
அன்பாய், அழகாய், அறிவாய் வளர்த்திடுவோம்!
அன்பாய்
ஓரிரு வார்த்தை
அழகாய்
சிறு சிறு புன்னகை
மெலிதாய் தினம்
கட்டி அணைத்தால்
எளிதாய் ஏக்கம் தீரும்!
பாராமுகமாய் இருந்தால்
பாரம் ஏறிவிடும்
எதையும் கேளாது இருந்தால்
என்றும் கேட்காமல் செய்து விடும்!
குட்டி கதைகளை
குதுாகலமாய் சொல்லிக் கொடு
குறும்பு கேள்விகளை
சுதந்திரமாய் சொல்ல விடு!
நிலவு ஒளியில்
நட்சத்திரம் தேடச் சொல்
சூரிய ஒளியில்
வியர்வை வர ஓடச் சொல்!
சாலை ஓரங்களில்
நடக்க கற்றுக்கொடு
உன்னிலும் ஏழையின்
நிலையை உணர்த்திடு!
மானம் பெரிதென
வாழ்ந்திட உணர்த்திடு
அவமானம் தாங்கிட
மனதை பழக்கிடு!
நல்லது கெட்டது
அறிந்திட உணர்த்திடு
நல்லதை மட்டுமே
செய்திட வைத்திடு!
அன்புக்கு ஏங்கும்
குழந்தையிடம்
ஆத்திரம் கொள்ளாதே...
மழலை உள்ளத்தின்
கடவுள் தன்மையை
கடிந்து கொள்ளாதே!
பூமியில் பிறந்த
அனைவருக்கும்
ஏதேனும் இடமிருக்கும்...
சாதிக்க துடிக்கும்
எல்லாருக்கும்
வாய்ப்புகள் காத்திருக்கும்!
அறிவு கட்டடத்தில்
அன்பு அடித்தளம்
அழகாய் அமையட்டும்
வெற்றி கொடிகளின்
வேர்கள் எல்லாம்
பாசத்தில் பதியட்டும்!
- டாக்டர் வடுகம் சிவகுமார்,
சென்னை.

