தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : செப் 06, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 06, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மா,

என் வயது: 28. கணவர் வயது: 30. மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. அப்பா இல்லாத பெண். மிகவும் சிரமப்பட்டு திருமணத்தை நடத்தினார், அம்மா.

புகுந்த வீட்டினர் யாரும் அன்பாகவும், அனுசரணையாகவும் நடந்து கொள்ள மாட்டார்கள். என்னையும், என் குடும்பத்தையும் எப்படியெல்லாம் ஏமாற்றி உள்ளனர் என்பதை, அங்கு சென்ற பின் தான் தெரிந்தது.

திருமணம் முடிந்து மூன்றே மாதத்தில், நான் எடுத்து சென்ற

சீர் வரிசை, நகை என, எல்லாவற்றையும் விற்று விட்டனர். அதோடு, கர்ப்பிணியான என்னை பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.

மேலும், திருமணத்திற்கு முன்பே, திருமண செலவுக்காக, என்னிடம் லாவகமாக பேசி, கையெழுத்து பெற்று, தெரிந்தவரிடம், வட்டிக்கு பணம், இரண்டு லட்சம் வாங்கியிருக்கிறார், கணவர். வட்டிக்கு பணம் வாங்கிய விஷயமே, என் குடும்பத்துக்கு இதுவரை தெரியாது.

இப்போது, ௫,௦௦௦ மாத சம்பளத்துக்கு, என் இரண்டு வயது பெண் குழந்தையை அம்மாவிடம் விட்டு விட்டு, வேலைக்கு சென்று, வட்டி கட்டி வருகிறேன்.

கணவரிடமிருந்து அப்பணத்தை எப்படி மீட்பது; கணவர் எந்த வகையிலும் சமாதானத்துக்கு வராததால், விவாகரத்து செய்து விடலாமா... என் நகை, சீர் வரிசை எல்லாம் திரும்ப வருமா...

நல்ல ஆலோசனை தாருங்கள் அம்மா.

இப்படிக்கு,

உங்கள் மகள்.


அன்பு மகளுக்கு,

பணவெறி, பூமிப்பந்தில் தலை விரித்தாடுகிறது. இரு பாலரில், ஆண்களுக்கு பண வெறி, மிகமிக அதிகம். ஒரு வீட்டில் ஆணாக பிறந்தவன், சகோதரிகளை விட, கூடுதல் உணவையும், படிப்பையும், சொத்தையும் தன் பங்காக எடுத்துக் கொள்கிறான்.

ஆணுக்கு அதிகம் சிரமப்பட்டு படிக்காமல், பட்டம் பெற வேண்டும்;- அதிகம் உழைக்காமல் சம்பளம் பெற வேண்டும். அவன் குரங்காக இருந்தாலும், உலகப் பேரழகி மனைவியாக வந்து வாய்க்க வேண்டும்.

பொதுவாக, ஆண்களுக்கு திருமணம் என்பது, ஏ.டி.எம்., கார்டு மாதிரி.

மனைவி குறைந்தபட்சம், 240 கிராம் தங்கம் எடுத்து வரவேண்டும். இரண்டு சக்கர வாகனமோ, நான்கு சக்கர வாகனமோ, மாமனார் பரிசாக கிடைத்திட வேண்டும். ௩௦ ஆயிரம் சம்பளம் பெறும் வேலையில், மனைவி இருக்க வேண்டும். அவள் வழியாக நான்கைந்து, 'லோன்'கள் எடுத்து, பணத்தை, 'ஸ்வாஹா' பண்ண வேண்டும்.

அவளின் வழி, திகட்ட திகட்ட தாம்பத்யம் வேண்டும். குழந்தைகளை பெற்று வளர்த்து கொடுக்க வேண்டும். மாமியாருக்கும், நாத்தனாருக்கும் கொத்தடிமையாக இருக்க வேண்டும்.

இத்தனையும் கிடைத்தாலும் திருப்திபடாமல், பக்கத்து இருக்கை அலுவலகப் பெண்ணுக்கு வலை வீசுவான், ஆண். உன் கணவன், கெட்ட ஆண்களில் மிகமிக கெட்டவன்.

திருமணமாகி போகும் பெண்களுக்கு, பொதுவான எச்சரிக்கையை விடுக்கிறேன்...

நிச்சயதார்த்தத்துக்கு பின்னோ, திருமணமான முதல் ஐந்து ஆண்டுகளுக்கோ, கணவனுக்கு நேரடியாக எந்த கடனும் பெற்று தந்து விடாதீர்கள் அல்லது அவன் வாங்கும் கடனுக்கு, ஜாமின் கையெழுத்து போட்டு விடாதீர்கள்.

திருமணமான முதல் நாளில் இருந்தே, 'நான் ஒரு கறார் பேர்வழி; பண விஷயத்தில் எளிதில் ஏமாற மாட்டேன்...' என்ற விஷயத்தை, கணவனிடமும், அவன் வீட்டாரிடமும் வெளிப்படுத்த வேண்டும்.

கழுத்தில், காதில், கைகளில் கிடக்கும் நகையை விற்கவோ, அடகு வைக்கவோ ஒரு நாளும் அனுமதிக்க மாட்டேன் என, பிடிவாதமாக இருக்க வேண்டும். மனைவி அப்பாவி அல்ல, அவள் ஒரு உஷார் பார்ட்டி என, அப்பட்டமாக தெரிந்தால், கணவனோ, அவன் வீட்டாரோ எளிதில் ஏமாற்ற துணிய மாட்டார்கள்.

மொத்தத்தில், தங்களை சுற்றி ஒரு நெருப்பு வளையம் இட்டுக் கொள்ள வேண்டும், பெண்கள்.

இனி நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்...

* இரு வீட்டு பெரியவர்களை வைத்து பேசி, கணவன் வீட்டார் விற்ற சீர்வரிசை நகைகளை திரும்ப பெற முயற்சிக்க வேண்டும்

* கணவன் வாங்கிய கடன், உன் பெயரில் வாங்கப்பட்டதா அல்லது ஜாமின் கையெழுத்து போட்டாயா... எதுவாக இருந்தாலும், 'என்னை ஏமாற்றி வலுக்கட்டாயப்படுத்தி, கணவன் கையெழுத்து வாங்கினான். இந்த கடனுக்கும், எனக்கும் சம்பந்தமில்லை. இனி வட்டி கட்ட மாட்டேன். பணத்தை என் கணவனிடம் வசூலித்துக் கொள்ளுங்கள்...' எனக் கூறு

* மகளிர் காவல் நிலையத்தில், கணவன் மீதும், அவன் வீட்டார் மீதும், வரதட்சணை புகார் செய். நகையை திரும்ப கொடுத்தால், ஜாமின் கையெழுத்தை ரத்து செய்தால், புகாரை, 'வாபஸ்' பெறுவதாக கூறு. எளிதில் விலை போகாத ஒரு திறமையான வக்கீல் மூலம், புகாரை தாக்கல் செய்

* குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி, மனு தாக்கல் செய்

* அம்மா வீட்டில் தங்கி, உன் பெண் குழந்தையை வளர். தொலைதுார கல்வி இயக்ககம் மூலம் மேற்கொண்டு படி. குறைந்தபட்சம் 15 ஆயிரம் - -20 ஆயிரம் சம்பளம் கிடைக்கும் பணிக்கு போ

* காவல் நிலையம் மூலம், நீ இழந்த பொருட்களையும், நீதிமன்றம் மூலம், கணவனிடமிருந்து விவாகரத்தும் பெறு. உயர்கல்வி பயின்று, கூடுதல் சம்பளம் கிடைக்கும் பணிக்கு போய், உன் வாழ்க்கையை பலப்படுத்திக் கொள்

* மறுமணம் உடனே வேண்டாம். தகுந்த வரன் கிடைக்க காத்திரு. குடிக்காத, உன் சம்பளத்தை சார்ந்திராத ஒரு ஆண் மகன் கிடைத்தால், மறுமணம் செய்து கொள்.

கணவன் உன்னை என்ன வகை ஆயுதம் எடுத்து தாக்குகிறானோ, அதைவிட வலிமையான ஆயுதம் எடுத்து, அவனை திருப்பித் தாக்கு. வெற்றி உனதே!

என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us