
அன்புள்ள அம்மா —
நான், 27 வயது ஆண்; நடுத்தர குடும்பத்தை சார்ந்தவன்; வீட்டுக்கு ஒரே பையன். நான் கல்லுாரியில் படிக்கும்போது, காதல் வயப்பட்டேன். பொறியியல் படிப்பை, நான்கு ஆண்டுகளுக்கு முன் முடித்தேன்.
அந்த நொடிக்காகவே காத்திருந்த பெற்றோர், குடும்ப பாரம் மற்றும் அவர்களின் கடன் சுமை அனைத்தையும், என் தலையில் ஏற்றி விட்டனர்.
எனக்கு, அரசு வேலைக்கு செல்ல ஆசை. ஆனால், குடும்ப சூழ்நிலையால், தனியார் வேலைக்கு செல்லும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. சென்னை சென்று, மிகவும் கஷ்டப்பட்டு, வேலை கிடைத்தது; அதுவும், 'கான்ட்ராக்ட்' வேலை.
எனக்கு வேறு வழி இல்லை, மூன்று ஆண்டுகள் வேலை செய்து, வீட்டுக் கடன் அடைத்து, வீட்டுச் செலவையும் ஏற்றுக் கொண்டேன். இருந்தும், எனக்கு அரசு வேலை ஆசை மறையவில்லை.
வீட்டில் என் ஆசையை கூறி, அரசு தேர்வுக்கு படிக்க, ஒரு ஆண்டு அவகாசம் கேட்டேன். எனக்கு விபரம் தெரிந்து, என் அப்பா, எந்த வேலைக்கும் சென்றதில்லை. வீட்டில் சமாளித்துக் கொள்ளலாம் என்று கூறவும், வேலையை விட்டு, படிக்க ஆரம்பித்தேன்.
குரூப் - 4 தேர்வில், 150 மதிப்பெண்கள் எடுத்தேன்.
எனக்கு தெரியும், முதல் முயற்சியில் வெற்றி பெறுவது கடினம் என்று, அடுத்த தேர்வுக்கு தொடர்ந்து உழைத்தேன். அப்போது தான் வந்தது, 'கொரோனா' பெருங்கொள்ளை நோய். குடும்ப பொருளாதாரம் வீழ்ந்தது.
நான், மூன்று ஆண்டுகள் கஷ்டப்பட்டு அடைத்த கடனை, இந்த ஒரே ஆண்டில் நிரப்பி விட்டனர். இப்போது, வீட்டு செலவும், என் தலையில் ஏறியது. என்ன செய்வது என்று தெரியவில்லை.
மீண்டும் தனியார் வேலைக்கு செல்ல, எனக்கு மனம் வரவில்லை. வீட்டிலும் ஆதரவு இல்லை. அவர்கள் செலவையும் நான் தான் பார்க்க வேண்டி உள்ளது. ஆனால், என் பெற்றோருக்கு எதை பற்றியும் கவலை இல்லை. அவர்கள், தினம், 'டிவி'யில் பொழுதை கழிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், நான் காதல் செய்த பெண் வீட்டில், அழுத்தம் கொடுக்க ஆரம்பித்து விட்டனர். நாங்கள், ஆறு ஆண்டுக்கு மேல் காதலித்து வருகிறோம். என் வாழ்க்கை மற்றும் காதல் இரண்டையும் விட தயாராக இல்லை.
இந்நிலையில் நான் என்ன செய்வது என்று, அறிவுரை கூறுங்கள் அம்மா.
— இப்படிக்கு,
உங்கள் மகன்.
அன்பு மகனுக்கு —
இந்த தலைமுறை பெற்றோர் பெரும்பாலும், மெழுகுவர்த்திகளாக குழந்தைகளின் எதிர்காலத்துக்காக உருகி, ஒளி கொடுக்கின்றனர்.
மகனோ, மகளோ, அவர்களது திருமணத்திற்கு பின் தங்களை பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு, எந்த பெற்றோருக்கும் இல்லை. 90 சதவீத பெற்றோர், மகன் - மகள் திருமணத்திற்கு பின், அவர்களுக்கு எதாவது ஒரு விதத்தில் உதவுபவர்களாக தான் இருக்கின்றனர்.
எனக்கு தெரிந்து எத்தனையோ அப்பாக்கள், மகனின் கல்விக்கடனை, தங்களது மாதாந்திர ஓய்வூதியத்திலிருந்து பணம் கட்டி அடைத்துக் கொண்டிருக்கின்றனர். விதிவிலக்காக இருக்கின்றனர், உன் பெற்றோர்.
பெற்றோரின் கடன் சுமையை அடைத்ததாக கூறுகிறாய். உன் அப்பா, வேலைக்கே போகாதவர் என்றால், நீ வேலைக்கு போகும் வரை, குடும்ப செலவை யார் செய்தது; அப்பாவுக்கு குடிப்பழக்கம் உண்டா; அப்பாவுக்கு தகுந்த அறிவுரையை, அம்மா கூறியதில்லையா, அம்மா எதாவது வேலை பார்த்தாரா...
அடுத்த நீ செய்ய வேண்டியவைகளை பட்டியலிடுகிறேன்...
1. உன் பெற்றோரை விட்டு பிரிந்து தனியே போ. பராமரிக்க ஆள் இல்லாவிட்டால், உன் பெற்றோர் சொந்தக்காலில் நிற்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். உன் அப்பா எதாவது ஒரு வேலைக்கு போயே தீர்வார். கடன்களை ஒரு தடவை அடைத்து விட்டாய். மீண்டும் கடன், உன் பெற்றோரால் தானே ஏற்பட்டது; அவர்களே அடைக்கட்டும். விலகி நின்று வேடிக்கை பார். பெற்றோருக்கு போன் கூட பண்ணாதே. ஒரு ஆண்டு அவர்களிடமிருந்து விலகி நில்.
2. நீ வேலைக்கு போகாமல் இருப்பது, பெரும் தவறு. குரூப் - 4 தேர்வுகள் எழுத, ஒரு பக்கம் தயாராகிக் கொண்டே, இன்னொரு பக்கம் கிடைத்த வேலைக்கு போ.
3. உன் காதலி, மேலும் ஓராண்டு காத்திருக்கட்டும். ஒரு பக்கம், உன் பெற்றோர் சொந்த காலில் நிற்கட்டும். இன்னொரு பக்கம், குரூப் - 4 தேர்வுக்காக முழு மூச்சாக படி. அரசு வேலை கிடைக்கும் வரை, பெண் வீட்டார், உன்னை பராமரிப்பரா என்ன?
4. ஆறு ஆண்டு காதல் ஜெயிக்க வேண்டும் தான். ஆனால், பெண் வீட்டார் உணர்ச்சி வேகத்தில் வேறு முடிவு எடுத்தால், சோகத்தில் மூழ்கிப் போய் விடாதே. காதலித்த பெண் கிடைக்காவிட்டால், அவளை விட பொருத்தமான பெண் கிடைப்பாள் என, அமைதி பெறு.
5. பெற்றோர் வாழ்க்கையிலிருந்து, ஒரு பாடம் பெறு. பொறுப்பற்ற பெற்றோருக்கு, அவர்கள் ஒரு உதாரணம். கடன் வாங்காமல் எளிய வாழ்க்கையை வாழ கற்றுக் கொள். ஆடம்பர வீண் செலவுகளை தவிர்.
6. உன் காதலியுடன் அவ்வப்போது தகவல் தொடர்பு வைத்துக் கொள். அவள் எதாவது உபயோகமான யோசனைகள் கூறினால், அவற்றை செயல்படுத்து.
7. உன்னுடன் படித்த நண்பர்களின் கைபேசி எண்களை எடுத்து பேசு. அவர்கள், 'கொரோனா' காலத்துக்கேற்ற எதாவது பணிகள் செய்து கொண்டிருக்கக்கூடும். அவர்களுடன் சேர்ந்து பணி செய்யலாம்.
8. பள்ளி மாணவர்களுக்கு நீ, 'ஆன்லைன்' வகுப்புகள் எடுக்கலாம். எனக்கு தெரிந்த பெண்மணி ஒருவர், ஒன்றிலிருந்து ஆறாம் வகுப்பு வெளிநாட்டு மாணவர்களுக்கு, தமிழ் சொல்லிக் கொடுத்து, மாதம், 20 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார்.
9. உன்னை விட சிக்கலான சூழலில் சிறைப்பட்டிருக்கும் எத்தனையோ பேர், கெட்டிக்காரத்தனமாக செயல்பட்டு, வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிகளை அடைந்திருக்கின்றனர்.
வாழும்வரை போராடு மகனே!
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.

