PUBLISHED ON : ஏப் 05, 2020

அன்பு மகளுக்கு —
நான், 70 வயது மூதாட்டி. கணவர், கடந்த ஆண்டு, புற்றுநோயால் இறந்து விட்டார். எனக்கு மூன்று பிள்ளைகள். மூவருக்கும் திருமணமாகி, குழந்தைகள் உள்ளனர்.
மூவரும் ஒரே வீட்டில், தனித்தனி, 'போர்ஷனில்' வசிக்கின்றனர். அவர்கள் பாதுகாப்பில் நானும் அங்கு உள்ளேன். நான் இருக்கும் இடத்திற்கே மூன்று வேளையும் சாப்பாடு வந்து விடுகிறது. இந்த விஷயத்தில், நான் கொடுத்து வைத்திருந்தாலும், தனிமை என்னை மிகவும் வாட்டுகிறது.
யாருக்கும் உபயோகம் இல்லாமல் இருக்கிறோமோ என்ற எண்ணம், என்னை கொல்கிறது. நாள் முழுவதும் சும்மாவே இருந்தால், நோய்க்கு இடமளிப்பது போல் ஆகிவிடுமே என்று, கிடைக்கும் துண்டு துணிகளில், கவுன் மற்றும் பாவாடை தைத்து, அருகில் உள்ள அனாதை ஆசிரம குழந்தைகளுக்கு கொடுத்து வருகிறேன். அப்படியும் பொழுது போகவில்லை. யாராவது அன்பாக, ஆதரவாக பேச மாட்டார்களா என்ற ஏக்கம் ஏற்படுகிறது.
கணவரின் ஓய்வூதியம், 1,000 ரூபாய் வருகிறது. மருத்துவ செலவு, 5,000க்கு மேல் ஆகிறது. பிள்ளைகளை கஷ்டப்படுத்த மனம் வரவில்லை. ஒரே வீட்டில் இருந்தும், தனியாக ஒதுக்கி வைத்தது போல் இருக்கிறது.
மருமகள்களுக்கு கூடமாட உதவி செய்து, அவர்களுடன் பேசி மகிழ விரும்புகிறேன். ஆனால், அவர்கள் என் ஏக்கத்தை புரிந்து கொள்ளாமல், 'ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்...' என்று கூறி, தனிமைப்படுத்துகின்றனர்.
எனக்கு ஆதரவாக சில வார்த்தைகளை கூறி, கடிதம் எழுது மகளே!
— இப்படிக்கு,
அன்பு அம்மா
அன்புள்ள அம்மாவுக்கு —
இந்தியாவில், 60 வயதை தாண்டிய முதியோர், 30 கோடி பேர் உள்ளனர். 70 வயதான நீங்கள், மனச்சோர்வு அல்லது மறதி நோயால் பாதிக்கப்படாமல் இருப்பது, இறைவன் கொடுத்த நன்கொடை.
கீழ்க்கண்ட விஷயங்களை செய்து, உங்கள் தனிமை துயரத்தை போக்கலாம்...
* ஊரில், உங்கள் வயதொத்த பெண்மணிகளை தேடி பிடித்து, நட்பு பாராட்டுங்கள். 10 - 20 முதியோர்கள், உங்கள் குழுவில் இருக்கட்டும். தினமும், காலை - மாலை, 45 நிமிடம், குழு உறுப்பினர்களுடன் ஊர், உலக கதை பேசியபடி நடைபயிற்சி மேற்கொள்ளலாம். வாழ்வின் குறைகளை பேசாமல், நிறைகளை பேசுவது உத்தமம்
* வீட்டை சுற்றி இடமிருந்தால், வேப்ப மரம், முருங்கை, எலுமிச்சை மற்றும் மா மரம் நட்டு, தினமும் அதை பராமரிக்க நேரத்தை செலவழிக்கலாம். இடம் இல்லாவிடில், தொட்டிகளில் சின்ன சின்ன செடிகளை வளர்க்கலாம்
* வாசிக்கும் பழக்கம் இருந்தால், ஏதாவது ஒரு நாவலை தினமும் படிக்கலாம். படித்து முடித்ததும், அதை, வாசிப்பு பழக்கமுள்ள குழு உறுப்பினர்களுக்கு கொடுக்கலாம்
* நினைவு தெரிந்த நாளிலிருந்து, 70 வயது வரை எடுக்கப்பட்ட, உங்கள் தொடர்பான புகைப்படங்களை வரிசைப்படுத்தி, நினைவு கூர்ந்து மகிழலாம். முக்கியமான புகைப்படங்களை, கண்ணில் படும்படி வைத்து, பழைய நினைவுகளை அசை போடலாம்
* ஆண்டுக்கு இருமுறை, குழு உறுப்பினர்களுடன் ஆன்மிக சுற்றுலா சென்று வரலாம்
* பொழுது போக்காய் செய்யும் தையலை, தொழிலாக மாற்றி வருமானம் பார்க்கலாம். அதில், உங்கள் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம்
* மனதுக்கு பிடித்த இசையை கேட்கலாம். முடிந்தால், செல்லப் பிராணியான
நாய் வளர்த்து, மன அமைதி பெறலாம்
* மகன், மருமகள்கள் மற்றும் பேரன், பேத்திகள் நல்லவர்கள். அவர்கள், உங்களை பராமரித்து, வேளாவேளைக்கு உணவும் தருகின்றனர். அவர்கள் வந்து உங்களுடன் பேசட்டும் என்று இருக்காமல், நீங்கள் சென்று அவர்களிடம் அவ்வப்போது பேசலாம்
* 'இன்றைக்கு நான் சமைக்கிறேன்...' என, அனுமதி பெற்று, சமைத்து, மகன்கள் குடும்பத்தாருக்கு பரிமாறி அசத்தலாம்.
70 வயதுக்கு மேல் ஒவ்வொரு நாளும், இறைவன் கொடுத்த, 'போனஸ்' என்று கருதி, வாழ்க்கையை குறை சொல்லும் மனோபவத்துடன் அணுகாமல், புன்னகையுடன் ஏற்றுக் கொள்ளலாம்
* வாரம் ஒரு மகனுடன், பழங்கதை பேசி, உறங்கலாம்
* மருமகள்களை செல்லமாக அழைத்து, பரவசப்படுத்தலாம். நாட்டு வைத்தியம், சமையல் குறிப்பு மற்றும் நம் சம்பிரதாயங்களை பற்றி சொல்லிக் கொடுக்கலாம்
* கணவரின் ஓய்வூதியம் வந்த அன்று, பேரக் குழந்தைகளுக்கு தேவையான பென்சில், ரப்பர் வாங்கிக் கொடுக்கலாம்
* 70 - 80 வயது வரை, 10 ஆண்டு திட்டம் வகுத்து, அதில், பாதியையாவது செயல்படுத்த பாருங்கள்
* எனக்கு தெரிந்த, 86 வயது, முகநுால் நண்பர் ஒருவர், ஆண்டுதோறும் இந்தியா முழுக்க சென்று, புகைப்படங்களை எடுத்து பதிவு செய்வார். அது மாதிரி ஏதாவது ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். வாழ்த்துக்கள் அம்மா.
— என்றென்றும் அன்புடன்
சகுந்தலா கோபிநாத்.
