sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஜூன் 16, 2013

Google News

PUBLISHED ON : ஜூன் 16, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள அம்மா—

நான் அரசு அலுவலகத்தில் நல்ல நிலையில் வேலை பார்த்துக் கொண்டு இருப்பவன். சரியான வேலை இல்லாததால் கல்யாணமே வேண்டாம் என இருந்த நான், தகுதிக்கேற்ற நல்ல நிலையான வேலை கிடைத்த பின், என் உடன் பிறந்த தம்பியின் வற்புறுத்தலால் (தம்பிக்கு திருமணம் ஆகி 11 வருடங்கள் கழித்து) திருமணம் செய்து கொண்டேன்.

என் தம்பி, விலாசம் இல்லாத குடும்பத்திற்கு விலாசம் கொடுத்தவர், நிர்க்கதியாக அல்லாடிக் கொண்டு இருந்த குடும்பத்தை தலைதூக்கி நிறுத்திய பெருமை இவருக்கு உண்டு. என் திருமணத்திற்காக உடல் உழைப்புடன், செலவும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்தவர் என் தம்பி.

என் மனைவி மூன்று பட்டங்கள் வாங்கியவர். நான் நான்கு பட்டங்கள் வாங்கியவன். இதை நம்பி, தன் மகனை என் வீட்டில் தங்கி படிக்க வைக்க கூறினார் என் தம்பி.

என் கடமை என்று கருதிய நான், என் மனைவி சம்மதத்துடன் நான் வேலை பார்க்கும் ஊரில் அவனை பள்ளியில் சேர்த்தேன்.

பள்ளியில் சென்று சேர்த்தது, யூனிபார்ம் வாங்கி வந்தது என அனைத்தையும் ஆசையுடன் செய்து வந்த என் மனைவி, இப்போது தலைகீழாக மாறி திட்டித் தீர்க்கிறாள். பரம்பரையை குறை கூறுதல், பிற கடுமையான வார்த்தைகளை திரும்ப திரும்ப கூறி, ஒரு ஹிஸ்டீரியா நோயாளி போல நடந்து கொள்கிறாள்.

'எனது அண்ணி, அண்ணன் படித்தவர்கள், அவர்களிடம் தனது மகன் இருப்பின் பண்டிதனாவான்' என எண்ணியே, என் தம்பி தன் மகனை இங்கு அனுப்பினார். அவனது படிப்பு செலவிற்காக பணமும் அனுப்பி விடுவார்.

படித்துக் கொண்டிருக்கும் ஒருவனை பாதியில் அனுப்புவதோ, ஹாஸ்டலுக்கு அனுப்புவதோ தின்ற சோற்றுக்கு செய்யும் துரோகம். ஏனெனில், என் தம்பி, என் படிப்பிற்காக கூட செலவு செய்தவர்.

இப்படி படித்த, மகா திமிர் பிடித்த ஒருத்தியை வைத்துக் கொண்டு, குடும்பம் நடத்தவா அல்லது வெட்டி எறிந்து விடவா? பெண்கள் அதிலும் படித்தவர்கள் இப்படி மகா மட்டமாகத்தான் நடந்து கொள்வரா? இப்படிப்பட்ட மகா கேவலமான பெண்கணை வைத்து, குடும்பம் நடத்துவது அவசியமா?

இவளுக்கு வேறு எவருடனும் கள்ளத் தொடர்பு இருக்கலாமா? அதனால் இதை ஒரு சாக்காக வைத்து பிரிந்து விட வேண்டும் என, எண்ணுகிறாளா? கூடுமான வரை பெண்ணினத்திற்கு வக்காலத்து வாங்காமல் பதில் கூறவும்.

இப்படிக்கு,

பெயர் வெளியிட விரும்பாத வாசகர்
.

அன்புள்ள சகோதரருக்கு—

உங்கள் கடிதம் பார்த்து மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்தேன். 'கூடுமான வரையில் பெண்ணினத்திற்கு வக்காலத்து வாங்காமல் பதில் கூறவும்' என எழுதியிருக்கிறீர்கள்.

நீங்கள் இக்கடிதத்தை எழுதும் போது அளவிட முடியாத டென்ஷனுடன் இருந்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. கொஞ்சம் மனதை சாந்தப்படுத்தி நடுநிலையாக இருந்து யோசித்தால் நான் கூறுவது புரியும்.

உங்களுக்கு, உங்கள் தம்பி மீது அளவிட முடியாத பாசம். தம்பியின் குழந்தை உங்களுக்குச் செல்லக் குழந்தை.

இருக்கட்டும்... இப்படி கொஞ்சம் மாற்றிப் போட்டுப் பாருங்கள்...

அதாவது, உங்கள் மைத்துனி - மனைவியின் தங்கையின் குழந்தையை, உங்கள் மனைவி தன்னுடன் அழைத்து வந்து வளர்த்தால்... நீங்கள் எத்தனை தான் பிரியமாக அதனிடம் நடந்து கொண்டாலும், ஓரொரு சமயம் குழந்தை மிகவும் படுத்தினால், சரியாக படிக்கா விட்டால் அல்லது உடம்பு சரியில்லாமல் படுத்தால், நீங்கள் உங்கள் மனைவியிடம் என்ன சொல்வீர்கள்?

'எதுக்காக இத்தனை சிரமம்? கஷ்டமோ, நஷ்டமோ அவங்கவங்க சரக்கு, அவங்கவங்க கிட்ட இருக்கிறது தானே நல்லது... பேசாம கொண்டு போய் விட்டுடு...'

உங்களால் வாய் விட்டுச் சொல்ல முடியும். உங்கள் மனைவியால் அப்படி சொல்ல முடியாது. அதுதான் உண்மை.

ஒரு குழந்தையை வளர்ப்பதற்கு மூன்று பட்டங்கள், நாலு பட்டங்கள் வாங்கிய நீங்களும், உங்கள் மனைவியும் தான் வேண்டும் என்று அவசியமில்லை.

படிக்காத பெற்றவர்கள் கூட பாசத்துடனும், கண்டிப்புடனும் ஒரு நல்ல குடிமகனை உருவாக்க முடியும்.

எத்தனைதான் உயிரைக் கொடுத்து மைத்துனர் மகனை வளர்த்தாலும் - அவன் விஷமம் செய்தால், சரியாகப் படிக்காவிட்டால் - உங்கள் மனைவி அழுத்தமாய் ஒரு வார்த்தை அதட்டிச் சொல்ல முடியாது; உரிமையுடன் இரண்டு தட்டு தட்ட முடியாது.

ஆரம்பத்தில் இதே பிள்ளைக்கு ஆசை ஆசையாக யூனிபார்ம் வாங்கி, பள்ளியில் சேர்த்து எல்லாம் செய்தவர்தானே உங்கள் மனைவி. இப்போது திட்டித் தீர்க்கிறாள் என்றால், அதற்கு காரணம் என்ன என்பதையும் நீங்கள் யோசிக்க வேண்டும்.

பெற்ற குழந்தை எத்தனை முரடாக இருந்தாலும் ஒரு தாய் சகித்துக் கொள்வாள். இதுவே அடுத்தவர் குழந்தை சாதுவாக உட்கார்ந்திருந்தாலும், சில சமயங்களில் அதன் மீது எரிச்சல் வரும்... இது உங்கள் மனைவி மட்டும் சொல்லும் வார்த்தை இல்லை; பொதுவான மனித இயல்பு.

அவளுடைய பக்கத்தில் நின்று பாருங்கள்...

இந்த குழந்தையால் கணவன் - மனைவிக்குள் இருக்கக் கூடிய அந்தரங்கங்கள் பாதிக்கப்படுவதாக அவள் நினைக்கலாம். ஏனெனில், உங்கள் தம்பியை விடவும் நீங்கள் மணவாழ்க்கைக்கு புதுசு. அவளிடம் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கலாம்.

திடீரென, தன் தாய் வீட்டுக்குப் போக நினைத்து, அதற்கு பள்ளியில் படிக்கிற பிள்ளை இடைஞ்சலாக இருப்பதாக நினைக்கலாம்.

உங்களுடன் சினிமாவுக்கோ, நண்பர்கள் வீட்டுக்கோ போக முடியாமல் இந்தப் பிள்ளைக்கு பரிட்சை சமயமாக இருக்கலாம்.

நமக்குன்னு ஒண்ணு பொறந்தாச்சுன்னா, அப்பத்தான் இதையெல்லாம் அனுபவிக்க முடியாது. இப்பவே பிடிச்சு நான் எதுக்காக இத்தனையும் தியாகம் செய்யணும்...

— இப்படியொரு நினைப்பு அவள் மனசில் எழுந்து, இதை வெளியே சொல்ல முடியாதபடி உங்களிடமுள்ள பயமோ, தயக்கமோ எதுவோ ஒன்று அவளைத் தடுத்து, அதன் பாதிப்பே இந்த எரிச்சலும், ஆத்திரமுமாக இருக்கலாம் அல்லவா?

உங்கள் தம்பியிடம் சொல்லுங்கள்... ஒரு பண்டிதன் உருவாக இன் னொரு பண்டிதன் தான் வளர்ப்புத் தந்தையாக இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை என்று.

அதை விட்டு அசிங்கமான, அருவெறுப்பான கற்பனைகளை எல்லாம் வளர்த்துக் கொள்ளாதீர்கள். அவள் உங்களுடன் பழகுவது, படுப்பது, இருப்பது எல்லாம் புனிதமான உறவின் அடிப்படையில்; அதைக் கொச்சைப்படுத்தாதீர்கள்.

இப்படிக்கு,

சகுந்தலா கோபிநாத்.






      Dinamalar
      Follow us