
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தோற்றுப்பார்!
யார் சொன்னது
வெற்றி
மட்டும் தான்
நல்வழியென்று...
தோற்றுப் பார்
விழுந்த வேகத்தில்
வீறு கொண்டு எழுவாய்
விதையைப் போல்!
எழுந்த வேகத்தில்
அவமானங்களை
சினம் கொண்டு
துாசியென தட்டி களைவாய்
செடியை போல்!
களைந்த வேகத்தில்
உழைப்பில்
வேகம் கொண்டு வளர்வாய்
மரத்தை போல்!
வளர்ந்த வேகத்தில்
செயலில்
விவேகம் கொண்டு செழிப்பாய்
கிளையைப் போல்!
செழித்த வேகத்தில்
மற்றவர்களை தலை நிமிர்த்தி
பார்க்கச் செய்வாய்
வாசம் வீசி
பூக்களை போல்!
பார்க்க செய்த வேகத்தில்
அவர்களுக்கு
உதவியும் செய்வாய்
இனிக்க வைத்து
கனிகளை போல்!
இனிக்க வைத்ததே
இன்பமென்று
தலைக்கனம் ஏதுமின்றி
நிம்மதி பெருமூச்சு விடுவாய்
சுயநலமறியா
காற்றைப் போல்!
ஆம்...
யார் சொன்னது
வெற்றி மட்டும் தான்
நல் வழியென்று...
தோற்றுப் பார்!
மு.கவுந்தி, சென்னை.

