
மஹாத்மாவே... மறுபடியும் பிறக்க வேண்டாம்!
அண்ணலே...
நீங்கள் போதித்த அஹிம்சை
அறவே ஒழிக்கப்பட்டு
கருவறை துவங்கி
கல்லறை வரை
வன்முறை மட்டுமே
வழக்கமாகி விட்டது!
அற வழி என்ற
உங்கள் கொள்கை மறந்து
குடிசை துவங்கி
கோபுரம் வரை
ஊழலும், கொள்ளையும்
கொடி கட்டி பறக்கிறது!
ஜாலியன் வாலாபாக்
படுகொலைக்காக
நீங்கள் உருவாக்கியது
ஒத்துழையாமை இயக்கம்
கொலைகளை வியாபாரமாக்கும்
வித்தையை ஒற்றுமையாக
செய்வது தான் இங்கே
வழக்கமாகி விட்டதே!
வெள்ளையனுக்காக
நீங்கள் உருவாக்கியது
வரி கொடா இயக்கம்
இல்லை என்ற நிலையிலும்
இன்று, நாங்கள் வரி கட்டாத
பொருட்களே இல்லை!
உப்புக்காக நீங்கள்
தண்டி யாத்திரை சென்றீர்கள்
தவறு செய்பவர்களை
ஒப்புக்கு கூட யாரும்
இங்கே தண்டிப்பதில்லை!
நீங்கள் பிறந்த
இந்த ஒரு நாளாவது
மதுவை மறப்போம்
புலாலை புறக்கணிப்போம்
என்பதெல்லாம்
உங்கள் மேல் கொண்ட அளவற்ற
மரியாதையால் அல்ல...
அளவில்லாமல் சாப்பிடத்தான்!
பொது நலம் இங்கே
குழி தோண்டி புதைக்கப்பட்டது
சுயநலம் மட்டுமே இங்கே
வாடிக்கையாகி விட்டது!
மஹாத்மாவே...
மறுபடியும் பிறந்து விடாதீர்கள்
நாடு முழுதும்
'நாதுராம் கோட்சே'க்கள் தான்
நடமாடுகின்றனர்!
வே. விநாயகமூர்த்தி,
சென்னை.

