
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரீட்சை வந்தாச்சு!
பரீட்சை வந்தாச்சு
பயம் வேண்டாம்
அதுவும் ஒரு பண்டிகை என்றே
மகிழ்வோடு கொண்டாட
தயாராவாய்!
பாஸ் மார்க் வாங்கிட மட்டும்
தேர்வுகள் வருவதில்லை
உன்னை நீயே
பரீட்சித்துக் கொள்ளும் நேரம் அது!
சிந்தனை சிதறா கவனம்
உன் கவசமாக இருக்கட்டும்
படிப்பை மட்டுமல்ல - கல்வி
படிப்பினையை சொல்லவல்லது!
வெற்றிப்படிகளைத் தாண்டும் போது
சிலசமயம்
தடுக்கியும் விழுவதுண்டு
அதுவே தோல்வி என்று
துவண்டு, புதைந்து விடாதே!
பதற்றம், படபடப்பு, பயம்
உன்னை வினா குறியாக்கும்...
வேண்டா விருந்தாளிகள்
உன் வீட்டு வாசலிலேயே
அவைகளுக்கு
விடை கொடுத்து விடு!
வினாக்கள் புரியும் முன்
உன்னை புரிந்து கொண்டால்
எழுதுகோலும்
உனக்கு செங்கோலாகும்
தேர்வு சாம்ராஜ்ஜியத்தின்
சக்ரவர்த்தி ஆவாய் நீ!
— ஜனபிரவாகன்,சென்னை.

