PUBLISHED ON : டிச 10, 2023

முழம் கூந்தலில்
மும்முழம் பூச்சூடியிருந்தாள் அவள்
மல்லிகை கனகாம்பரம் காக்கணாம் என
கதம்பச் சரமாய்
பின் முதுகில் விட்டிருந்தாள்!
வாசமில்லா மலர் நீ
வாயெல்லாம் சிரிப்பெதற்கு?
காக்கணாம் பூவிடம்
கதை கதைத்தது மல்லிகை
கனகாம்பரத்தில் என்ன வாழுதாம்?
அது காகிதப் பூவிற்கு சமமே
எள்ளி நகைத்தது காக்கணாம் பூ!
தன் குற்றம் மறைத்து
மாற்றானைக் காட்டுவது
கழுவில் ஏற்றப்பட வேண்டிய செயல் அல்லவா?
கருத்துரைக்க வந்தது கனகாம்பரம்!
உங்கள் பூசல் உங்களோடுவலிந்தென்னை வம்பிழுக்க வேண்டாம்
கனகாம்பரம் குரலில் கண்ணியம் தெரிந்தது!
ஈசலைப் போல ஒரு நாள் வாழ்வு உனக்கு
நான் என்ன அப்படியா?
காக்கணாம் பூவின் குரலில் கர்வம் தெரிந்தது!
ஒரு நாள் வாழ்வெனினும்
உன்னதமான வாழ்வெனக்கு
கடவுளிடம் பேச நானே
தட்டில் அர்ச்சனை பூவாகிறேன்
கழுத்தில் மணமக்களுக்கு
காதலாய் மணக்கிறேன்
பெருமிதத்தில்
கூடுதல் வாசம் தெரிந்தது மல்லிகையிடம்!
நான் மட்டும் என்ன
நீ உச்சாணி விலையில் ஏறி
உட்கார்ந்திருக்கும் வேளையில்
உன் பிரதிபலிப்பாய்தானே இருக்கிறேன்
நிதர்சனத்தை நிலைநாட்டியது காக்கணாம் பூ!
மெல்லினமாய் குறைந்தவள் நான்
வண்ணத்தில் மட்டும் அல்ல
எண்ணத்திலும் சிறந்தவள்
கடவுளிடம் போகாவிட்டால் என்ன
எனக்கான வாழ்வை
நான் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறேன்
புத்தரின் போதனைகளைப் படித்தது போல் பேசியது
காவி கனகாம்பரம்!
ஏம்மா வாடிப் போன பூவை
எதுக்கு இப்படி வண்டிக்கணக்காய் சுமக்கிறே?
வாழ்ந்து கெட்ட கிழவி ஒருத்தி
வார்த்தையால் கொளுத்திப் போட
கூந்தலில் ஆடிய பூக்களை
நொடியில் குப்பையில்
போட்டுப் போனாள் அவள்!
-இ.எஸ். லலிதாமதி, சென்னை.