PUBLISHED ON : மார் 17, 2019

நாற்பது ஆண்டுகளுக்கு முன், எந்த டீ கடையில், கூட்டிப் பெருக்கும் வேலையில் சேர்ந்தாரோ, அதே டீ கடையின், அதிபராக உயர்ந்ததுடன், தன் கடையை, லட்சங்கள் குவிக்கும், நாட்டின், 'நம்பர் ஒன் டீ கடை'யாகவும் மாற்றியுள்ளார். அது மட்டுமின்றி, 10 ஆண்டுகளாக, நாள் தவறாமல், அன்னதானம் செய்து வருகிறார்.
அவர் தான், பாபுராவ்.
தெலுங்கானா மாநிலம், அடிலாபாத் கிராமத்தில், ஒரு விவசாய கூலி தொழிலாளியின் மகனாக பிறந்தவர். படிக்க வசதி இல்லாத காரணத்தால், பிழைப்பு தேடி, ஐதராபாத் வந்தார்.
இங்கு, இவருக்கு கிடைத்தது, 'நிலோபர் கபே' என்ற, சிறிய டீ கடையில், கூட்டிப் பெருக்கும் வேலை தான். அந்த வேலையை சந்தோஷமாகவும், சுத்தமாகவும் செய்தார்.
இவரது செயல்கள், பிடித்து போகவே, ஒவ்வொரு படியாக உயர்த்தி, ஒரு கட்டத்தில், தன் கடையையே, பாபுராவிடம் ஒப்படைத்தார், அந்த டீ கடை முதலாளி.
கடை, தன் கைக்கு வந்ததும், அதை, நகை கடை போல அலங்கரித்தார். டீக்களில் இத்தனை ரகங்களா... என, வியக்கும்படியாக, டீ மட்டுமின்றி, உலகத் தரத்தில் பிஸ்கட் மற்றும் 'பேக்கரி ஐட்டங்கள்' தயாரித்து கொடுத்தார்.
இன்று, ஐதராபாத், 'லால்டி கா பவுல் பஜார்' வழியாக பயணம் செய்யும் யாரும், இந்த, 'நிலோபர் கபே டீ கடை'க்கு விஜயம் செய்யாமல் இருப்பது கிடையாது. எப்போதும், திருவிழா நேரத்து, ஜவுளிக்கடை போல, கூட்டம் மொய்க்கிறது.
டீ சாப்பிடும் வாடிக்கையாளர்களை, குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து, துபாய் அழைத்துச் செல்கின்றனர். இந்த டீ கடையின் இன்னொரு அம்சம், 'பார்சல்' வாங்குவோருக்கு, ஒருமுறை உபயோகிக்க கூடிய, பேப்பர் பிளாஸ்க்கில் டீ தருகின்றனர்; எவ்வளவு நேரம் கழித்து குடித்தாலும் சூடு ஆறுவதில்லை.
பாபுராவின் இன்னொரு பக்கம், கருணை நிறைந்தது. பசியின் கொடுமையை உணர்ந்ததாலோ என்னவோ, 10 ஆண்டுகளாக, தன் கடை அமைந்துள்ள தெருவில் இருக்கும், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்களுக்கு, காலை - மதியம் என, இருவேளையும் இலவசமாக உணவு வழங்கி வருகிறார்.
கடைக்கு, ஆதரவற்றோர் யார் வந்தாலும், வேலை கொடுத்து ஆதரிக்கிறார். கொஞ்ச நாளானதும், அவர்களுக்கு, டீ கடை வைக்க, பண உதவி செய்து, பிழைக்கவும் வழிகாட்டுகிறார்.
ஐதராபாத் பக்கம் போனால், உழைப்பாலும், குணத்தாலும் உயர்ந்து நிற்கும், பாபுராவை, அவசியம் பார்த்து வாருங்கள்.
எல்.முருகராஜ்

