தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : பிப் 18, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 18, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவுக்கு —

என் வயது, 22; பெற்றோருக்கு ஒரே மகள். கல்லுாரியில் படித்த போது, ஒருவனை காதலித்தேன்; அவனும் காதலித்தான். 'படித்து முடித்து, நல்ல வேலையில் சேர்ந்த பின், திருமணம்...' என்று கூறினான்; அதுவரை காத்திருப்பதாக கூறினேன். என் பெற்றோரிடமும் விஷயத்தைச் சொன்னேன். 'பொறுப்பான பிள்ளையாக இருக்கிறானே, அவன் விருப்பப்படியே நல்ல வேலையில், 'செட்டில்' ஆன பின் திருமணம் செய்து வைக்கிறோம்...' என்று கூறினர். அவனுக்கு ஒரு தங்கை இருக்கிறாள்; அவளது திருமணம் முடிந்த பின், திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினான்.

பட்டப் படிப்பு முடித்து, மேல்படிப்புக்காக வேறு மாநிலத்துக்கு சென்றான், காதலன். கொஞ்ச நாள், பாட்டி வீட்டில் இருக்க கிராமத்திற்கு சென்று விட்டேன். பாட்டி வீடு, பெற்றோர் வீடு என, மாறி மாறி இருந்து வந்தேன். அவ்வப்போது போன் செய்வான்.

அவனும் படித்து முடித்து, அதே மாநிலத்தில், நல்ல வேலையில் சேர்ந்தான். 'தனியாக வீடு எடுத்து தங்கி, சமைத்து சாப்பிடுகிறேன்; தங்கையின் திருமணத்திற்கு பணம் சேர்க்க வேண்டும்...' என்று கூறினான். அவனது பொறுப்புணர்ச்சியை எண்ணி மகிழ்ந்தேன்.

ஒரு முறை, என் பாட்டி வீட்டுக்கு வந்து சந்தித்தான். வருங்கால மாப்பிள்ளை தானே என்று, பாட்டியும் அவனை வீட்டில் தங்க அனுமதித்தாள். இரண்டு நாள் பாட்டி வீட்டிலேயே தங்கியிருந்து, சமயம் கிடைக்கும் போதெல்லாம் என்னை அனுபவித்தான்.

சிறிது நாட்களுக்கு பின் போனில் பேசுவதை தவிர்த்தான். வேலை பளுவாக இருக்கும் என்று விட்டு விட்டேன். ஒருமுறை நானே தொடர்பு கொண்டபோது, தங்கையின் திருமண ஏற்பாடு நடந்து வருவதால், பிசியாக இருப்பதாக கூறினான்.

ஒரு முறை பெற்றோர் வீட்டிற்கு வந்த போது, அவனுக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்திருப்பதாக தகவல் கிடைத்தது.

என் தந்தை சென்று விசாரித்தபோது, 'செல்வந்தர் வீட்டுப் பெண், அவர்களாகவே முன் வந்து திருமணத்திற்கு விருப்பம் தெரிவித்தனர்...' என்று கூறி, என் தந்தையை அவமானப்படுத்தி அனுப்பி விட்டான்.

இந்த அதிர்ச்சியிலேயே இறந்து விட்டார், தந்தை. தாய் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். என்ன செய்வது என்று தெரியவில்லை. அவனுடன் அளவுக்கு மீறி பழகியது என் குற்றம்; அவனது நயவஞ்சகம் இப்போது தான் புரிகிறது.

தந்தை பார்த்த அலுவலகத்தில் எனக்கு வேலை கொடுத்துள்ளனர்; எப்படியோ முயன்று மனதை தேற்றினாலும், நிம்மதி இல்லை. தந்தையின் இறப்புக்கு நானே காரணமாகி விட்டேன் என்ற குற்ற உணர்ச்சி, நிம்மதி இழக்கச் செய்கிறது. இனி, என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் அம்மா!

- இப்படிக்கு, அன்பு மகள்.

அன்பு மகளுக்கு -

கடல் குளியல் போன்றது, காதல். கொஞ்சம் கவனக்குறைவாய் இருந்தாலும், அலைகள் அடித்துக் கொண்டுபோய் கடலின் அடிமடி சேர்த்துவிடும். காதலில் ஈடுபட்டு வெற்றி பெறுவதும், விவசாயம் செய்து லாபகரமான மகசூல் காண்பதும் அரிதான விஷயம்.

நயவஞ்சகமும், நம்பிக்கை துரோகமும் திட்டம் போட்டு நிகழ்த்தப்படுவது அல்ல. அது, உடனடி சுயநல தேவைக்கு ஏற்ப அரங்கேறுகிறது. படிக்கும்போது உன்னை காதலித்தான் உன் காதலன். அப்போதைய அந்தஸ்துக்கு நீ பொருத்தமானவளாய் பட்டிருக்கலாம்; நல்ல வேலைக்கு சென்று, கை நிறைய சம்பாதித்து, தங்கையை கட்டிக் கொடுத்த பின், உன் காதலனின் அந்தஸ்து கூடி விடவே, அவனது, சந்தை மதிப்புக்கு, நீ பொருத்தமாய் இல்லை; அதனால், உன்னை கை கழுவி விட்டான். கையில் காசு குறைவாய் இருந்தால், டவுன் பஸ் பயணம், காசு எக்கச்சக்கமாய் இருந்தால், விமானப் பயணம். இதுதான், பெரும்பாலான ஆண்களின் மனோபாவம்.

காதலனை முழுதாய் நம்பி, அவனிடம் உன்னை இழந்தது நீ செய்த பெருந்தவறு. உன் பெற்றோர், சொந்த பந்தங்களின் பலவீன புள்ளிகளை ஆராய்ந்து தெரிந்து கொண்டான் உன் காதலன்.

'காக்கை உட்கார பனம் பழம் விழுந்தது' போன்றது உன் தந்தையின் மரணம். அதற்காக, நீ குற்ற உணர்ச்சியில் தத்தளிப்பது தேவையற்றது. உன் தந்தையின் வேலை உனக்கு கிடைத்திருக்கிறது; சொந்த காலில் நிற்கிறாய்; பொருளாதாரத்தில் சுதந்திரம் அடைந்து விட்டாய். மன உளைச்சலுக்கு ஆளான உன் தாய்க்கு தேவைப்படும் ஆறுதலை கூறு. காதலில் தோற்றுப் போனதை, 'டெங்கு' காய்ச்சலில் இருந்து குணமானதாக பாவி.

மேட்ரிமோனியல் மூலம் வரன் தேடு. லட்சக்கணக்கான ஆண்கள் கொட்டிக் கிடக்கின்றனர். உனக்கு பொருத்தமான வைரத்தை தேர்ந்தெடு. நீ திருமணத்திற்கு முன் எப்படி இருந்தாய் என்பது முக்கியமல்ல; திருமணத்திற்கு பின், உன் கணவனுக்கு விசுவாசமாய் இருப்பதே முக்கியம்.

மாஜி காதலனின் கைபேசி எண் இருந்தால் அழித்து விடு; உன் கைபேசி எண்ணையும் மாற்று. எந்த ஒரு ஆண் மகனாவது திருமணத்திற்கு முன், பிற பெண்களுடன் உறவு கொண்டதை குற்ற உணர்ச்சியாய் கருதுகிறானா... பெண்கள் மட்டும் ஏன் குற்ற உணர்ச்சியை ஆயுளுக்கும் தலையில் வைத்து சுமக்க வேண்டும்!

நீ பொருத்தமானவனை மணந்து, ஆனந்தமாய் வாழ்ந்தால், அது, உன் தந்தையின் ஆன்மாவை சாந்தப்படுத்தும்.

விழுவது எழுவதற்கே; அசிங்கத்தை மிதித்து விட்டால், காலை வெட்ட முடியாது. காலை கழுவி துடைக்க வேண்டியது தான். செய்த தவறுக்கு இறைவனிடம் சரணாகதி அடைந்து, பாவ மன்னிப்பு பெறு. உனக்கு திருமணமாகி, மகிழ்ச்சியாக வாழ, தில்லை நடராஜரை வேண்டி வணங்குகிறேன்.

என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us