PUBLISHED ON : ஜன 18, 2015

தலைவர் விடுதலையானதால், தர்மபட்டி மக்களுக்கு பெருத்த மகிழ்ச்சி ஒருபுறமிருந்தாலும், தங்கள் பங்கிற்கு தலைவருக்காக வேண்டிக் கொண்ட பிரார்த்தனையை செய்ய முடியாமல் போனது வருத்ததை தந்தது.
மழை, ஜோவென பெய்து கொண்டிருக்க, தலைவரை வரவேற்க தலைநகர் வந்திருந்த தர்மபட்டி மக்கள், உடனே ஊர் திரும்ப வேண்டிய சங்கடத்தில் இருந்தனர். மற்ற ஊர் கட்சிக்காரர்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாத நிலையால் ஏற்பட்ட சங்கடம் அது.
''தலைவர் விடுதலையாகணும்ன்னு நாடே பிரார்த்தனை, பூஜை, யாகம், தலைமுடி தானம், அன்னதானம்ன்னு எதை எதையோ செஞ்சி நன்றி காட்டியிருக்காங்க. நாம அத்தனை பேரும் போய், அந்த பிச்சுமணி ஐயர்கிட்டே கேட்டும், சட்டுன்னு உடனே ஒரு பூஜையையோ, யாகத்தையோ செஞ்சி முடிக்காம, 'புதுசா ஒரு ஹோமம் இருக்கு... அதை செஞ்சா ரொம்ப பலன் கிடைக்கும்'ன்னு சொல்லி குழப்பிட்டாரு. அதுக்கு ஏற்பாடு செய்றதுக்குள்ளே பெரும்பாடாய் போனது.
''இப்போ தலைவரே விடுதலை ஆயாச்சு. நம்ம ஊர் சார்பா ஒண்ணுமே செய்யலையேன்னு மனது பேஜார் படுது. ஊருக்கு போனதும், அந்த ஐயரை நாலு வார்த்தை 'நறுக்'குன்னு கேட்டாத்தான் மனசு ஆறும்,'' ஊர் தலைவர் சோமசுந்தரம் கோபப்பட்டார்.
''நான் அப்பவே சொன்னேன்... அந்த ஐயரு போகாத ஊருக்கு வழி சொல்றார்ன்னு! நீங்கதான் கேட்கலே. எல்லா ஊர்லேயும், எல்லா கோவில்லேயும் வழக்கமா செய்றது போல, மண் சோறு சாப்பிடறது, தீச்சட்டி ஏந்தறதுன்னு நாமளும் செஞ்சிருக்கலாம். நம்ம ஊருக்கு, அத்தனை செஞ்ச நம்ம தலைவருக்கு சோதனைன்னு வந்தபோது, ஒரு பிரார்த்தனை கூட செஞ்சி, நன்றி காட்ட விடாம செஞ்சிட்டாரே... அந்த ஐயரு. எதிர்க்கட்சி ஆளுங்க தூண்டிவிட்டு, இவர் சதி செஞ்சுட்டாரோன்னு எனக்கு டவுட்டு,'' என்று சோமசுந்தரத்தின் நண்பரான குருசாமியும் நொந்து கொண்டார்.
இப்படி தர்மபட்டியை சேர்ந்த அந்த கட்சி ஆட்கள் அனைவருக்குமே, ஐயர் மீது ஆத்திரமும், கோபமுமாக வந்தது.
தலைவர் மேலிருந்த அபரிமிதமான அபிமானத்தால் நாடே மனம் வருந்துவது போல் நாள்தோறும் பிரார்த்தனை, வேண்டுதல், அறப்போரென்று மிகுந்திருந்த போதுதான் சோமசுந்தரம் அழைக்காமலே, அவருடைய கட்சிக்காரர்கள் அனைவரும் கூடி, தங்கள் ஊரிலும், ஏதோ ஒரு வகை பிரார்த்தனை செய்ய முடிவெடுத்தனர்.
எந்த வகையில் அறப்போர் செய்யலாமென, ஆளாளுக்கு ஒவ்வொன்றை சொல்ல, சோமசுந்தரம் குழம்பி, முடிவெடுக்க முடியாமல் தவித்தார். எப்போதும், இதுபோல் ஊர்ப்பிரச்னை, தெய்வ காரியம் இவைகளில் சிக்கல் வரும்போது, கோவில் அர்ச்சகர் பிச்சுமணி ஐயரை கட்சி, ஜாதி பேதமில்லாமல் எல்லாரும் அணுகி, ஆலோசனை கேட்பது வழக்கம். அவர் தினமும் கோவிலுறை அம்மனுக்கு, ஆத்மார்த்தமாக பூஜை செய்வதால், அவருடைய வாக்கை, அருள் வாக்காகவே ஊர் மக்கள் மதித்து, அதன்படியே செய்வது வழக்கம்.
காலை, அம்பாளுக்கு பூஜை முடித்து, வீட்டிற்கு பிச்சுமணி ஐயர் வந்தபோது, சோமசுந்தரம் தலைமையில், ஊர் மக்கள் ஆயிரம் பேர் அவரை சந்திக்கக் காத்திருந்தனர்.
'வாங்கோ... நல்ல நேரத்திலே, நீங்கள் எல்லாம் வந்திருக்கிறதே நீங்க நினைச்சுட்டு வந்த காரியம் சுபமாக முடியும்ன்னு தோன்றது. என்ன பிரச்னை சொல்லுங்கோ...' என்று பிச்சுமணி ஐயர் ஆரம்பித்ததே மக்களுக்கு பெரிய ஆறுதல் தந்தது.
'உங்களுக்கே தெரியுமே சாமி. நம்ப தலைவர் எத்தனை உத்தமமானவரு... அவருக்கு இப்படி ஒரு சோதனை வரலாமா சொல்லுங்கோ... அவருக்காக, எங்க உசுரையும் கொடுக்க தயாரா இருக்கோம். ஊரெல்லாம் கூடி அவருக்காக பிரார்த்தனை செய்யலாம்ன்னு இருக்கோம். எந்த வகையிலே செய்யலாம்ன்னு சொன்னீங்கன்னா, எத்தனை செலவானாலும், கஷ்டப்பட்டாவது செய்யத் தயாராயிருக்கோம்...' என்று உணர்ச்சி வசப்பட்டவராய் சொன்னார் சோமசுந்தரம்.
'அடடா... வருத்தப்படாதீங்க. எப்போதும் மனப்பூர்வமா செய்யற கூட்டுப் பிரார்த்தனைக்கு பலனில்லாமல் போகாது. எல்லாருமா சேர்ந்து, கோவில் முன் பெரிய பந்தல் போட்டு உட்கார்ந்து, மனசை ஒருமுகப்படுத்தி தினமும், ஒரு மணி நேரமோ அல்லது அதிகமோ அம்பாளை நினைச்சு, தலைவர் விடுதலையாகணும்ன்னு வேண்டிக்கங்கோ. அதுவே போதும்...' என்றார்.
இதைக் கேட்டதும் யாருக்கும் திருப்தி ஏற்படவில்லை.
கூட்டமாக கூடி, கண்ணை மூடியபடி, கோவில் முன் உட்கார்ந்தால் அறப்போராட்டம் என்பதற்கு அர்த்தமில்லாமல் போய் விடுமே என்று, அவர்கள் சந்தேகப்பட்டனர். இத்தனை பேர் பொருளும், உழைப்பும் கொடுக்க தயாராயிருக்கும்போது, அதற்கு தீனி போடும்படியாக, தாங்கள் செய்யும் பிரார்த்தனை இருக்க வேண்டுமென்பது, அவர்களின் ஆசையாக இருந்தது.
'சாமி... நீங்க சொல்ற மாதிரி, ஆரவாரமில்லாம சும்மா உட்கார்ந்து பிரார்த்தனை செய்யுறதுலே, எங்க கட்சி ஆளுங்களுக்கு ஒப்புதல் இல்ல. அதனாலே, எங்க உழைப்பு தெரியுற மாதிரி, பிரார்த்தனை எடுப்பா இருக்கணும். ஒவ்வொரு ஊரிலே நடக்கிறதை, 'டிவி'யிலே பார்த்திருப்பீங்க. அதுபோல், நாலு பேர் பேசறா மாதிரி இருந்தா நல்லது...' என்று சோமசுந்தரம், ஐயரிடம் தயங்கித் தயங்கி கேட்டுக் கொண்டார்.
ஐயர் சற்றே யோசனை செய்தவர் போல் காட்டிக் கொண்டார்.
'எனக்கு இன்னிக்கு சாயங்காலம் வரை டைம் கொடுங்க. புத்தகங்களை பார்த்துட்டு, ஏதாவது பிரமாண்டமா செய்யலாமான்னு சொல்றேன்...' என்று, அவர்களை அனுப்பி வைத்தார்.
சாயங்காலம் ஆவலோடு சோமசுந்தரமும், குருசாமியும் ஐயரை காண வந்தனர்.
'சாஸ்திர புத்தகத்திலே தேடிப் பார்த்தேன். அந்த கால ராஜாக்களுக்கு இதுமாதிரி, சிரமங்கள் வந்தபோது, ஊர் மக்கள், 'பாதாள பத்ம யாகம்' என்று, ஒரு யாகம் செஞ்சிருக்காங்க. ஆனா, அதை இப்போ செய்யலாம்ன்னா, அது முடியாத காரியம்...' என்று பூடகமாக ஆரம்பித்தார்.
'ஏன் முடியாதுன்னு சொல்றீங்க... பணம் ரொம்ப செலவாகும்ன்னு நினைக்கிறீங்களா... இல்லே செய்றதுக்கு ஆள் கிடைக்காதுன்னு சொல்றீங்களா?' அவசரப்பட்டார் குருசாமி.
'அதெல்லாமில்லே... இந்த யாகத்தை செய்ய நூறு சாஸ்திரிகள் அவசியம். அவா எல்லாரும், பூமிக்கு அடியிலே உட்கார்ந்து, தாமரை புஷ்பங்களாலே யாகம் செய்யணும். நூறு சாஸ்திரிகளை வச்சு நானே செய்திடுவேன். இதற்கான செலவையும், நீங்க செய்வீங்கன்னு தெரியும். பிரச்னை என்னவென்றால்... இந்த ஹோமம் செய்ய வேண்டிய இடம் தான்...' என்றார்.
''ஏன் சாமி... சுத்தமான இடமா இருக்கணுமா... நம்ம கோவில் உள்ளேயே செஞ்சுடலாமே...'
'நூறு சாஸ்திரி உட்கார்ந்து செய்யற மாதிரி, நீள அகலத்துக்கு கோவில் உள்ளே இடம் இல்ல. அப்படியே இருந்தாலும், யாகத்துக்கு தேவையான ஆழத்திற்கு, கோவில் உள்ளே பள்ளம் தோண்ட முடியாது. அதனாலே தான் முடியாத காரியம்ன்னு சொல்றேன்...'
'எத்தனை நீள, அகல, ஆழம்ன்னு சொல்லுங்க; நாங்க இடத்தை தேடி தர்றோம்...' பரபரத்தார் குரு சாமி.
யாகத்திற்கு வேண்டிய இடத்தின் பரப்பளவு, ஆழங்களை குறித்துக் கொடுத்தார் பிச்சுமணி ஐயர்.
ஐயர் சொன்னது போலவே, கிராமத்தில் அந்த விஸ்தீரணத்தில், ஒரு வெற்று நிலத்தைத் தேடுவது கஷ்டமாகி விட்டது. விவசாய நிலங்களையெல்லாம் பாசன வசதி இல்லாததால், ரியல் எஸ்டேட்காரர்களுக்கு கொடுத்து, பிளாட் விற்பனை நடந்து கொண்டிருந்தது. தண்ணீர் கஷ்டத்திலும், சிரமப்பட்டு விவசாயம் செய்து கொண்டிருந்த மீதிப்பேர், தங்கள் நிலத்தை இதற்காக கொடுப்பர் என்று எதிர்பார்ப்பது நியாயமில்லை என, அறப்போராட்ட கமிட்டிக்கு தோன்றியது.
யாகத்திற்கு ஏற்ற இடத்தை முடிவு செய்ய, எல்லாரையும் கூட்டி பேசியபோது, ஊர்க்கோடியில் உபயோகமில்லாத அந்த இடம் தான், சரியான இடமாகத் தோன்றியது. புறம்போக்கு இடமாக இருந்ததால், எதிர்க்கட்சிகளும் தொல்லை தர வாய்ப்பில்லை.
ஐயரிடம் இடத்தைப் பற்றி சொன்னபோது, 'ஆஹா... பேஷா அங்கேயே செஞ்சுடலாம். ஆனா, புல்டோசர் அது, இதுன்னு கொண்டு வந்து இடத்தை தயார் செய்யறதை விட, நீங்க எல்லாருமா சேர்ந்து கடப்பாரை, மண்வெட்டியோட உங்க இஷ்ட தெய்வத்தை மனசுலே பிரார்த்தனை செஞ்சு, உங்க தலைவர் விடுதலைக்காக வேண்டிக்கிட்டே தோண்டினா தான் ரொம்ப விசேஷம். செய்ற யாகமும் முழுசா பலனளிக்கும்...' என்று கூறிவிட்டார்.
'என்னடா இது... சட்டுபுட்டுன்னு ஜே.சி.பி., ஒண்ணை கொண்டாந்து, மண்ணை வாரிடலாம்ன்னு நினைச்சா... ஐயரு இப்படி முட்டுக்கட்டை போட்டுட்டாரே...' என்று, முணுமுணுத்தபடி கட்சி இளவட்டங்கள், முழு மூச்சா தினமும் ஓயாமல் மண்ணை வெட்டும் பணியில் ஈடுபட்டனர். எல்லாரையும், சிவ... சிவ... என்றோ, கோவிந்தா, ராமா என்றோ, அல்லா, ஜீசஸ் என்றோ, சொல்ல வைத்திருந்தார் ஐயர்.
'ஐயரு நல்லா மாட்டிவுட்டு வேடிக்கைப் பாக்கறாருடா. எல்லா ஊர்லேயும் நடக்கற பிரார்த்தனை, நேர்த்திக்கடன்னு, 'டிவி'யிலே காட்றாங்க. நாம என்னடான்னா, இன்னும் எதுவுமே ஆரம்பிக்காம இருக்கோம். நேத்திக்கு வட்டச் செயலர், 'என்னய்யா உங்க ஊர்லே தலைவருக்காக வேண்டிட்டு, ஒண்ணுமே செய்யலையா?'ன்னு கேட்டபோது, ஏதோ மழுப்பலா பதில் சொல்லி தப்பிச்சுக்க வேண்டியதா ஆயிடுச்சு. அடுத்த வாரம், இந்நேரத்துக்கு தீர்ப்பு வந்துடும்...'
அவர் நொந்து கொண்டது போலவே, யாகம் செய்யும் இடம் தயாராவதற்கு முன், தீர்ப்பு சொல்லும் நாள் வந்துவிடவே, எல்லாரும் வேலையை அப்படியே போட்டுட்டு, தலைநகர் செல்ல வேண்டியதாயிற்று.
எல்லாருடைய வேண்டுதல்களுக்கும் தெய்வம் இசைந்தது போல, தலைவர் விடுதலையாகி விட்டார். கொட்டும் மழையில் பட்டாசு வெடித்து, ஸ்வீட் கொடுத்து, தலைநகரில் கொண்டாடிக் கொண்டிருந்த அக்கம் பக்கத்து ஊர்க்காரர்கள், தர்மபட்டிக்காரர்கள் ஒன்றுமே செய்யாததை ஜாடையாக குத்திக் காட்டி பேசியதால், சோமசுந்தரத்தோடு சென்றவர்கள் அங்கிருந்து உடனே கிளம்பி, ஊர் திரும்ப வேண்டியதாயிற்று.
ரயிலில், ஊர் திரும்பும் வழியெங்கும் மழையோடு, ஐயர் மீது வசைமழையும் பொழிந்தபடியே பயணம் தொடர்ந்தது. ரயில் நிலையத்திலிருந்து, நாலைந்து சுமோக்கள் இவர்களில் முக்கியமான சிலரை ஏற்றிக் கொண்டு ஊருக்குள் பறந்தது. ஊர் எல்லைக்குள் நுழைந்தபோது, ஒரு ஆச்சர்யம் நடந்தது.
எதிர்க்கட்சி ஏகாம்பரம் தலைமையில், அவர்கள் கட்சி ஆட்கள் மாலையும், கையுமாக இவர்களுக்காக யாகம் நடக்க ஏற்பாடு செய்த இடத்தில் காத்திருந்தனர். தோண்டப்பட்ட இடம், இரண்டு நாள் பெய்த மழையால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. அதன் கரையில், ஒரு பெரிய பேனர்... தலைவர் படத்துடன், கீழ்க்கண்ட வாசகங்களோடு பளபளத்து:
'தங்கத் தலைவரின் விடுதலைக்காக பிரார்த்தித்து மேற்கொள்ளப்பட்ட அறப்பணியில் வெட்டப்பட்ட குளம்!'
ஒன்றும் புரியாமல் சோமசுந்தரமும், குருசாமியும் காரிலிருந்து இறங்க, எதிர்க்கட்சி ஆட்கள் அவசர, அவசரமாக வந்து அவர்களுக்கு மாலை அணிவித்தது, மேலும் அவர்களை ஆச்சரியப்படுத்தியது.
''சோமு... மாற்றான் தோட்டத்துப் பூவுக்கும் மணம் இருக்கும்ன்னு சொல்றவங்க நாங்க. இப்போ, இப்படி ஒரு நற்பணி செஞ்சிருக்கிற உங்களை, பாராட்டாம இருக்க முடியலே. மத்த ஊர்க்காரங்க எப்படியெல்லாமோ, உங்க தலைவருக்காக எதை எதையோ செஞ்சிக்கிட்டு இருந்தப்ப, நம்ம ஊர்ல உங்களுக்கெல்லாம், இப்படி ஊர் குளத்தை சுத்தம் செஞ்சி, ஆழப்படுத்தணும்ன்னு தோணியிருக்கே... அதுவே பெரிய விஷயம். பல வருஷமா உபயோகமே இல்லாம போன குளம், இனிமே ஊர் மக்களுக்கு உபயோகப்படற மாதிரி இப்போ தண்ணீர் நிரம்பி வழியுது. அறப்போராட்டம்ன்னா இதுதான்னு, ஒரு முன் உதாரணமா உங்க கட்சி, இந்த ஊர்லே செஞ்சி காட்டியிருக்கு. இனிமே, நாங்களும் மக்கள் சக்தியையும், வேகத்தையும், வீணாக்காம இதுமாதிரி உபயோகமான அறப்போராட்டம் செய்யணும்ன்னு நினைக்கறோம்,'' என்றார்.
அசந்து போன கூட்டம், பிச்சுமணி ஐயர் வீட்டிற்கு நன்றி சொல்லச் சென்றபோது, பேனர்காரனுக்கு பணத்தை செட்டில் செய்து கொண்டிருந்த அவர், ஒரு நமுட்டுச் சிரிப்புடன் அவர்களை வரவேற்றார்.
அகிலா கார்த்திகேயன்
