PUBLISHED ON : அக் 11, 2015

அணுநாயகன் அப்துல் கலாம்!
மதம் பிடிக்கா மனிதர்
மனித நேயப் புருஷர்
தமிழ் படித்த விஞ்ஞானி
தமிழுக்கு கிடைத்த ஞானி!
எத்தனையோ பேர்
இப்பதவிக்கு வந்த போதும்
நீர் வந்த போது தானே
குடியரசுத் தலைவரென்ற கோபுரப் பதவி
சந்தனத்தை பூசிக் கொண்டது!
எத்தனையோ பேர்
தொட்டுப் போன நாற்காலியில்
நீர் அமர்ந்த பின் தானே
பட்டுப் பீதாம்பரங்களின்
பாரம்பரியத்தை உதறி
பருத்தி ஆடையில் பேசிக் கொண்டது!
மனப்பாடுகள் தீர
மனப்பாடங்கள் தந்தவர்
கணப்பாடுகள் மீற
கனவு காணச் சொன்னவர்!
சின்னத்திரையிலும்,
வண்ணத்திரையிலும் நடிக்காமல்
எண்ணற்ற இளசுகளின்
மனத்திரையிலும், மானசீகத்திலும்
வாழ்ந்த கதாநாயகர்!
இவரின் வருகைக்கு பின் தான்
கரிசல் காட்டுக்கும் கனவு வந்தது
இவரின் இருக்கைக்குப் பின்தான்
இஸ்ரோ தன் சிறகுகளை சிலிர்த்தது!
சாமானியனுக்கும்
சாம்ராஜ்ய பாஷை சொல்லிக் கொடுத்த
சாக்ரட்டீஸ் நீர்
சாதிக்கச் சொல்லியே
சரித்திரத்தை சரியான
பாதைக்கு ஓட்டிய சாரதி நீர்!
எவர் வருவர் உம்போல்
எவர்வரினும் இணையோ
உம்தாள் போல்
எம்மான் நீர் வாழ்க
இந்து சமுத்திரமாய்
நீர் வாழ்க!
— சுசீந்திரன், சென்னை.
