PUBLISHED ON : ஏப் 29, 2018

நன்றி சொல்ல ஒருநாள்!
உலகிற்கு நன்றி சொல்ல
நாம் மறந்திருக்கலாம்...
ஆனால், உலகம் நமக்கு
நன்றி சொல்லும் நாளே
உழைப்பாளர் தினம்!
காடு மேடாய்
கட்டாந்தரையாய் கிடந்த நிலத்தை
பொன் விளையச் செய்த கரங்களை
பூமித்தாய் முத்தமிடும் நாளே
உழைப்பாளர் தினம்!
தறிகெட்டு ஓடிய
ஆறுகளுக்கு அணை கட்டி
வீரியம் கொண்டு
விழும் அருவிகளில்
மின்சாரம் எடுத்து
இருள் துடைத்து, ஒளிரச் செய்த
கரங்களை கவுரவிக்கும் நாளே
உழைப்பாளர் தினம்!
உப்பிட்டவரை
உள்ளளவும் நினைக்க
வியர்வை உப்பை
விதைத்த உழைப்பாளிக்கு
வெற்றியை விருதாக்கி
உலகம் எடுக்கும் விழாவே
உழைப்பாளர் தினம்!
பூமியின்
இன்றைய வளர்ச்சிக்கும்
மலர்ச்சிக்கும்
உழைப்பாளிகளின் உழைப்பே
உரமாய் இருந்திருக்கிறது
அதற்கான அங்கீகாரமே
உழைப்பாளர் தினம்!
வான் மண்டலத்தில்
கனவு காட்சிகளாய்
வலம் வந்த கோள்களுக்கு
செயற்கைக்கோள் அனுப்பிய
செயலுக்கான அடையாளம்
உழைப்பாளர் தினம்!
பணிச் சுமைக்கு மத்தியில்
நினைக்க மறந்துவிட்ட
உழைப்பாளியை
நினைவூட்ட வருகிறது
உழைப்பாளர் தினம்
இந்த நாள்...
உழைப்பாளருக்கு
நன்றி சொல்லவொரு திருநாள்!
உலகம் போற்றும்
உழைப்பாளர் தினத்தில்
வியர்வை சிந்தும் விரல்களை பிடித்து
நன்றியோடு நலம் விசாரிப்போம்...
ஏனெனில்
உழைப்பு
தனி மனித பிழைப்பிற்கான
வேலை அல்ல
தரணியின் செழிப்பிற்கான சேவை!
மீரா மணாளன், நெல்லை.
