படி இருப்பார் என்பது எனக்கு தெரியாதே...' என்றார், செயலர்.
'அடையாளம் தெரியாமல் போகாது. வெண்ணிற தாடி இருக்கும். அவரை சுற்றி அவரது தொண்டர்களும், ஆதரவாளர்களும் இருப்பர். சுலபமாக கண்டுகொள்வீர்கள்...' என்றார், ராஜாஜி.
அவர் சொல்லியபடியே நடந்தது.
ரயிலடியில் தயாராக நின்றிருந்தார், ஈ.வெ.ரா.,
***
'இல்லஸ்ட்ரேட் வீக்லி' ஆங்கில இதழின் அப்போதைய ஆசிரியர், ஏ.எஸ்.ராமன், 1965ல், அண்ணாதுரையை பேட்டி கண்டார்.
'தி.மு.க.,வில் பிராமணர் சேரலாமா...' என்ற கேள்விக்கு, 'பிராமணர் சேருவதை வரவேற்கிறேன்...' என்றார், அண்ணாதுரை.
'ராஜாஜி சேருவதானால், அவருக்கு உங்கள் கட்சியின் தலைமை பதவியை தருவீர்களா...' என்ற கேள்விக்கு, 'ஆம்... அது, தி.மு.க.,வுக்கு சிறப்பான நாளாகும்...' என்றார், அண்ணாதுரை.
***
முனைவர் எஸ்.சந்திரா எழுதிய, 'அறிஞர்கள் வாழ்வில்...' நுாலிலிருந்து:
காமராஜர் முதல்வராக இருந்தபோது, காந்திஜியை உட்கார்ந்த நிலையில், ஓவியமாக வரைந்தார், ஓவியர் பாஷ்யம். அது, காமராஜருக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. எல்லா மாவட்ட கமிட்டிகளும் அந்த ஓவியத்தை வாங்கும்படி உத்தரவிட்டு, கடிதம் அனுப்பச் சொன்னார்.
அதற்கான உத்தரவை தட்டச்சு செய்த உதவியாளர், 'எல்லா அலுவலகங்களிலும் இந்த படத்தை, 'ஹேங்க்' செய்யவும்...' என, எழுதியிருந்தார்.
அதை, காமராஜரிடம் காட்டியபோது, 'ஹேங்க்' என்ற ஆங்கில வார்த்தையை, 'இன்ஸ்டால்' என மாற்றச் சொன்னார். 'ஹேங்க்' என்ற வார்த்தைக்கு, 'தொங்க விடவும்' என்ற பொருள் இருந்தாலும், 'துாக்கில் போடவும்' என்ற பொருளும் இருந்ததால், காந்திஜிக்கு மரியாதை செய்யும் பொருட்டு, கவனமாக அந்தச் சொல்லை மாற்றினார், காமராஜர்.
காமராஜர் படிக்காதவர் என்பதால், அவருக்கு ஆங்கிலம் தெரியாது என, தவறாக நினைத்தவர்களுக்கு, தம்மைத் திருத்திக் கொள்ள இந்த நிகழ்ச்சி உதவியது.
***
நடுத்தெரு நாராயணன்
