தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஏப் 27, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 27, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் வயது 35; என் மனைவி வயது, 30. எங்களுக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகின்றன. ஐந்து வயதில், ஆண் குழந்தை ஒன்று உள்ளது. எங்களுடையது காதல் திருமணம்; என் வீட்டாருக்கு பிடிக்கவில்லை என்றாலும், அவர்களே முன்னின்று நடத்தி வைத்தனர்.

திருமணத்திற்கு முன்பே, என் 25வது வயதில், நான், 'ஸ்கிசோபிரினியா' என்ற மனநோயால் பாதிப்புக்குள்ளானேன். என் அம்மா மற்றும் பாட்டிக்கு இந்நோய் உள்ளது. இருந்தும், நான் பாதிக்கப்பட்டதை என்னால் நம்ப முடியவில்லை. இப்படி ஒரு நோய் உள்ளது என்று, திருமணத்திற்கு முன் வரை, என் மனைவிக்கு தெரியாது.

நான் அவளுடன் பழக ஆரம்பித்த ஒரு வருடத்திலேயே, இந்நோய் என்னை பாதித்து விட்டது. ஆனால், திருமணத்திற்கு பின் தான், அவளுக்கு விஷயம் தெரிந்தது. அதை, அவளால் ஜீரணிக்க முடியவில்லை.

நான் வசதியான வீட்டு பையன்; அவள் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். அவள் வேலைக்கு செல்லவில்லை. என் தந்தைதான் குடும்பத்தை நடத்துவதற்கு, பண உதவி செய்து வந்தார். தற்போது, நான் ஓரளவு குணமடைந்து, மாதம்,௦ 20,000 ரூபாய் சம்பாதிக்கிறேன். ஆனால், என்னால் பழையபடி உற்சாகமாக இருக்க முடியவில்லை. அவ்வப்போது மன அழுத்தத்துக்கு ஆளாகிறேன். இதனால், என் மனைவியும், 'அப்செட்' ஆகி, ஏனோதானோவென்று குடும்பம் நடத்துகிறாள்.

மகனை சரியான நேரத்தில் குளிக்க வைத்து, சாப்பிட வைத்து, படிக்க செய்வது போன்ற வேலைகளை கூட செய்யாமல் இருக்கிறாள். இதனால், எங்களுக்குள் அடிக்கடி சண்டை வருகிறது. எங்கள் இருவரின் பிரச்னையால், என் மகன் வயதுக்கு மீறி சிந்தனை செய்து, எங்களுக்குள் மத்தியஸ்தம் செய்கிறான். அவன் மனநிலையும் பாதிப்படையுமோ என, பயமாக உள்ளது.

தற்போது நான் குணமடைந்து வருவதால், நான் விட்டு கொடுத்து போக நினைத்தாலும், அவளுடைய செயல்கள், என்னை எரிச்சல் அடைய செய்கின்றன. என் குழந்தை எங்கள் இருவரையும் பார்த்து, கத்துவதும், ஆர்வம் இல்லாமலும் இருக்கிறான். என் குழந்தை பாதிப்படையாமல் வளர, நானும், என் மனைவியும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என, எழுதுங்கள். அவள், 'அன்புடன் அந்தரங்கம்' பகுதியை விடாது படிப்பவள். அவளுக்கு புரியும்படியாக எழுதி, என் குழந்தையின் வாழ்வை சிறக்கச் செய்யுங்கள். எப்படியாவது என் குழந்தையை காப்பாற்றுங்கள்.

— உங்கள் பதிலை எதிர்பார்க்கும், அன்புச் சகோதரன்.

அன்பானவர்க்கு —

பிரச்னைகளை உள்ளடக்கிய உன் கடிதத்தை படித்தேன். மிக வெளிப்படையாக கடந்த, 10 ஆண்டுகளாக, 'ஸ்கிசோபிரினியா' (மனச்சிதறல்) என்ற நோயினால் பாதிக்கப்பட்டதாகவும், ஆனால், மருத்துவரின் ஆலோசனையின்படி, மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு, தற்போது குணமாகி, மாதம், 20 ஆயிரம் ரூபாய் சம்பாதித்து, குடும்பத்தை காப்பாற்றி வருவதாகவும் எழுதியிருப்பதைக் கண்டு மிகவும் மகிழ்ந்தேன்.

'உன் வியாதி, குடும்ப உறவுகள் மற்றும் குழந்தை வளர்ப்பு' போன்ற மூன்று முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு கேட்டிருக்கிறாய். முதலில் நீயும், உன் மனைவியும் இந்த மனச்சிதறல் வியாதியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

* மருந்து மாத்திரைகளை விடாமல் சாப்பிடுவதுடன், அவ்வப்போது மனநல மருத்துவரை அணுகி, மாத்திரையின் அளவுகளை, அவர் ஆலோசனைப்படி கூட்டியோ, குறைத்தோ சாப்பிட வேண்டும்.

* தயவு செய்து, எக்காரணத்தைக் கொண்டும் சாமியார் மற்றும் பூசாரியிடம் போவது, மந்திரிக்கிறது, தாயத்துக் கட்டுவது, மாந்தீரிகம் செய்வது, ஸ்பெஷல் பூஜை செய்வது என்றெல்லாம் செய்ய வேண்டாம். இவர்கள் எல்லாருமே உன் நிலையைப் புரிந்து, உன்னுடைய தன்னம்பிக்கையை இழக்கச் செய்து, பணத்தை பிடுங்க முயற்சி செய்வர்.

* 'பாட்டி, அம்மாவைத் தொடர்ந்து, எனக்கு வந்திருப்பதைப் போல், என் பையனுக்கும் இந்த வியாதி வருமா, இது பரம்பரை வியாதியா...' என்று கேட்டிருக்கிறாய். இதற்கு பதிலாக, 'இல்லை' என்று தான் கூறுகின்றனர் மனநல மருத்துவர்கள்.

* நோய் கண்டவருக்கு, நோய் வரும் முன்பு உள்ளவர்கள் தான், மனதில் பதிந்து இருப்பர். அதற்குப் பிறகு பழகியவர்கள் யாரும் மனதில் இருக்க மாட்டர் என்ற தவறான எண்ணத்தை, முதலில் கைவிட வேண்டும். ஏன் தெரியுமா?

கடந்த, 10 ஆண்டுகளாக நீ இந்த வியாதியால் அவதியுற்ற போதும், ஐந்தே ஆண்டுகள் ஆன, உன் குழந்தையைப் பற்றி கவலைப்பட்டு எழுதியிருக்கிறாய். இதன் மூலம், உனக்கு அனுதினமும் நடப்பவைகள் எல்லாம் மற்றவர்களுக்கு ஞாபகம் இருப்பது போல, உனக்கும் இருந்திருக்கிறது. எனவே, இது பற்றிய கவலை வேண்டாம்.

* இந்நோயினால் பாதிக்கப்பட்ட சிலருக்கு, சாதாரணமாக செக்ஸ் உணர்வுகளில், உறவுகளில் விருப்பம் இல்லாமல் இருக்கும். அதனால், இவர்களின் வாழ்க்கைத் துணை சற்றே மனவருத்தம் அடையலாம். இருப்பினும், சரியாக, தொடர்ச்சியாக மருந்து மாத்திரைகள் உட்கொண்டால், இது சரியாகி விடும்.

* நீ படித்திருக்கிறாய்; கை நிறைய சம்பாதிக்கிறாய், குடும்பத்தை காப்பாற்ற கடினமாக உழைக்கிறாய்... ஆக, கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது, நீ அறிவுத்திறனில் உயர்ந்த நிலையில் தான் இருக்கிறாய். உன்னால் மிக நிச்சயமாக எது சரி, எது தவறு என்று பாகுபடுத்தி சிந்தித்து செயல்படுத்த முடியும்.

உன் திருமண உறவுகள் பற்றி சில ஆலோசனைகள்...

* உன் மனைவியைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும். தன் கணவர் இப்படி ஒரு மன நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்று, மணமான பிறகு தெரிய வந்தால், எந்த மனைவிக்குதான் வருத்தம் இல்லாமல் இருக்கும். நல்லவேளை உன் தந்தை இவ்வளவு ஆண்டுகள் உங்களுக்கு பொருளாதார உதவி செய்திருக்கிறார். உன் மனைவியிடம், உன் தந்தையைப் பற்றி, அவர் செய்த உதவியைப் பற்றி அவளுக்கு புரியும்படி எடுத்துச் சொல். நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பாக, சண்டையிடாமல் இருந்தால்தான், இல்லற வாழ்வில், திருப்தியும், சந்தோஷமும் இருக்கும்.

* உன் மனைவியிடம் உன் செக்ஸ் தேவைகளை மனம் திறந்து பேசு. இது அவளின் தேவைகளை உன்னிடம் பகிர்ந்து கொள்ள ஏதுவாக இருக்கும். அவளது விருப்பத்தை நீ புரிந்து, அவளைத் திருப்தி படுத்து. கணவன் - மனைவி இருவரின் ஆரோக்கியமான உடல் உறவு, குடும்பத்தில் உள்ள பல பிரச்னைகளை சமாளிக்கும் நல்மருந்தாக இருந்திருக்கின்றன.

* காதலிக்கும் போது இருக்கும் நிலைமையே வேறு. நடைமுறை, எதார்த்தம் என்று வரும்போது தான், நம்மால் வாழ்க்கையை புரிந்து கொள்ள முடிகிறது. இதை நீ முதலில் உணர வேண்டும். உன் மனைவிக்கும் எடுத்துச் சொல்லி, புரிய வைக்க வேண்டும். காதல் திருமணம் என்பது, புரிந்து கொண்டு திறம்பட வாழ்வது. புரிகிறதா!

உன் மூன்றாவது பிரச்னை உன் மகனைப் பற்றியது...

* பெற்றோர் தான் குழந்தைகளின், 'ரோல் மாடல்கள்' என்பதை, நீங்கள் இருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

* நீ நினைப்பது போல, 'பரம்பரை' காரணமாக, உன் குழந்தைக்கு இந்த மனவியாதி, வர வாய்ப்புகள் இல்லை. ஆனால், அதிகமாக கோபப்படுவது, சண்டையிடுவது, பேசாமல், 'உம்'மென்று இருப்பது போன்ற உங்களின் நடத்தை காரணமாக, அந்த பிஞ்சு மனது பாதிக்கப்படலாம். இதன் காரணமாக, பிற்காலத்தில் குழந்தையும் மனவியாதியால் அவதிக்குள்ளாகும் வாய்ப்புகள் அதிகம்.

தம்பதிகள் ஒருவர் மேல் ஒருவர் காட்டும் அன்பும், பொறுமையும், சிநேகமும் தான், பிள்ளைகளிடம் எதிரொலித்து, அவர்களை, மன ஆரோக்கியம் நிறைந்த குழந்தைகளாக மிளிர வைக்கும். எனவே, குழந்தை வளர்ப்பில், நீங்கள் இருவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

* இத்தனை ஆண்டுகள் உன் பெற்றோர் உன்னை கண்ணும் கருத்துமாக கவனித்து, ஆளாக்கிய மாதிரி, நீயும், உன் மனைவியும் உங்களின் குழந்தையை அன்பாக வளர்ப்பது கடமை.

இவைகளையெல்லாம் உன் மனைவியிடம் அன்பாக எடுத்துச் சொல்லி, இருவரும் உங்களின் குழந்தையை, வருங்கால இந்தியாவை வளப்படுத்தும் குழந்தையாக மாற்ற முயலுங்கள்.

என்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us