PUBLISHED ON : ஆக 30, 2020

வாழ்வில் எதையும் செய்ய ஒரு, 'தில்' வேண்டும் என்பரே, அது மனோபலம் தான். ஓட்டப்பந்தயத்தில் ஓடும் வீரர் திடீரென விழுந்து காயம் ஏற்பட்டாலும், அதை பொருட்படுத்தாமல், வெற்றி இலக்கை அடைய எழுந்து ஓடுகிறாரே, அந்த துணிச்சல் மனநிலை தான், மனோபலம்.
ஒரு செயலை செய்ய முடியும் என்று நினைப்பது, தன்னம்பிக்கை. அந்த செயலை வெற்றிகரமாக செய்து முடிக்க உதவுவது, மனோபலம். ஒரு செயலை செய்ய முற்படும்போது, பல தடைகள் ஏற்படலாம். அவை அனைத்தையும் முறியடித்து, வெற்றி பெற உதவுவது தான் மனோபலம்.
மனோபலத்தை அதிகரிக்க, சில டிப்ஸ்:
* உங்களுக்கு சரியென்று பட்ட, நியாயமான விஷயங்களில் ஈடுபடும்போது, மற்றவர்கள் என்ன நினைப்பரோ என்ற எண்ணத்தை ஒதுக்கித் தள்ளுங்கள்
* ஒரு விஷயத்திற்காக அதிகமாக சிந்தித்து, மனதை குழப்பிக் கொள்ளாதீர்கள். நடப்பது நடக்கட்டும் என்று விட்டு விடுங்கள்
* உங்களுடைய செயல்களுக்கு, நீங்களே முழு பொறுப்பு. அதனால், எது நடந்தாலும் ஏற்றுக் கொள்ளுங்கள். எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருந்தால் தான், நீங்கள் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியும்
* மற்றவர்கள், உங்களை வித்தியாசமாக நடத்துகின்றனரா, கவலையை விடுங்கள். உங்கள் குறிக்கோளை நோக்கியே செல்லுங்கள். அடுத்தவர்கள், தங்களை வித்தியாசமாக நடத்தியதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாதவர்கள், சாதித்தவர்கள்
* மற்றவர்கள் உதவுவர் என்று நினைத்து எதையும் செய்வதில்லை, சாதித்தவர்கள். எது நடந்தாலும் சரி, அவர்கள் நினைத்ததை சாதிக்க முனைபவர்கள்; எந்த தடையையும் தாண்ட முயல்கிறவர்கள்
* நீங்கள் செய்யும் சில செயல்கள், சில நேரம் மற்றவர்களின் கேலிக்கு ஆளாகலாம். உங்களிடமே சில குறைகள் இருக்கலாம். அதை எதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாதீர்கள். நமது இலக்கு வெற்றி மட்டுமே
* நாள் முழுவதும் நல்லதே நடக்கும் என்பதற்கு, யாரும் உறுதி தர முடியாது. நல்லதும் நடக்கும், கெட்டதும் நடக்கும். கெட்டது நடந்தால், அதை சமாளிக்க கற்றுக்கொள்ளுங்கள். எதையும் உங்களால் சமாளிக்க முடியும் என்பதை நம்புங்கள். எதற்கும் அச்சமடையாதீர்கள். எது நடந்தாலும் சரி, மகிழ்ச்சியாக இருங்கள். ஆடுங்கள், பாடுங்கள், மூலையில் மட்டும் முடங்கி விடாதீர்கள்.
- கோவீ.ராஜேந்திரன்
