
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முரண்!
அலைகடல் ஏனோ
என்னை அச்சுறுத்துகிறது
அலைகளின் ஆவேசம்
ஆழ் கடலின் அமைதியின்
ஆவேசமான வெளிப்பாடோ
தெரியவில்லை!
மனித மனமும்
ஓர் ஆழ் கடல் தான்
வெளி காட்டுவதில்லை
அதில் தான் வேற்றுமை
அலைபாயும் உள்ளங்களை
வெளியில் காட்டாமல்
ஆழ் கடலின் அமைதியை
அணிந்து வாழ்கிறோம்!
ஆயிரம் வாசல் இதயம்
இன்பங்கள், துன்பங்கள்
உதயம், அஸ்தமனம்
வெளியில் தெரிவது
கொஞ்சமே தான்
புயலும், காற்றும்
உள்ளேயே தான்!
கடற்கரையில் அமைதி தேடும்
நாம் கடலிடம் சொல்வதில்லை
நீயும், நானும் ஒன்று தான்
உனக்கு எங்களிடம் பயமில்லை
ஆனால், நாங்கள் உன்னைக்
கண்டு ஆனந்தம் கொள்வதுடன்
அச்சமும் கொள்கிறோம்!
உன்னிடம் உருவாகும் புயலோ
சுனாமியோ எங்களை நொடியில்
அழித்து விடலாம் ஆனால்
எங்கள் உள்ளத்தில் உறங்கும்
புயலை வென்று அமைதி காண
உன் கரைக்கு வருகிறோமே
என்ன ஓர் முரண்?
— ஜி. சுவாமிநாதன், சென்னை.